December 25, 2013

பிரபாகரன் வாழ்வும் மரணமும் -புத்தகம் பற்றிய பேச்சு





அண்மையில் ஈழம் தொடர்பாக ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுமாறு நம் நண்பர்களிடம் கேட்டு இருந்தேன். அதற்க்கு முருகன் அவர்கள் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.


கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தம் மக்களின் நலனுக்காக போராடி வந்த பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை அவரிடம் நெருங்கிய மக்களுக்கு மட்டுமே தெரியும் .ஆனால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை . எனவே இந்த நூல் ஈழம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் மற்றும் சில மூத்த போராளிகள் சொன்ன தகவல்களில் இருந்து எழுதப்பட்டுள்ளது என இதன் ஆசிரியர் ராகவன் முன்னுரையிலேயே சொல்லி விட்டார் .


பிரபாகரனின் இளம் பிராயத்திலிருந்து இந்நூல் தொடங்குகிறது. S/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை யாக இருந்த அவர் விடுதலை புலிகளின் தலைவராக மாறிய வரலாற்றை கால நிகழ்ச்சிகளின் ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறார் ராகவன்.

தமிழரசு கட்சியின் அறப்போராட்ட வழியில் நம்பிக்கை இழந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து இளம் வயதில் ஆல்பர்ட் துரையப்பாவை சுற்று கொன்றதில் ஆரம்பிக்கிறது இவரின் பயணம். பின் தமிழகத்துக்கு தப்பி வந்தது,புலிகள் அமைப்பை ஆரம்பித்தது ,ஆயுத தேடலுக்காக வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டது என அடுத்தடுத்த அத்தியாயங்கள் நிறைகின்றன.ஆளில்லா விமானத்தை வெடிக்க செய்து அதன் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க செய்தார்.

இலங்கையில் பல்வேறு போராட்ட குழுக்கள் இருந்தாலும் அவர்களுடன் பிரபாகரன் எவ்வாறு வேறு பட்டார் என்பதை உணர முடிந்தது. மற்ற குழுக்கள் தங்கள் விடுதலையில் இந்தியாவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என நம்பிய காலத்தில் அவர் மட்டும் இந்தியாவின் உதவியை நம்பாமல் இருந்திருக்கிறார்.

எதிரிகளால் ஏற்பட்ட காயங்களை விட நம்பிக்கை துரோகம் செய்தவர்களால் ஏற்பட்ட காயம் அவரை எங்கனம் பாதித்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தங்களின் உறைவிடத்தை தீர்மானித்தது ,ஆயுத கொள்முதல் முறை ,மற்ற நாட்டு போராட்ட முறையை பின்பற்றாமல் தனக்கு தெரிந்ததை தன் குழுவுக்கு போதித்து அவர்களை நடத்தி சென்றது போன்றவற்றில் இருந்து பிரபாகரனின் தெளிந்த அறிவும் கூறிய சிந்தனையும் புலப்படும் .

இதற்க்கு இடையில் திருப்போரூரில் நடைபெற்ற பிரபாகரன் - மதிவதனி திருமணம் ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் என தொடர்கிறது. ஆயுத கொள்முதல் மற்றும் வர்த்தகத்துக்காக கப்பல் கம்பெனி நிறுவியது முதல் தனி போர்விமானங்கள் பயன்படுத்தியது வரை ஒரு சாதாரண தீவிரவாத கும்பலால் என்னவே முடியாத பலவற்றை அவர் சாதித்து காட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் ஆயுத கொள்முதலுக்கு குமரன் பத்மநாபன் ,உளவு துறைக்கு பொட்டு  அம்மான்,அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் யோசனைகளுக்கு ஆண்டன் பாலசிங்கம் என பல போராளிகளை பற்றியும் அறிய முடிந்தது

மேலும் மாத்தையா ,கருணா ,உமா மகேஸ்வரன் போன்றவர்களின் துரோகங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது.

இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு பற்றியும் அதனால் கண்ட விளைவுகள் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும் .இந்திரா காந்தி காலத்தில் இந்திய உளவு துறை இலங்கை போராளிகளுக்கு பயிற்சி அளித்தது ,பின் ராஜீவ் காந்தி அமைதி நடவடிக்கையாக போர் நிறுத்தம் கொண்டுவந்தது ,இந்திய அமைதி படையை அங்கு அனுப்பியது போன்ற அரசியல் நிகழ்வுகளை அறிய முடிந்தது .

இந்திய அமைதி படை அங்கு நடத்திய "அமைதி " நடவடிக்கைகள் ,போர்நிறுத்த காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட துரோக செயல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.


பின்பு இந்தியவின் தலையீடால் இலங்கையில் இருந்த மற்ற போராளி குழுக்கள் சிதறியது ,அவர்களை விடுதலை புலிகள் கொன்றது ,ராஜீவ் காந்தி படுகொலை என அடுத்த கருப்பு பக்கங்கள் வருகின்றன.


ஒரு தீவிரவாத(அவர்கள் பாசையில்) குழு ஒரு சுதந்திர நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுகள் மேலாக போராடிய வரலாறு இன்னொரு முறை அரங்கேறுவது கடினம். பல கிலோமீட்டர் நிலபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு சிறு எல்லைக்குள் வந்து ஒவ்வொரு விழுதாக வீழ்ந்து கடைசியில் ஆலமரமாய் பிரபாகரன் சரிந்த காரணங்களை விளக்க ராகவன் முற்பட்டுள்ளார்.

பிரபாகரன் மீது உலக சமுதாயம் கூறும் குற்ற சாட்டுகளையும் அதற்கான விளக்கங்களையும் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.


இறுதியில் இனி என்ன செய்யலாம் என கூறி இருப்பது சிறப்பு

ஆனால் முக்கிய போராளியாக கருதப்பட்ட தமிழ்செல்வன் பற்றியோ நார்வே தூதுக்குழு பற்றியோ எதுவும் சொல்லாதது ஆச்சர்யம் .


ஒரு புத்தகம் அடுத்த புத்தகத்துக்கான தேடலை வழங்குகிறது .அந்த வரிசையில் இது  நிறைய தேடல்களை வழங்கிவிட்டது

December 21, 2013

எங்கே செல்லும் இந்த பாதை -பகுதி 5

குழந்தை வளர்ப்பு

முன் குறிப்பு : குழந்தை வளர்ப்பு பற்றி எழுதுவதற்கு தேவையான வயதோ அனுபவமோ என்னிடம் இல்லை.இருப்பினும் சமூகத்தில் வாழும் ஒரு சராசரி மனிதனாக பார்க்கும் விசயங்களை பகிர்வோம் என்ற நினைப்பில் எழுதப்பட்டது . அறியா சிறுவன் எழுதிய இந்த பதிவு சிறுபிள்ளைதனமாகவோ தவறாகவோ இருக்கலாம்.அப்படி இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து போனால் போகட்டும் என நினைத்து விட்டுவிடுங்கள்.

குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு குழந்தை (சத்தியமா நான்தான் ) எழுதிய சிறு பதிவு . (அப்பாடா இனி யாரும் திட்ட மாட்டார்கள் )





குழந்தை வளர்ப்பு என்பதை உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வளர்ச்சி என்று பிரிக்கலாம். உடல் ரீதியான வளர்ச்சியை தாய்மார்கள் பார்த்து கொள்வார்கள். மனரீதியிலான வளர்ச்சியை மட்டும் பார்ப்போம்


குழந்தைகள் பள்ளி ,நண்பர்கள் சமுதாயம் என பலவற்றில் இருந்து கற்று கொண்டாலும் குழந்தைகளின் முதல் ஆசான் பெற்றோர் தான். பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் அணைத்து விசயங்களையும் கற்று கொள்கிறார்கள் .இதனால் குழந்தைகளிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது. பெற்றோரிடம் இருந்து கோபத்தில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தைகளிடம் பதிந்து விடுகிறது. தொலைக்காட்சி ,சமூகத்தில் அவர்கள் பார்க்கும் காட்சிகள் அவர்களுக்கு நல்லவற்றை மட்டுமல்லாமல் சில தீயவற்றையும் போதிக்கின்றன.


இன்றைய குழந்தைகளின் Observation மற்றும் Learning Ability மிக அதிகம்.நம் சிறு வயதில் நம்மால் யோசிக்க முடியாத பல விசயங்களை இன்று அவர்கள் நிகழ்த்தி காட்டுகிறார்கள். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பற்றி நாமே யோசிக்க வேண்டி வருகிறது. குழந்தைகளின் இந்த வளர்ச்சி பெற்றோரும் மனரீதியாக வளர அல்லது பக்குவம் மேம்பட வேண்டும் என்பதை புலப்படுத்துகின்றன.குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிகழ்வது குழந்தைகளின் மன நிலையை பேண உதவும். பெற்றோரிடையே எழும் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை நேரடியாக பாதிக்கின்றன .

இன்றைய தலைமுறை குழந்தைகளின் பெரும்பாலான நேரத்தை கேம்ஸ்களும் கார்ட்டூன்களும் கவர்ந்து விடுகின்றன. இன்றைய அறிவியல் முன்னேற்றம் குழந்தைகளுக்கு நிறைய கற்று கொடுப்பதோடு அவர்களை கெடுக்கவும் செய்கிறது. இதனால் உறவுகளோடு உலாவி மகிழும் நேரம் குறைகிறது.இவ்வாறு நிஜ மனிதர்களோடு வாழும் நேரம் குறைந்து நிழல் கதாபாத்திரங்களோடு வாழ வேண்டிய சூழல் நிலவுகிறது.


அறிவு என்பது பள்ளியில் சொல்லி தரப்படும் பாட புத்தகங்களோடு நின்று விடாது. அதை தாண்டி அவர்களுக்கு வாழ்கையை கற்று தரவேண்டிய பெருமை பெற்றோரையே சாரும். ஒரு பெற்றோராக குழந்தையின் சிறு சிறு ஆசைகளையும் பூர்த்தி செய்து விடுகிறோம். இதனால் தோல்வி,ஏமாற்றம் போன்றவற்றை அறியாமல் வளரும் அவர்களால் வாழ்கையின் சுக துக்கங்களை தாங்கி கொள்ள முடியாமல் போகிறது. ஆக வாழ்கையை வாழ்வின் அர்த்தங்களை அதன் சுமைகளை கற்று தரவேண்டும்.

மேலும் குழந்தைகளிடம் சொல்லப்படும் நீதி கதைகளும் வரலாற்று உதாரணங்களும் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற உதவுகின்றன. இவை அவர்களை ஆரோக்கியமான பாதையில் பயணிக்க வைக்கின்றன. துரதிஸ்டவசமான இன்றைய குடும்ப சிதைவுகள் தனி குடும்பங்களாக பிரிந்து விட்டதால் பாட்டி-தாத்தாக்களின் வேலையை இன்று பெற்றோர் தான் செய்ய வேண்டும். மேலும் இன்றைய சூலில் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முடியாமல் போகிறது.

இதனால் எந்த எதிர்பார்ப்போ நெருக்கடியோ இல்லாத குழந்தைகளின் உலகத்தை நாம் இழக்கிறோம் .குழந்தைகளின் உலகம் வசீகரமானது எப்பொழுதும் இன்பம் மட்டுமே இருக்க கூடியது.அந்த உலகில் நீங்கள் அனைவரும் குழந்தைகளே.

குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சமுதாயத்தில் வாழ்ந்து வரும் நாம் நம் குழந்தைகள் நம்மிடம் எதையும் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் ஒரு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுதல் கட்டாயமாகிறது.


இந்த பரந்த உலகில் இருந்து நாள்தோறும் குழந்தைகள் புதுப்புது விசயங்களை கற்கிறார்கள். ஒரு பெற்றோராக அவர்கள் கற்று கொள்வதை அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நெறியாள்கை செய்து தீயதை விளக்கி அவர்களுக்கு புகட்ட வேண்டும். குழந்தைகள் முன் தீய வார்த்தைகள் பேசுவதையோ செய்கைகள் செய்வதையோ நிறுத்த வேண்டும். அர்த்தம் தெரியாமல் பாடும் ஆங்கில போயம்கள் மட்டும் போதாது. அவர்கள் பேசும் பேச்சுக்களின் பொருளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நீதி கதைகள் சொல்வதன் மூலம் அவர்களை சிறந்த மனிதர்களாக்க முடியும் . அன்று நம் வளர்ந்த சூழ்நிலையில் நம் அறிவும் குறைவாக இருந்தது விஞ்ஞான முன்னேற்றமும் குறைவாக இருந்தது.ஆனால் இன்று குழந்தைகள் வாழும் சூழல் வேறு . திரும்ப திரும்ப இதை சொல்ல காரணம் ஒரு பெற்றோராக நாம் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதுதான் .ஏனெனில் பெருபாலான நம்மவர்கள் வாழ்வது பழைய Traditional வாழ்க்கையோ அதி நவீன (modern) வாழ்க்கையோ இல்லை .கிட்டத்தட்ட ரெண்டு கேட்டான் நிலை.


அதி முக்கியமானது உறவுகளின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். இது பின்னாளில் சமூகத்தோடு அவர்கள் சேர்ந்து இயங்கவும் உதவும் .பெரியோரை மதிக்கும் பண்பு ,நட்பு பாரட்டுதல் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது பெற்றோரின் கடமையாகும்

இவ்வாறு குழந்தைகளை நாளைய உழைக்கும் எந்திரங்களாக மட்டும் மாற்றாமல் நல்ல மனிதம் கொண்டவர்களாகவும் மாற்ற உதவும்


பி.கு :

அனைத்தையும் கற்று கொடுக்கிறோம் என்ற Spoon Feeding செய்வதாகவும் இத்தனை கற்று கொள்ளும் அவர்கள் இதையும் தானே கற்று கொள்வார்கள் என்பது சிலரின் வாதம். பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் எதையும் திணிக்காமல் குழந்தைகளாகவே அவர்களை வளர விடவேண்டும் பின் வளர்ந்து தாங்களே கற்று கொள்ளட்டும் என்பது அவர்கள் கருத்து. இதற்க்கு என் பதில் அறிவு என்பது வேறு அனுபவம் என்பது வேறு . தீ சுடும் என்று அறிவுக்கு முதலில் அனுபவமே காரணம். ஆக நல்லது எது கேட்டது எது என சீர்தூக்கி பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு அனுபவம் வரும் வரை இது தேவை .


என் பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இல்லை. என்னதான் இருந்தாலும் அனுபவமற்ற ஒரு அற்ப பதரின் பதிலில் பக்குவம் இல்லாமல் இருக்கலாம்

இது யாருடைய வகுப்பறை- புத்தக சந்திப்பு

திருவான்மியூர் அருகே உள்ள பனுவல் புத்தக நிலையத்தில் திரு.ஆயிஷா இரா .நடராசன் அவர்கள் எழுதிய இது யாருடைய வகுப்பறை எனும் நூல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது..சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர் திரு .கல்யாணி மற்றும் திரு.வேணுகோபால் ஆகியோர் வந்திருந்தனர். நம் கல்விமுறையின் ஆரம்பம் அதன் போக்கு மற்றும் குறைபாடுகள் குறித்து மிக சிறப்பான ஒரு விவாதம் நடந்தது.

நிகழ்ச்சியை காவேரி அவர்கள் தொகுத்து வழங்கினார் .தன் முன்னுரையிலேயே ஆசிரியர்களின் பெருமை மற்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பேசினார். அதற்க்கு பிறகு ஐயா திரு.கல்யாணி அவர்கள் பேச்சை தொடங்கினார்.

மிக நகைச்சுவையுடன் நம் கவனத்தை சிதற விடவே முடியாத அளவுக்கு தம் பேச்சால் கட்டி போட்டார். குழந்தைகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய விதம் மற்றும் அவர்கள் மனநிலை குறித்து பேசினார்.ஒரு ஆசிரியராக தம் அனுபவத்தை முன் நிறுத்தி பல கருத்துக்களை முன் வைத்தார். அவரது பேச்சில் ஆசிரியர் -மாணவர் உறவின் இடைவெளி குறித்த கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. மாணாக்கர்களுக்கான பள்ளி தான் வேண்டுமே ஒழிய மதிப்பெண்களுக்கான பள்ளி தேவையில்லை என்ற வாதத்தை அருமையாக அனைவரும் ரசிக்கும் படி முன் வைத்தார்.

பின் பேசிய திரு.வேணுகோபால் அவர்கள் இன்றைய கல்விமுறை சமூகத்தில் ஏற்ப்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தங்கள் விருப்பு வெறுப்புகளை திணிக்க கூடாது போன்ற கருத்துக்கள் அதிகம் இருந்தன. இன்றைய தனியார் கல்வியின் மோகம் மக்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அழகாக தற்போதைய நிகழ்வுகளின் வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் அவர் நகைச்சுவையாய் சொன்ன சில வரிகள்

{புத்தகத்தை 'எடு' 'படி' என்று சொல்லி சொல்லி நம்மை எடுபடியாக்கி விட்டார்கள் ↑

இன்றைய நம் கல்விமுறை பில்கேட்ஸ் களை உருவாக்க வில்லை
அவரது வேலையாட்களை உருவாக்கி கொண்டிருக்கிறது

இன்றைய கல்வி முறை வாஷிங் மெசின் போன்றது.பள்ளியில் அழுக்கு துணியாக சேர்க்கப்படும் மாணாக்கர்கள் பிறகு நல்ல வேலையில் சேர்ப்பித்து துவைத்து எடுக்கப்படுவது போல் கையாளப்படுகிறார்கள் }

இடையில் பார்வையாளர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.ஒரு தலைமையாசிரியை தான் மாணவர்களிடம் இருந்து பெற்ற சில நல்ல வித்தியாசனமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.இன்றைய கல்வி முறையின் அவலத்தை கடலூர் வாசிப்பாளர்கள் சார்பில் பங்கேற்ற BSNL நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றும் ஒரு அன்பர் சொன்னார். இன்றைய கல்வி முறையில் தனியார்மயமாதலின் பிரதிபலிப்பு மற்றும் அரசு பள்ளிகள் குறித்தும் சில நண்பர்கள் பேசினார்கள் ←

இறுதியாக தன் புத்தகம் பற்றி ஆயிஷா இரா.நடராசன் பேசினார். கல்வி முறை தோன்றிய வரலாற்றை அழகாக எடுத்துரைத்தார். நம் கல்வி முறை எவ்வாறு உண்டாக்கப்பட்டது மற்றும் அதற்க்கு வித்திட்டோர் குறித்தும் பேசினார். ஆசிரியர் -மாணவர் உறவு மற்றும் ஆசிரியர்கள் குறித்து பல மொழிகளில் எழுதப்பட்ட பல்வேறு நூல்கள் பற்றி விரிவாக பேசினார். நம் கல்வி முறையில் உள்ள பல்வேறு கோட்பாடுகள் எங்கிருந்து தருவிக்க பட்டன மற்றும் கல்வி முறை குறித்து பல்வேறு நாட்டு அறிஞர்கள் கொண்டுவந்த வரையறைகள் பற்றி பேசினார்.

அதில் என்னை பாதித்தது ஜப்பானிய எழுத்தாளர் யாமக்குச்சி (சத்தியமா அது தாங்க பேரு ) எழுதிய God save my children எனும் நாவல் தான். அதன் கதையை கேட்டவுடனே கண்ணீர் வந்து விட்டது. மிக உணர்வுபூர்வமாக பல விசயங்களை பற்றி பேசினார் நடராசன் அவர்கள்.அதில் கல்வி சீரமைப்பு குறித்த கோத்தாரி குழு சமர்ப்பித்த அறிக்கையின் குறைகள் மற்றும் யாஸ்பால் கமிசன் கொண்டுவந்த பல நல்ல விஷயங்கள் மற்றும் நம் கல்வி முறை மாற்றத்தில் UNICEF நிறுவனத்தின் பங்கு இன்னும் பல விஷயங்கள் பற்றி பேசினார்

அதற்குள் நேரமாகிவிட்டது .எனவே நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

பி.கு :

அவர்கள் சொன்ன சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம் .அதற்க்கு வருத்தங்கள்.முழுமையாக சொன்னால் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றியும் பேச வேண்டி வந்துவிடும்


அதை படித்து முடித்தவுடன் புத்தகம் பற்றிய பேச்சில் விரிவாக பேசுவோம்


நன்றி வணக்கம்

வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ்!!!


Books prescribed by Thiru. Aayesha Natarajan on Education:
1) To Sir with love - E. R. Braithwaite
2) Black Skin, White Masks - Frantz Fanon
3) Painted house - john grisham
4) The Little Village school - Gervase Phinn
5) God Save my Children (Double A-Bomb Victim: My Life beneath the Atomic Clouds - Tsutomu Yamaguchi)
6) The Petals of Blood - Ngũgĩ wa Thiong'o
7) Pedagogy of Freedom - Paulo Freire
8 ) Encyclopedia of Creativity, Two-Volume Set - Steven R. Pritzker
9) To Kill a Mockingbird - Harper Lee

இந்திய விளையாட்டுகள் - பகுதி 2

இந்திய விளையாட்டுகள் - பகுதி 2
கிரிக்கெட்டினால் வந்த விளைவு

நம் நாட்டில் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன.அவற்றில் கிரிக்கெட் மட்டுமே முதலாய் பார்க்க படுகிறது .கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை தாண்டி மக்களின் உணர்வாகவே மாறி விட்டது வருந்ததக்கது. (பாகிஸ்தான் உடன் தோற்றால் அது அவமானமாகி விடுகிறது. பாகிஸ்தான் நம்மை நெஞ்சுக்கு நெஞ்சாக சந்திக்கும் எதிரி ஆனால் சில முதுகில் குத்தும் துரோகிகளுடன் நாம் சந்தோசமாக விளையாடிக்கொண்டுதானே இருக்கிறோம் )

கிரிக்கெட்டின் விளையாட்டின் வளர்ச்சி மற்ற விளையாட்டுகளை அதிக அளவில் பாதித்திருக்கிறது. மற்ற விளையாட்டுகளை மக்களும் அரசும் புறக்கணிக்க கிரிக்கெட் காரணமாகிறது. அதிக லாபம் தரும் கிரிக்கெட் அரசுக்கு முக்கியமாகிவிட்டது. இத்தனைக்கும் பிசிசிஐ இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதில்லை .எனவே அது ஒரு தனியார் அமைப்பு .ஒரு தனியார் அமைப்பு நாட்டின் பெயரையும் தேசிய கொடியையும் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். மேலும் ஒரு இந்தியனாக இந்திய கிரிக்கெட் அணியையோ அல்லது அதன் வீரர்களையோ நான் support செய்ய வேண்டியதில்லை.




நமது தேசிய விளையாட்டை பற்றி நாம் அறியாதிருப்பது மிகவும் வருந்ததக்கது. ஒரு காலத்தில் நம் அணியின் வெற்றிகள் வார்த்தையால் விவரிக்க இயலாதது.உலகின் அணைத்து அணிகளையும் பந்தாடியுள்ளோம்.மேஜர்.சர் .தயான் சந்த் அவர்களின் தலைமையில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் ஆக நாம் வலம் வந்த காலம் மறக்க முடியாதது.



இன்று நாம் வலு குறைந்து இருக்கலாம்.அதற்கு ஆட்ட வீரர்களின் திறன் காரணம் இல்லை. களத்துக்கு பதிலாக நவீன புல்தரையில் ஹாக்கி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஆசிய அணிகளின் ஆதிக்கம் குறைந்து விட்டது. அரசு கிரிக்கெட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தன் இஷ்டப்படி பிசிசிஐ ஆட்டிவைக்கிறது. அணைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட பலவற்றை பிசிசிஐ எதிர்க்கிறது.ஆனால் ஹாக்கிஇல நம் உரிமைகளை தாரைவார்த்ததொடு வளர்ச்சி பணிகளிலும் மெத்தனம் காட்டுகின்றது. மைதானங்களின் தரம் கேள்விக்குரியதாய் உள்ளது அதே போல் அதிக அளவில் உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படுவதில்லை.


ஹாக்கிஇல் ஒரு குறிப்பட்ட மாநிலத்தவரின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது .அதை தவிர்த்து அணைத்து பகுதிகளின் சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக விளையாட்டு வீரனுக்கு மக்கள் மத்தியில் கிடைக்க பெரும் பாராட்டுதான் அவனுக்கு ஊக்கம் அளிக்கும்.எனவே அணைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் தர வேண்டும்.இந்த தொடக்கம் முதலில் ஊடகங்களில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக சமூகம் முழுக்க பரவ வேண்டும்


ஹாக்கி மட்டும் இல்லை மற்ற விளையாட்டுகளுக்கும் இதே நிலை தான். கபடியில் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பெரு வெற்றிகள் பெற்ற அணியினரை நாம் கண்டு கொள்ளவே இல்லை. வில்வித்தையில் அண்மையில் நடந்த உலக சுற்று போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் physiotherapist இல்லாமல் கடும் உடல் நல குறைவுடன் ஆடி வெள்ளி பதக்கம் பெற்றனர். அவர்களை பற்றி யாரும் கவலைப்பட வில்லை.குத்துசண்டை போட்டியில் தலைகவசம் இன்றி சண்டையிடும் புதிய விதிக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் அதன் சம்மேளன தலை பதவி ஆசையில் அடித்து கொண்டிருந்தோம்.பாட்மிட்டன் விளையாட்டில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ஆடை 'குறைப்பை' பற்றியும் நாம் பேச வில்லை.


இவ்வாறாக மற்ற விளையாட்டுகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் நம்மை பாதிப்பதை பற்றி நாம் கவலைப்பட வில்லை .மாறாக IPL போட்டிகளில் பணத்தை வாரி இறைத்து /குவித்து கொண்டிருந்தோம்.
வாள்சண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் பின் தங்கியிருக்க காரணம் திறமையின்மை அல்ல ,போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததுதான். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளே கொண்டு வரும்போது நாமும் கபடியை கொண்டு வரலாம்.


கிரிக்கெட் வேண்டாம் என நான் கூறவில்லை. கிரிக்கெட்டின் பலத்தை குறைக்கலாம் என்பதே என் கருத்து. இந்திய வீரர்களின் சம்பளம் மற்ற அணி வீரர்களை காட்டிலும் மிகவும் அதிகம்.எனவே அவற்றை குறைத்து முறைப்படுத்தலாம்.பிசிசிஐ தன்னிச்சையாக செயல்படாமல் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட வேண்டும்.இதன் மூலம் அணைத்து விளயாட்டுகளையும் சமமாக பாவிக்கும் அரசின் மனப்பான்மை மக்களையும் மாற்றும். மற்ற விளையாட்டுகளில் கொண்டு வரப்படும் புதிய விதிகளை அவற்றின் சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்து ஆதரிக்க அல்லது எதிர்க்க வேண்டும்.புதிய கிரிக்கெட் மைதானங்கள் உண்டாக்குவதற்கு பதிலாக கால்பந்து ,ஹாக்கி போன்ற இதர விளையாட்டு மைதானங்களையும் ஏற்ப்படுத்த வேண்டும்.


இதன் மூலம் இதர விளையாட்டுகள் புத்துயிர் பெரும்.வில்வித்தை ,துப்பாக்கி சுடுதல் ,மல்யுத்தம் ,குத்துசண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் தனி பெரும் சக்தியாக திகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.அணைத்து விளையாட்டுகளிலும் நம் வீரர்கள் முத்திரை பதிக்க காத்து கொண்டிருக்கின்றனர் .அவர்களுக்கு வேண்டியது முறையான வழிகாட்டுதலும் உங்கள் கைதட்டல்களும் தான்




பி.கு :

இந்தியாவின் C நிலை வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தென் ஆப்பிரிக்காவின் முதல் நிலை வீரர்களுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதில்லாமல் IPL மற்றும் விளம்பரங்களில் அவர்கள் ஈட்டும் ஊதியம் மிக அதிகம். எனவே மற்ற அணியினரை போல் அவர்களுக்கும் ஊதியம் வழங்கலாம்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். IPL இல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட கூடாது என இரண்டாவது தொடரில் தீர்மானிக்கப்பட்டது .ஆனால் இன்று வரை இலங்கை வீரர்கள் ஆடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.இந்த தொடரில் மட்டுமே சிலர் பிரச்சனயை கிளப்பினார்கள். சென்ற தொடர் வரை சென்னை அணியிலேயே குலசேகரா,ரண்டிவ் போன்ற வீரர்கள் ஆடியதை யாரும் கண்டு கொள்ளவில்லையே . ஏன் ?? ஒருவேளை நியாயம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுமோ ????

விளையாட்டு என்பது வேறு அரசியல் என்பது வேறு என கூறும் இவர்கள் அதை அணைத்து பிரச்சனைகளிலும் கடைபிடிக்க வேண்டுமல்லவா??
எனக்கு அரசியல் எல்லாம் தெரியாதுங்க .நீங்களாவது சொல்லுங்க


report abuse செய்ய கூடாது என்பதற்காக இதற்க்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் எனும் காலன் எனும் தலைப்பை மாற்ற வேண்டி வந்தது.



நன்றி வணக்கம்

மூங்கில் கோட்டை-புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மூங்கில் கோட்டை எனும் வரலாற்று புதினம் படித்தேன். தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சேர மன்னரை சிறை வைக்க உருவாக்கிய கோட்டையை பற்றிய புதினம் இது. தலையாலங்கானத்து பெரும் போரில் பத்தொன்பது பிராயமே நிரம்பிய நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த சேர,சோழ மற்றும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான் என வரலாறு கூறுகிறது. இதில் சரணடைந்த சேர மன்னன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை நெடுஞ்செழியன் யாராலும் சிறை மீட்க முடியாத அளவுக்கு ஒரு கடினமான கோட்டைக்குள் சிறை வைக்கிறான்

இனி கதைக்கு வருவோம்

சேர மன்னனின் மேல் மதிப்பு கொண்ட புலவர் குறுங்கோழியூர்கிழார் அவரை சிறையில் இருந்து தப்புவிக்க எண்ணுகிறார்.அவருக்கு நெடுஞ்செழியனின் சகோதரி இமயவல்லி உதவுகிறாள்.மன்னரை தப்பு விக்க சேர நாட்டில் இருந்து இளமாறன் எனும் இளைஞனை மதுரைக்கு வரவழைக்கிறார் புலவர். வந்த அன்றே அவன் மன்னரோடு மோத வேண்டி வருகிறது. மூங்கில் கோட்டைக்கு போகும் வழியில் பாண்டியனின் ஆசிரியரான சித்தர் தடுத்து நிறுத்துகிறார் .அவர் அவர்களை கைது செய்யாமல் போக அனுமதிக்க இளமாறன் மூங்கில் கோட்டைக்கு செல்கிறான் .



மூங்கில் கோட்டையில் இருந்து எங்கனம் அவன் மன்னரை விடுவிக்கிறான் ? மன்னரின் சகோதரி மேல் இளமாறன் கொண்ட காதல் நிறைவேறுகிறதா ? சித்தர் -இளமாறன் இடையே உள்ள உறவு என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இந்நூலின் முடிவு.


மிக இளம் வயதில் அரியணை ஏறி பல போர்களில் வெற்றி பெற்று இறவாப் புகழை எய்திய நெடுஞ்செழியனின் பராக்கிரமங்கள் அருமை .

புலவர் குறுங்கோழியூர் கிழார் மன்னரை தப்பு விக்க பல முயற்சிகள் எடுக்கிறார். சேர அரசிக்கு பிறந்த இளவரசி இமயவல்லி -இளமாறன் காதல் காட்சிகள் சில கணங்களே வந்தாலும் அருமை .


மூங்கில் கோட்டையின் அமைப்பு மிக பயங்கரம். சேனாதிபதி ,மருத்துவர் ,ஆசிரியர் என பல அவதாரம் புரியும் சித்தர் யார் என அவிழும் முடிச்சு நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

கடைசியில் மன்னர் நெடுஞ்செழியன் வழங்கும் தீர்ப்பில் புலப்படும் நீதி அவரின் உயர்வை புலப்படுத்துகிறது .


மிக அருமையான ஒரு அனுபவத்தை நல்கியது


நன்றி வணக்கம்

வாழ்த்துக்கள்


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

November 20, 2013

சேரன் செல்வி -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய சேரன் செல்வி வரலாற்று புதினம் படித்தேன். மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நவீனம். மாலிக் கபூரின் தென் நாட்டின் மீது படையெடுத்து கொள்ளையை முடித்து சென்று விட்ட பிறகு அவன் தளபதி குஸ்ரூகான் தென்னிந்தியாவில் ஒரு முகம்மதிய அரசை நிறுவ எண்ணுகிறான். வீர பாண்டியன் -சுந்தர பாண்டியன் இடையே மூளும் வாரிசுரிமை போட்டியை தனக்கு சாதகமாக்கி தன் ஆசையை நிறைவேற்ற முயல சேர மன்னர் ரவிவர்மன் குலசேகரன் எங்கனம் அதை முறியடிக்கிறார் என்பதே கதை ←

பாண்டிய நாட்டில் இருந்து புலவர் ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் வாலிபன் இளவழுதி சேர நாட்டின் தளபதியாக நியமிக்க படுகிறான்.சந்தித்த பொழுதே சேர இளவரசி இளமதி மேல் மையலும் கொள்கிறான். மாலிக் கபூரின் ஒற்றன் அஜ்மல்கான் மன்னரை கொல்ல சதி செய்கிறான். அவன் இளவழுதியையும் தன் சதியில் இழுக்க பார்க்கிறான். போர் திட்டங்களை மாற்றி கூறி அவனை இளவழுதி ஏமாற்றுகிறான். மதுரையை ஆளும் வீரபாண்டியன் குஸ்ரூகானுக்கு உதவ அவர் மீது சினம் கொண்டு படையெடுக்கும் சேர மன்னர் அவரை இளவழுதியின் துணையோடு வெல்கிறார். அப்பொழுது சுந்தர பாண்டியன் கலகம் செய்ய அவனை அடக்க செல்லும் இளவழுதியை சமாதானம் பேச அழைத்து வஞ்சித்து கத்தியால் குத்தி விடுகிறான் .
சேர மன்னர் குஸ்ரூகானை வென்றாரா ? இளவழுதி உயிர் பிழைத்தானா? கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள் என சொல்லப்பட்ட இளமதியை இளவழுதி மணம் புரிந்தானா போன்ற கேள்விகளுக்கு விடை கூறி விடைபெற்றது புதினம்.


தமிழ் புலவர் ,கவி சமுத்திரபந்தன் ,கவிபூசணன் என பல்வேறு கவிஞர்களின் உரையாடல்கள் மிகவும் அருமை. இளவழுதி -இளமதி காதல் காட்சிகளில் இன்பரசம் சொட்டுகிறது. தமிழரின் பெருமையை மீண்டும் உயர்த்த பாடுபட்ட மன்னர் ரவிவர்மன் குலசேகரன் பிரம்மிக்க வைக்கிறார்

போர்க்கள காட்சிகள் ,படை அணிவகுப்பு ,போர் வியுகங்கள் என தனக்கே உரித்தான பாணியில் கதையை அற்புதமாக நகர்த்திஇருந்தார் சாண்டில்யன்



சேரன் செல்வி
வகை :சரித்திர நாவல்
ஆசிரியர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதப்பகம்
விலை :145


↮எண்டமூரி விரேந்தர்நாத்தின் மற்றுமொரு அரிய படைப்பான சாகர சங்கமம் எனும் நாவல் படித்தேன். தான் சரியாக இருப்பதாகவும் மற்றவர்களும் தன்னிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தரளா எனும் பெண்மணியால் வரும் விளைவே சாகர சங்கமத்தின் கதை .

தரளா ,தன் காதலை பணம் எனும் மாயையால் இழந்த ஆனந்தன் மற்றும் தன் தோழிக்காக தன் காதலை தியாகம் செய்து தன் காதலருக்காக வாழும் பிருந்தா ஆகிய மூன்று நதிகளின் பிணைப்பு மற்றும் பிரிவே சாகர சங்கமம் கதை. கதையின் ஓட்டத்தை காவிரி நதியின் ஓட்டத்தோடு சேர்த்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர்.கதையை அந்தந்த கதாபாத்திரங்களே சொல்வது போல் நகர்த்தி இருப்பது சிறப்பு.பல்வேறு திருப்பங்கள் ,ஆச்சர்யங்கள் என முதல் அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் கதையின் வேகம் கடைசி அத்தியாயம் வரை தொடர்வது சிறப்பு. படிப்பதற்கு ஒரு நல்ல இனிய அனுபவத்தை வழங்கி தன் சங்கமத்தை நிறைவு செய்தது நாவல்


சாகர சங்கமம்
வகை :சமூக நாவல்
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு )
மொழிபெயர்ப்பு :கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை :110

கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு

கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு


மு.கு : இந்த புத்தகம் படிப்பதால் நீங்கள் கம்யூனிஸ்ட்டாக மாறி விடமாட்டீர்கள்.கம்யுனிசம் குறித்து வெளியே சொல்லப்படும் பல குறைகளையும் தவறுகளையும் தர்க்க ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மறுக்கும் முயற்சியே இது. இதை படிப்பதால் உங்கள் பொன்னான நேரம் வீணாகாது என நான் உறுதி கூறுகிறேன். சமீப காலங்களில் நான் படித்ததில் இது சிறந்த புத்தகம் என்பது என் கருத்து. இது உலகம் மீதான என் குறுகிய பார்வையை எனக்கு உணர்த்தி விசாலமாக்க உதவியது

தோழர் ஜவகர் எழுதி நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரையே இது. அதிக அளவில் விற்று சாதனை செய்துள்ள இந்த புத்தகத்தை பெரும் தேடலுக்கு பின் அண்மையில் வாங்கினேன்.
முதலாளித்துவத்தின் தோற்றமும் அதனால் உலகில் ஏற்ப்பட்ட பல விளைவுகளில் இருந்து இந்த புத்தகம் ஆரம்பிக்கிறது. முதலாளித்துவ நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமித்து அவற்றை எவ்வாறு சுரண்டினார்கள் என்பதையும் எவ்வாறு காலனி நாடுகள் உருவாயின என்பதையும் அழகாக சித்தரித்திருக்கிறார் இதன் ஆசிரியர் .


முதலாளித்துவத்தின் சித்தாந்தம் கொலையில் தொடங்கியதாகவும் கம்யுனிசத்தின் சித்தாந்தம் அமைதியில் தொடங்கியதாகவும் கூறி அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம்மை ஆர்வத்துடன் செல்ல வைக்கிறார் மார்க்சிய தத்துவம் ,பொருளாதாரம் போன்றவற்றையும் ,கருத்து முதல் வாதம் ,பொருள் முதல் வாதம் இயக்கவியல் போன்ற கோட்பாடுகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தந்திருப்பது சிறப்பு


என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த பக்கங்கள் ,கம்யுனிச கோட்பாடுகளையும் தத்துவங்களையும் Theory of relativity மற்றும் quantum theory போன்றவற்றை கொண்டு விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருப்பதுதான்.இது எனக்கு அபூர்வமாக தோன்றியது ஏனெனில் இவ்வாறு நான் கேள்விபட்டது கூட கிடையாது


மார்க்சியத்தை விஞ்ஞானம் என விளக்கியிருப்பதும் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மார்க்ஸ் ,எங்கெல்ஸ் ,லெனின் ஆகியோரின் பங்களிப்பை பற்றியும் தெளிவாக உணர முடிந்தது.
புரட்சி ஏற்பட்டு சோவியத் ரஷ்யா (USSR ) உதித்தது ,அதன் பிரம்மிக்க தக்க அசுரவேக வளர்ச்சி ,அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள் என அனைத்தையும் தந்திருப்பது நிறைவு .


ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யுனிசத்தின் பாதை மாற்றங்கள் மற்றும் அதன் காரணங்கள் தந்திருப்பது சிறப்பு

இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றம் அது சந்தித்த பிரச்சனைகள் ,சாதனைகள் மற்றும் பிளவு என இரண்டாம் பகுதி நிறைகிறது

இப்புத்தகத்தின் சில துளிகள்

➤பொதுவுடைமை குறித்து பாரதியார் ,பாரதிதாசன் போன்ற இந்திய கவிஞர்களின் கவிதைகளை இடைசெறுகலாக தந்து படிக்கும் ஆர்வதை கூட்டி இருக்கிறார்கள்

➤பல அறிய புகைப்படங்களை காண முடிந்தது

➤ மூலதனம் உயர்ந்தால் வேலைவாய்ப்பின்மை தான் உயரும் என்பதை இந்தியாவை வைத்து சொல்லி இருப்பது சிறப்பு

➤அதிக புத்தகங்களிலும் அரசு கருவூலங்களிலும் இருந்து பல புள்ளி விபரங்களை கொடுத்திருப்பது சிறப்பு

➤ நவம்பர் புரட்சியின் திக் திக் 26 மணி நேரங்களை விவரித்திருக்கும் விதம் அருமை

➤முதலாளி -தொழிலாளி வர்த்தக உறவுகள் ,விஞ்ஞான சோசியலிசம் என நீள்கிறது

➤ சுஜாதா எழுதிய இரு புத்தகங்கள் தொடர்ந்து விமர்சித்தும் மறுத்தும் எழுதி என் அடுத்த தேடலை துவக்கி வைத்துவிட்டார் ஜவகர்

கம்யுனிசம் நேற்று-இன்று -நாளை
ஆசிரியர் : இரா .ஜவகர்
வகை : கம்யுனிசம் பற்றிய ஆய்வு
முன்னுரை : தோழர் நல்லக்கண்ணு மற்றும் தோழர் R .சௌந்திரராஜன்
பதிப்பகம் : நக்கீரன்
விலை : 160




பி.கு :

முன் குறிப்பில் அனைத்தையும் சொல்லிவிட்டேன்

அதனால்



நன்றி வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

November 17, 2013

தூக்கு தண்டனை-ஒரு விவாதம்

திரு.எண்டமூரி விரேந்தர்நாத் அவர்கள் எழுதிய தூக்கு தண்டனை எனும் நாவல் படித்தேன்.ஒரு நாவலாக மட்டும் முடிந்து விடாமல் என்னுள் பல விவாதங்களை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவு, இருப்பினும் பல்வேறு திருப்பங்களுடன் மிக அருமையான பயணத்தை நல்கியது.


தூக்கு தண்டனையின் அவசியம் குறித்து என்னை யோசிக்க வைத்துவிட்டது. தூக்கு தண்டனையை ஒழிக்க போராடும் ஒருவன் ஒரு நாடகம் ஆடி உலகத்துக்கு தூக்கு தண்டனையின் கொடுமையை புரிய வைக்க முயல்கிறான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவனை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர் தன் வஞ்சத்தை தீர்த்து கொள்கிறார்.கடைசியில் அவன் எப்படி மீள்கிறான் என்பதே கதை.


தூக்கு தண்டனை தேவையில்லை என எழுப்பப்படும் கூக்குரல்கள் அதிகரித்து வருகின்றன . ஒரு மனிதனின் உயிரை மற்றவர்கள் சட்டம் என்ற ஒன்றை கொண்டு எடுப்பது தவறு என சிலர் கூறுகிறார்கள் . தண்டனை என்பது ஒருவன் செய்த தவறுக்கு அளிக்கப்படும் பிராயசித்தம் ஆகும்.அப்படி இருக்க தூக்கு தண்டனை என்ற பெயரில் அவனை திருந்த முயற்சிக்காமல் கொலை செய்வது எப்படி சரியாகும் ?? ஒரு கொலைகாரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் போது எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது.தன் முடிவு தெரிந்த ஒரு மனிதன் தினமும் செத்து செத்து உயிர் வாழும் ஒரு நடைபிணமாக மட்டுமே உயிர் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாளை எண்ணி கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது .ஒரு கதையின் முடிவு உங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டால் உங்களால் ஆர்வமாக படிக்க முடியாது அதே போல் தன் முடிவு தெரிந்த ஒருவனின் வாழ்நாள் நிச்சயம் வெறுமையாக எந்த பிடிப்பும் இல்லாமல் நகரும்.எவ்வளவு பெரிய தண்டனை ??

இதனாலேயே பல்வேறு மரண தண்டனை கைதிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டனர். சில அரிதான குற்றங்களுக்கு சில நாடுகளில் மரண தண்டனை விதிக்கிறார்கள். அந்த நாடுகளில் எல்லாம் குற்றங்கள் அதிகரிக்கவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுவாக தண்டனைகள் குறித்த இரு கருத்துருக்கள் உள்ளன.முதல் கருத்து தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும் என்பது .இதில் எனக்கு உடன்பாடில்லை.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான சட்டங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் வலிமையானதாக இருந்தும் (கற்பழிப்பு குறித்து அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள சட்டங்களை கேட்டால் ஆச்சர்ய படுவீர்கள் .) நம் நாட்டில் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன. சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை மிக கொடுமையானது .இருப்பினும் அந்த நாட்டிலும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன(அவர்கள் சட்டம் தானே எட்டு மாத கர்ப்பிணியை கட்டாய கருக்கலைப்பு செய்து கொல்ல சொன்னது )

இரண்டாவது கருத்து ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் மிக சிறந்த தண்டனை அவனை மன்னிப்பது ஆகும் .அதாவது அவனை மன்னித்தால் அவன் மனசாட்சி அவனை உறுத்தி அவனை நல்ல படியாக வாழ வைக்கும் என்பதாகும் .இதிலும் எனக்கு உடன்பாடில்லை ஏனெனில் நாட்டில் வாழும் அனைவரும் மனசாட்சியுடன் தான் வாழ்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது .காரணம் மனிதன் மட்டும் இங்கு வாழ்வதில்லை மனிதன் என்னும் போர்வையில் ஈவு, இரக்கம் மற்றும் மனித்தன்மையற்ற மிருகங்களும் வாழ தானே செய்கின்றன.அவர்களை கொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.ஒருவன் செய்யும் தவறுக்கு தண்டனையே இல்லையெனில் அவன் மனம் குற்றம் செய்வதை நோக்கி சிந்திக்காதா ??

புத்தர் பிறந்த நாடு இது மனிதனை மன்னிக்கும் மனப்பான்மை மேலோங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர் .சில குற்றங்களை மறக்கவே முடியாதபோது மன்னிப்பது எங்கனம் .(உதாரணம் நொய்டா நிதாரி படுகொலைகள் ).இன்றும் சிலவற்றை நினைக்கும் போது இதயம் கனக்கிறது . சட்டத்தினால் நிரபராதி என சொல்லப்படும் அனைவரும் அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிவிட முடியாது.சட்டத்தின் நெளிவு சுளிவுகளால் தப்பித்த அவர்களை ஒன்றும் செய்ய முடியாத சட்டம் சிலருக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்குவதும் எப்படி சரியாகும்.

நம் சுதந்திர போராட்ட தியாகிகள் சிறையில் அனுபவித்த தண்டனையை விட மரண தண்டனை கொடுமையானதா?. ஒரு திரைபடத்தில் சத்ய ராஜ் சொல்வார் மரணம் என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு அது எப்படி தண்டனையாகும் என்று ? . அது போல் மரணத்தை தண்டனையாக வழங்குவது அந்த மாதிரி குற்றங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்து கொள்ளும் என சொல்ல முடியமா?? .


இல்லை இந்த உலகில் மனிதனாக வாழ தகுதியே இல்லாத ஒருவனை கொல்லாமல் பாதுகாத்து வருவது சரிதானா??

என்ன இது மாத்தி மாத்தி பேசறான்னு பாக்கறீங்களா

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை

இவ்வளவு விவாதங்கள் என்னுள் நடந்த போதும் என் சிற்றறிவுக்கு எதுவும் எட்ட வில்லை .

உங்கள் கருத்தை சொல்லுங்கள் எனக்கு ஏதாவது தெளிவு ஏற்படுகிறதா என்று பார்ப்போம்




மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி வணக்கம்

இனி அந்த புத்தகம் பற்றிய தகவல்
தூக்கு தண்டனை
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு)
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
விலை :170


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

 ஒரு சமூக வலைதளத்தின் இந்த பதிவின்  பின்னூட்டத்தில் இருந்து


ஜலதீபம்-புத்தகம் பற்றிய பேச்சு

சாண்டில்யன் மகராஷ்டிராவை வைத்து எழுதிய ஜலதீபம் என்ற புதினம் படித்தேன். பிரிட்டிஷ் ,போர்த்துக்கீசியர்களின் கடலாதிக்கத்தை முறியடித்து அரபிக்கடலில் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிகரற்ற கடல்வீரராக விளங்கிய கனோஜி ஆங்க்ரேயின் கதைதான் இது. மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் கடற்கொள்ளையர் என்றும் மக்களால் ஸார்கேல் (கடற்படை தளபதி) என்றும் அழைக்கப்பட்ட ஆங்க்ரேயின் கடலாதிக்கத்தையும் அவர் போர்களையும் பற்றி படிக்கும் போது மெய்சிலிர்கிறது. இனி கதைசுருக்கம்

{முன் கதை சுருக்கம்: மராதியத்தின் ஒப்பற்ற வீரரான சிவாஜி நிர்மாணித்த சாம்ராஜ்யத்தை அவருக்குப்பின் அவர் மகன் சாம்பாஜி சரியாக நிர்வகிக்காதலால் மொகலாயர் ஆதிக்கம் அதிகரிக்க சாம்பாஜி சூழ்நிலையால் தப்பி தஞ்சை வருகிறார் அங்கு ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொள்ள ஒரு மகவும் பிறக்கிறது. அவருக்கு பின் மராத்தியத்தை மொகலாயர் ஆதரவு பெற்ற ஷாஹூவும் தாராபாய் ஆதரவு பெற்ற சிவாஜியும் ஆண்டுவருகிரார்கள். தஞ்சையில் வளர்ந்து வரும் மூன்றாவது மகன் வீரன் ஒருவனால் கடத்தப்பட அவனை கண்டுபிடிதக்க இக்கதையின் நாயகன் தஞ்சையில் இருந்து புறப்படுகிறான் }




மகராஷ்டிராவின் மூன்றாவது வாரிசை கண்டுபிடிக்க தஞ்சையில் இருந்து வரும் வாலிபன் இதயசந்திரன் பயணித்த கப்பல் கடற்போரில் மூழ்க கரை ஒதுங்கும் அவனை மகராஷ்டிராவில் ஒப்பற்ற செல்வாக்கும் மரியாதையும் உடைய பிரும்மேந்திர சுவாமி காப்பாற்றுகிறார். அங்கு அவன் ஷாஹூவின் மருமகள் பானுமதி தேவி மற்றும் கனோஜி ஆங்க்ரே ஆகியோரை சந்திக்கிறான். தாராபாய்யின் ஸார்கேல் ஆங்க்ரேயை வெறுக்கும் பானுமதி அவரை சிறை செய்ய இதயச்சந்திரனை நாடுகிறார். அவனை தன் அரசியல் லாபத்துக்காக உபயோகிக்க அவனை ஆங்க்ரேயின் பரம வைரி ஸித்திகளிடம் தூது அனுப்புகிறார். அங்கு அவன் ஆங்க்ரேயுடன் சேர விரும்புவதாக தெரிவிக்க அவன் சிறைபடுகிறான்.

அவனை ஆங்க்ரேயின் மகள் மஞ்சு காப்பாற்றி அவள் கப்பலான ஜலதீபத்தில் ஸ்வர்ணசதுக்கம் அழைத்து செல்கிறாள் . அங்கு மாலுமியாக பயிற்சி பெற்று சிறந்த கடல் வீரனாக உருவாகும் அவனை ஜலதீபத்தின் உபதளபதியாக நியமிக்கிறார் ஆங்க்ரே. மஞ்சுவுக்கும் சந்திரனுக்கும் காதல் மலர்கிறது. ஒருமுறை ஆங்கிலேய கப்பலை கொள்ளையிடும் போது காதரின் எனும் மங்கை சிறை பிடிக்க படுகிறாள் ,இதனால் மஞ்சுவுக்கும் அவனுக்கும் இடையே ஊடல் ஏற்படுகிறது .

காதரினை ஒப்படைக்க கொலாபா செல்லும் சந்திரனை தன் காம இச்சைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள முயலும் அவள் இனத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கிறாள் .இதனிடையே ஆங்க்ரேயை ஒடுக்க ஷாஹூ பாஜிராவ் பிங்க்லே தலைமையில் படை திரட்டுகிறார் அவளை வெள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டு கடல் பிராந்தியத்தில் அமைதி வேண்டி பம்பாய் செல்லும் இதயச்சந்திரன் கவர்னர் ஏஸ்லாபியை சந்திக்கிறான் .

அவனை சிறை செய்ய பிரும்மேந்திர சுவாமியும் பானுமதியும் முயல அவனை காயத்துடன் கவர்னர் காப்பாற்றுகிறார். அவனுக்கு எமிலி எனும் நர்ஸ் சேவை புரிகிறாள். கவர்னரின் காரியதரிசி பிரவுன் அவருக்கு எதிராக சதி செய்ய அவரை இதயசந்திரன் அடித்து விடுகிறான் .இதனால் கவலை கொண்ட ஏஸ்லாபி அவனை நர்ஸ் உடன் தப்ப செய்து நர்ஸ் அவனை காப்பாற்றி கொண்டு ஓடிவிட்டதாக பிரச்சனையை முடிக்கிறார்.

தப்பி வரும் அவன் பல குழப்பங்களுக்கு மத்தியில் திருட்டுதனமாக மஞ்சுவை மணம் முடிக்கிறான்.தரை படை தலைவனாக நியமிக்கப்படும் அவன் போர் வியூகத்தின் படி கல்யான் கோட்டையை பிடிக்கிறான் .அப்போது நிம்கர்(அவன்தான் தஞ்சையில் இருந்து மகவை கடத்தி வந்தவன் ) ஆங்கரேயின் தூதுவனாக வருகிறான். போரில் மிக பெரிய பிங்ளேயின் படையை இதயசந்திரன் தன் வியுகத்தால் உடைத்து வெற்றி கொள்கிறான் . அப்போரில் நிம்கர் காயமடைய அவனுக்கு சிகிச்சை அளிக்கிறான். தொடர்ந்து முன்னேறும் ஆங்க்ரே பல கோட்டைகளை கைப்பற்றுகிறார் .

மிகசிறந்த ராஜதந்திரியான பாலாஜி விஸ்வநாத் தன் சாமர்த்தியத்தால் ஆங்க்ரேயை சமாளித்து ஒரு ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி ஒன்றுபட்ட மராதியத்தின் ஸார்கல் ஆக நியமனம் பெறுகிறார் ஆங்க்ரே. நிம்கரை அழைத்து வரும்படி பாலாஜி ஆணையிட மறுக்கும் இதயசந்திரன் ,கல்யான் கோட்டை பொறுப்பை தன் உபதளபதி சுகாஜியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்கருடன் தமிழகம் தப்ப முயலும் (அவனிடமிருந்து உண்மை வரவழைக்க முடியாததால் ) அவனை மஞ்சு மூலம் கைது செய்கிறார் பாலாஜி. மஞ்சு சூல் கொண்டிருப்பதால் தன் மகள் எதிர்காலம் குறித்து கனோஜி கவலை கொள்கிறார் .நீதி தவறாத பாலாஜி விஸ்வநாத் பல வெற்றிகள் பெற்று மகராஷ்டிராவின் புகழை வளர்த்த இதயசந்திரனுக்கு என்ன தண்டனை அளித்தார் ? இதயசந்திரன் வந்த வேலை என்ன ஆனது ? போன்ற வினாக்களுக்கு விடையளித்து முடிந்தது புதினம் .


அரசியல் லாபத்துக்காக உபயோகிக்க முயலும் ஒருத்தி ,அன்பினால் ஆட்கொண்ட ஒருத்தி ,இச்சைக்காக வளைய வரும் ஒருத்தி ,சேவையினால் மயக்கும் ஒருத்தி என நான்கு பெண்களின் அன்புக்கு மத்தியில் திண்டாடுகிறார் இதயச்சந்திரன். மஞ்சு -இதயசந்திரன் ஊடல் மற்றும் கூடல் காட்சிகள் எதார்த்தம் விஜயசதுர்கம் ,ஜின்ஜீராத் ,கொலாபா போன்ற கடல் துறைமுகங்கள் மற்றும் கோட்டைகளின் வர்ணனை நம் கண் முன்னே அவற்றை சிருஷ்டிப்பதுடன் அதில் வாழ்ந்து பார்க்கவும் வைக்கிறது. அணைத்து மதத்தவரும் ஒற்றுமையுடன் வழிபடும் பரசுராமன் ஆலயம் கொலாபாவில் உள்ள குலாபியின் மகேசுவரி கோவில் என பல்வேறு அதிசயங்களை அறிய முடிந்தது. கடைசியில் பாலாஜியின் விசாரணையில் இதயசந்திரன் செய்யும் தர்க்கங்கள் படிக்க படிக்க சுவைக்கின்றன


மூன்று பாகங்களுடன் கிட்டத்தட்ட 1100 பக்கங்கள் கொண்ட இந்நாவலை ஓரிடத்தில் கூட சலிப்போ வெறுப்போ தோன்றாமல் முதல் அத்தியாயத்தில் இருக்கும் ஆர்வத்தை கடைசி பக்கம் வரை கொண்டு செல்லும் போது சாண்டில்யனின் சிறப்பை நாம் தர்க்கமின்றி ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.


பி.கு :

கதைசுருக்கம் மிக பெரிதாகவே இருக்கும் ஏனெனில் மூன்ற பாகம் கொண்ட பெரிய நாவல் என்பதால். மிகவும் நல்ல கதையோட்டம் . கனோஜியின் நகைச்சுவை மிகுந்த பேசும் பெண்கள் முன் இதயசந்திரன் மன உறுதி குலைவதும் மிக அருமையாக சொல்லப்பட்டுள்ளது .மாலுமியின் வாழ்க்கை முறை மற்றும் அதன் சுக துக்கங்கள் போன்றவற்றை அழகாக சொல்லி இருந்தார் சாண்டில்யன்


ஜலதீபம்
வகை :சரித்திர நாவல் (மூன்று பாகங்களை கொண்டது )
ஆசிரியர் :சாண்டில்யன்
விலை : 300(approx)
பதிப்பகம் :வானதி பதிப்பகம் (2013 வரை 23 பதிப்புகள் )

ராஜ்யஸ்ரீ ,கடல்வேந்தன் மற்றும் அலையரசி -புத்தகம் பற்றிய பேச்சுக்கள்

1.ராஜ்யஸ்ரீ

சாண்டில்யன் அவர்களின் நாவலான ராஜ்யஸ்ரீ படித்தேன் . கன்னோசி நகரை ஆண்ட மகாராணி மற்றும் மாமன்னர் ஹர்ஷரின் சகோதரி என ராஜ்யஸ்ரீ பற்றி நம் வரலாற்று பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜ்யஸ்ரீயின் வாழ்கையை சொல்வதே இந்த புதினம். பிராபகவர்த்தனர் - யசோவதி ஆகியோரின் மூன்றாவது குழந்தையான ராஜ்யஸ்ரீ செல்லமாக வளர்க்கப்படுகிறார். இளம் வயதிலேயே கன்னோசி மன்னர் கிருகவர்மனிடம் மையல் கொள்கிறார். சில எதிர்ப்புகளுக்கு பின் அவரை கரம் பிடிக்கிறார். மன்னர் கிருகவர்மன் நாடு நகரை மறந்து மனைவியுடன் உல்லாசமாக வாழ்வதிலேயே காலம் கழிக்கிறார். முன்னொரு சமயன் ராஜ்யஸ்ரீயால் நிராகரிக்கப்பட்ட தேவகுப்தன் சசாங்கன் எனும் அண்டை நாட்டு மன்னருடன் சேர்ந்து சதி செய்கிறான் . ஹர்ஷர் தன அண்ணன் ராஜ்யவர்தனருடன் இமயத்துக்கு ஹூனர்களை அடக்க செல்லும் சமயம் நோய்வாய்ப்பட்ட பிரபாகவர்தனர் இறந்துவிட யசொவதியும் உடன்கட்டை ஏறுகிறார். இந்நிலையில் வேட்டைக்கு வரும் கிருகவர்மனை சதி செய்து கொன்றுவிட்டு ரஜ்யஸ்ரீயை சிறையில் அடைக்கிறான். இதனால் வெகுண்டெழுந்து வரும் ராஜயவர்தனரை முதுகில் தந்திரமாக குத்தி கொலை செய்கிறான் .பின்னர் ஹர்ஷர் படையெடுத்து வந்து உடன்கட்டை ஏற நினைக்கும் தன் சகோதரியை எப்படி காக்கிறார் என்பதே இதன் முடிவு


காதல் காட்சிகளில் காமம் சற்று அதிகமாகவே இழையோடுவதை உணரமுடிந்தது .ஹர்ஷரின் வீர பிரதாபங்களை அழகாக சொல்லி இருக்கிறார்கள்



கடல் வேந்தன்

சேர நன்னாட்டில் ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருந்த யவனர்களும் அரேபியர்களும் தனி நாடு கேட்டு கலகம் செய்ய கடல் வேந்தன் எனும் கொலைகாரன் எப்படி அதை முறியடிக்கிறான் என்பதே கதை


அரசு கஜானாவை கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையனாக கடல் வேந்தன் அறிமுகமாகிறான். அவனை பிடிக்க காவலர் தலைவன் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போகின்றது. யவனர்-அரபியர் சதி தெரிய வருகிறது .அதை தன் உபதளபதி கிலேசியுஸ் தலைமை தாங்கி நடத்துவதை கண்டு அதிர்கிறான் .பின் சேர மன்னரோடு பேசி அதன் கடற்படைக்கு தளபதியாகிறான். இறுதியில் வெற்றிகரமாக கலகத்தை ஒடுக்குகிறான் .கடைசியில் தன் வேடத்தை கலைக்க சபை மட்டுமல்ல படிக்கும் நாமும் அதிர்கிறோம்.

புலவர் பாணர் -செங்குட்டுவன் உறவை மிக அழகாக சாண்டில்யன் சொல்லி இருக்கிறார் .கடல்வேந்தன் -அமைச்சர் மகள் நலங்கிள்ளி காதல் காட்சிகள் மிக அருமை.




3. அலையரசி

சாண்டில்யனின் மற்றுமொரு அற்புதமான புதினமான அலையரசி படித்தேன். சேர நாட்டில் சாதாரண போர் வீரன் எப்படி மிக பெரிய தளபதியாகி கிரேக்க நாட்டை மீட்டு உரியவனிடம் ஒப்படைக்கிறான் என்பதே கதை . கதையின் போக்கை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாதபடி பல்வேறு அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் விதித்திருந்தார் சாண்டில்யன். இதுவரை போர்களும் காதலும் ஆக்கிரமிக்கும் வரலாற்று நாவல்களில் இருந்து மாறுபட்டு மந்திர,தந்திர வித்தைகளோடு இந்த நாவல் பயணித்தது. அஹ்மத் என்பவனுக்கு அவன் நாட்டை மீட்டு தர சேர நாட்டின் வீரன் இளவழுதியை கண்டுபிடித்து அவனை அழைத்துவர அலையரசி எனும் மங்கையை கிரேக்க மதகுரு அனுப்புகிறார் .சேர மன்னர் ஒப்புதலோடு அங்கு சென்று வெற்றிகொடியும் நாட்டுகிறான் .இடையில் வரும் நம்பமுடியாத ஆச்சர்யங்களோடு சாண்டில்யன் நாவலை கொண்டு சென்றார். அலையரசி ,கடலரசி மற்றும் மானஸா ஆகய மூன்று பெண்கள் இளவழுதியின் வாழ்வில் வந்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே கதையின் பயணம். திகட்டாத காதல் காட்சிகள் ,போர் காட்சிகள் ,மாயாஜாலங்கள் என நாவல் முழுக்க விறுவிறுப்பும் ஆர்வமும் பரவி இருக்கிறது






பி.கு ;

தனிதனி பதிவாக போட்டால் கதை முழுக்க சொல்லவேண்டி வரும். இதனால் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது .எனவே ஒரே பதிவில் மூன்று நாவல்களை பற்றி எழுதிவிட்டேன்

படித்து இன்புறுங்கள்
பிறிதொரு பதிவில் சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்
சசிகுமார் முத்துசாமி



வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

ரிஷிமூலம் ,கி.மு கி.பி -புத்தகம் பற்றிய பேச்சுக்கள்

ரிஷிமூலம்

திரு. ஜெயகாந்தன் அவர்கள் எழுதி பெரும் சர்ச்சையை உண்டாக்கி ,இன்று வரை விமர்சிக்கப்படும் ரிஷிமூலம் எனும் நாவல் படித்தேன்.இந்நாவல் எதிர் கொண்ட பிரச்சனைகளையும் தன் நிலைப்பாட்டையும் தன் பெரிய முன்னுரையில் தெளிவாகவே ஜெயகாந்தன் சொல்லி விடுகிறார் .காமம் சார்ந்த உளவியல் ரீதியான ஒரு கதையை எடுத்து அதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருந்தார் .தன் வாழ்கையை ஒரு கட்டுப்பாடோடு வாழும் ஒரு பக்குவப்படாத மனிதனின் மனநிலையில் வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றத்தின் பிரதிபலிப்புகளை அவன் எங்கனம் ஏற்று கொள்கிறான் என்பதே கதையின் மூலம்.இக்கதையின் நாயகனான ராஜாராமனை உலகம் பார்க்கும் பார்வையும் ,உலகத்தை அவன் பார்க்கும் பார்வையும் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை ஜெயகாந்தன் அழகாக சொல்லி இருந்தார்

தன் வாழ்வில் எந்த பற்றுமில்லாமல் வாழும் அவன் இந்த உலகத்தில் இருந்து தப்பிக்க பக்தி எனும் ஆயுதத்தை தேர்ந்தெடுக்கிறான் .கடைசியில் அவன் விரக்தி அவனை எங்கு கொண்டு போய் நிறுத்துகின்றது என்பதே முடிவு .


நாகரிகம் ,பண்பாடு போன்ற முகமூடிகளை களைந்து விட்டு மனிதம் என்ற அடிப்படை உணர்வோடு மட்டுமிந்த நாவலை படிக்கவும்.

இது படிக்க வேண்டிய நாவல் என்றோ படிக்க கூடாத புத்தகம் என்றோ கூறும் அளவுக்கு உளவியல் சார்ந்த பக்குவம் எனக்கில்லை .என்னைபொறுத்த மட்டில் ஒரு சாதரணமான நாவல் அவ்வளவுதான் ........

படைப்பாளிகள் சமூக கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது என் கருத்து





ரிஷிமூலம்
வகை :குறுநாவல்
ஆசிரியர் :ஜெயகாந்தன்
பதிப்பகம் :மீனாட்சி புத்தக நிலையம்
விலை :55


கி.மு கி.பி

திரு .மதன் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் உலகம் உண்டான காலகட்டத்தில் இருந்து முந்தைய வரலாற்று காலம் வரை உலகமும் அதில் உறையும் உயிரினங்களும் கண்ட பரிணாம வளர்ச்சி மற்றும் மாற்றங்களையும் அழகாக கூறுகிறது. மனிதன் உருவான கதை ,அவன் நாடோடியாய் வாழ்ந்து திரிந்தது என ஆரம்பிக்கிறது. மனிதன் நிலையாக ஒரு இடத்தில வாழ ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பற்றியும் அவன் அடைந்த மாற்றங்கள் பற்றியும் அழகாக சித்தரிக்கிறது.முதலில் மெசபட்டோமிய நாகரிகம் பற்றியும் அதன் அரசர்கள் உருவானது ,மக்களின் வாழ்க்கை முறை என ஒவ்வொன்றாக விளக்குகிறது.

உலகின் முதன்மை இலக்கியமாக கருதப்படும் கில்டுமேஷ் கதை மிக அருமை .உலகிற்கு முதன் முதலில் சட்டம் தந்த மன்னன் ஹமுராபி பற்றி அறிய முடிகிறது .அவன் சட்டதிட்டங்களில் இருந்த நுட்பமும் முற்போக்கு சிந்தனையும் வியக்க வைக்கின்றன .பிறகு எகிப்திய ,கிரேக்க நாகரீகங்களின் தோற்றத்தையும் அதன் சிறப்புகளையுமரிய முடிந்தது .

சூரியனை மட்டுமே கடவுளாய் நம்பிய மன்னன் ஆக்நெடான் ,அதிசய ஆலயமான அபூஸிம்பெல் போன்றவற்றை பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது

பின் கிரேக்க -பாரசீக போர்கள் பற்றியும் ஏதென்ஸ் நகரின் எழுர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைகின்றன

நாடகங்களின் தந்தை ஹிராடேடஸ் ,சாக்ரடீஸ் புளுட்டோ என பலரை பற்றி அறிய முடிந்தது.சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் கொல்லபட்டவரையிலான இடை காலத்தில் அவரின் போக்கை அழகாக நேரில்கண்டு தந்திருக்கும் ப்ளுட்டோ பற்றிய பக்கங்கள் அருமையிலும் அருமை

இந்தியாவின் முதல் மிக பெரிய சாம்ராஜ்யமாக கருதப்படும் அசோகரின் மௌரிய சாம்ராஜ்யதோடு இப்புத்தகம் முடிகிறது

பல நாகரீங்களை பற்றியும் அவற்றோடு நம் சிந்து சமவெளி நாகரீகம் எப்படி மேம்பட்டுள்ளது என்பதை பற்றி சொல்லி இருப்பது சிறப்பு


மற்ற நாகரீகங்கள் இன்று முழுமையாக அழிந்து விட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் மக்கள் ஓரளவுக்கு தங்கள் பழைய நாகரீகத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை என்னும் போது ஒரு இறுமாப்பு ஏற்படத்தான் செய்கிறது



கி .மு கி .பி
வகை : நாகரிகங்கள் பற்றிய ஆய்வு நூல்
ஆசிரியர் :மதன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை :130/-

வந்தியதேவன் வாள் -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.விக்கிரமன் எழுதிய வந்தியதேவன் வாள் எனும் சரித்திர புதினம் படித்தேன் . நந்திபுரத்து நாயகி மற்றும் காதல் சிகரம் போன்ற விக்கிரமனின் படைப்புகளின் தொடர்ச்சி இது எனலாம்.

முன் கதை சுருக்கம் :
நாட்டிய பெண் இன்பவல்லியை ராஜராஜர் விரும்புகிறார்.பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி அவர்களை சேர விடாமல் குந்தவை தடுக்கிறார். மேலும் இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார்.அங்கு இன்பவல்லி பூங்கொடி எனும் மகவை ஈன்றெடுக்கிறாள்.அழகும் அறிவும் மட்டுமலாமல் தான் கற்ற கலையையும் போதித்து குந்தவையை பழிவாங்க அனுப்பி வைக்கிறாள்



இனி கதைக்கு வருவோம்

பூங்கொடி தஞ்சையில் பணிப்பெண்ணாக அரச மாளிகையில் சேருகிறாள் . இளவல் மதுரன் (ராஜேந்திரர்) அவளை கண்டவுடன் மையல் கொள்கிறார். குந்தவை அவர்கள் இருவரையும் சந்திக்க விடாமல் செய்கிறார். அச்சமயம் சாளுக்கிய மன்னன் சோழ நாட்டின் மீது வேவு பார்க்க சிலரை அனுப்புகிறான். வேவு பார்ப்பவன் பூங்கொடியை ஏமாற்றி மதுரனை கொல்ல முயல அத்திட்டம் தோல்வியடைகிறது . குந்தவை இருவரையும் பிரிக்க சதி செய்கிறார்.இதனால் வந்திய தேவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பழுவேட்டையர் தன் மகள் கோதையை மதுரனுக்கு மணம் முடிக்க என்ன அனைவரும் ஒப்பு கொள்கிறார்கள் .வந்தியதேவர் தன் மகளை (இரண்டாவது மனைவி மூலம் அவர்க்கு ஒரு மகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது) மணம் முடிக்க எண்ணுகிறார். முடியாமல் போனாலும் மதுரனின் உள்ளம் கவர்ந்த பூங்கொடியை அவன் மணக்க உதவுகிறார்.



இறுதியில் ராஜராஜனை சந்திக்கும் பூங்கொடி தன் தாயை பற்றி சொல்லி அவரை அழைத்து போகிறாள் .அவர்களுக்கு முன் இன்பவல்லியை காண செல்லும் குந்தவை நடந்த தகாத சம்பவத்தை சொல்லி தீர்வும் சொல்கிறார் . பூங்கொடி தன் சகோதரி என தெரிந்தவுடன் மதுரனின் நிலை என்ன ? வந்திய தேவர் -இளைய பிராட்டி உறவில் ஏற்பட்ட விரிசல் என்னவானது ?? போன்றவற்றிக்கு பதில் சொல்லி நாவல் நிறைவு பெற்றது


"வல்லவரையரே ! தங்களுக்கு வெற்றி தருவது உங்கள் கரங்களா ? கரங்களில் பூரணமாக திகழும் வாளா? " என ராஜராஜன் வினவிய உன்னதமான அந்த வாளை தன் மகளை மதுரன் மணந்த பின் பரிசாக தருவோம் என என்னும் வந்தியத்தேவர் அது நடக்காவிட்டாலும் அதை மதுரனிடம் ஒப்படைக்கிறார்.

வந்தியதேவன் வாள் என்றவுடன் அந்த வாளின் பெருமையை சுற்றியே கதை நடக்கும் என்ற என் கணிப்பு தவிடுபொடியானது.மேலும் ஒரு கதையாக சொல்லாமல் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக கதையை இதிலும் விக்கிரமன் நகர்த்தி இருப்பது படிக்கும் போது ஒரு வித அலுப்பையே தருகிறது .

கல்கி ,சாண்டில்யன் படைப்புகளில் காணப்படும் ஒரு ஆர்வத்தை ,சுவையை மற்றவர்களின் படைப்புகள் முழுமையாக நல்குவதில்லை என்று சில நண்பர்கள் கூறிய கூற்றை நான் ஒப்பு கொள்கிறேன் .

வந்திய தேவன் வாள் படிக்கும் முன்பு நந்திபுரத்து நாயகி படித்து விட்டு படியுங்கள்


வந்தியத்தேவன் வாள்
ஆசிரியர் :விக்கிரமன்
வகை :சரித்திர நாவல்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
விலை :180

November 16, 2013

தனிமை!! தனிமை!!

இந்த உலகத்தின் அணைத்து சுகதுக்கங்களில் இருந்து விலகி நமக்கென தனி உலகை உருவாக்கி கொண்டு ஆட்சி புரியும் இனிய தருணமே தனிமை. சிலருக்கு அது தேனாய் தித்திக்கும். சிலரை அது நெருப்பாய் வாட்டும். ஆக தனிமையின் இனிமை சூழ்நிலையை பொருத்து மாறும். சில சமயங்களில் தனிமை மன அமைதியை தருவதோடு நல்லதொரு புத்துணர்ச்சியையும் தரும். தனிமையில் நம் சுயசிந்தனை அதிகரிக்கும். கஷ்டமான சூழ்நிலையில் தனிமை விபரீதமான முடிவுகளை சிந்திக்க வைக்கும். தனிமை நம் தோல்விகளை அலசி பார்க்குமே ஒழிய அதற்கான தீர்வுகளை பற்றி சிந்திக்க விடாது. தனிமை நம் அறிவுக்கு மதிப்பு தராமல் உணர்ச்சிகளுக்கு புகலிடம் தருகிறது

தனிமையில் இனிமை காண முடியுமா என எனக்கு உறுதியாக தெரியவில்லை.ஆனால் நார்வேயில் நள்ளிரவில் சூரியன் தெரியுமாம். காதலில் தனிமை கற்பனைகளுக்கு வித்திட்டு மட்டற்ற மகிழ்ச்சியை தரும். ஆனால் தோழமையில் தனிமை நம்மை காயப்படுத்தும். கலைஞனின் தனிமை கலைகளை சிந்திக்கும்.சில சமயங்களில் தனிமை நம்மை ஒரு தனி தீவு போலவும் நமக்கு யாருமே இல்லை என்பதுபோலவும் வருந்த வைக்கும். சிலருக்கு அது ஒரு வெறுமையை கூட அளிக்கும். தனிமையில் நாம் சிருஷ்டிக்கும் உலகில் இருந்து நம்மால் வெளியில் வர முடியவில்லையெனில் நம் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று பொருள். இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்ட பல சகோதரர்களுக்கு ஆறுதலுக்கு பதிலாக கிடைத்த தனிமையே காரணமாக இருக்கலாம்.


நம் இந்த பரந்த உலகத்தில் எப்பொழுதும் சகாக்களுடன் வாழ்ந்தாலும் ஒரு சில சமயங்களில் நமக்கு தனிமை தேவைப்படுகிறது. நம்மை நமக்கே புதிதாய் அறிமுகம் செய்விக்கும் தன்மை தனிமைக்கு உண்டு. என் துக்ககரமான நாட்களில் எனக்கு தனிமை தேவைப்படும். இது எனக்கு ஆறுதல் எவ்வாறெனில் என் துன்பம் பிறர் அறியாவண்ணம் இருக்கிறது என்னும் நினைப்பினால் :).


தனிமை என்பதை யாருமே இல்லாத எந்த ஒலியும் இல்லாத சூழல் என கொள்ள முடியாது . நீங்கள் நினைத்தால் எந்த இடத்தில வேண்டுமானால் தனிமையை சிருஷ்டித்து கொள்ளலாம். அதற்க்கு பல மார்க்கங்கள் உள்ளன


நான் என் தனிமையை உருவாக்க எப்பொழுதும் தமிழ் பாடல்களையே நம்புகிறேன். நல்ல இசையை கேர்க்கும்போது நம் மனம் அமைதி கொள்வதோடு அதோடு பயணிக்க ஆரம்பிக்கிறது.அதனால் நாம் நம் சுற்றுபுறத்தை மறந்துவிடுகிறோம். அந்த வகையில் என்னை தனிமைக்கு கொண்டு செல்லும் இரு பாடல்கள்

மறைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் குரல் எனக்கு மிக பிடிக்கும் அவரின்

"மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச "

எனும் பாடல். மனதில் ஏற்படும் சிந்தனை அலைகள் அனைத்தும் நிறைவு பெற்று மனம் ஒரு தெளிந்த நீரோடையாய் அமைதியாக இருக்கும்


இரண்டாவது பாடல் அலைபாயுதே எனும் படத்தில் வரும் ஸ்வர்ணலதாவின்
" எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் "

எனும் பாடல். இந்த பாடல் கேற்கும் போதெல்லாம் எங்கோ ஒரு இடத்தில எழும் இனிய இசையை நோக்கி யாருமிலலா நள்ளிரவில் நான் நகர்வது போன்ற பிரம்மை ஏற்படும்

அந்த பாடலில் வரும் ஒரு வரி "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன்".



இவ்வாறு தனிமை உங்களுக்கு எந்த மாதரியாக செயல்பட வைக்கிறது? .எப்படி தனிமையை உருவாக்கி கொள்கிறீர்கள்? என்பதை பகிரலாமே

October 27, 2013

இவங்க எழுதுனா எப்படி இருக்கும்

முன் குறிப்பு : எதையாவது வெரைட்டியா யோசிப்போம்னு தோனுச்சு அதன் விளைவே இது. யார் மனதையும் புண்படுத்த அல்ல.
பாட்டி வடைசுட்ட கதையை வேறு சில எழுத்தாளர்கள் எழுதி இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை


முதலில் கதை தெரியாதவர்கள் இருந்தால் (பொறந்த கொழந்தைக்கு கூட தெரியுமே  னு சொல்ல கூடாது )

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார், அந்த நேரம் அங்கு வந்த காகம் பாட்டி அசந்த நேரம் பார்த்து வடையை திருடி செல்கிறது. திருடிய வடையுடன் ஒரு மரத்தில் அமர,அங்கு வந்த நரி காகத்திடம் இருந்து வடையை அபகரிக்க திட்டமிடுகிறது.காகத்தை பாட சொல்ல காகம் பாட வாயை திறக்கிறது.வடை கீழே விழுந்து விட நரி அதை அபகரிக்கிறது.(சாமி சத்தியமா இதுல என்ன நீதி இருக்குனு எனக்கு தெரில )






இதை சாண்டில்யன் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும்னு பார்ப்போம்


அது ஒரு அந்தி சாயும் மாலை பொழுது. வான மகள் செந்நிற சேலை கட்டி மஞ்சள் நிற போட்டு வைத்து புதுக்கோலம் பூண்டிருந்தாள். அங்கு வந்த தென்றல் காற்றில் கொன்றை மலரின் வாசம் மண்ணில் சொர்க்கத்தை சிருஷ்டித்து கொண்டிருந்தது. பட்சிகளும் பறவைகளும் தங்கள் இனத்தினரோடு உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன.அந்த சத்தங்களின் வாயிலாக எழுந்த ஒலி யாரோ இன்னிசை பாடுவது போல் இருந்தது (சாண்டில்யன் ஸ்டைல்ன நாலு பக்க வர்ணனைக்கு பிறகுதான் கதை ஆரம்பிக்கும். எனக்கு அவ்வளவு வர்ணனை எழுத தெரில அதனால் இத்தோடு நிப்பாட்டிக்குவோம் ).ஒரு முதுமை பருவமெய்திய கிழவியொருத்தி வடை வடை சுட்டு கொண்டிருந்தாள்.கிழவியின் முகத்தில் இருந்த சுருக்கங்களும் கைகளில் தென்பட்ட நடுக்கமும் அவளுக்கு ஒரு என்பது பிராயம் இருக்கும் என்பதை காட்டின. அவள் உடையும் முகமும் ஏழ்மையை புலப்படுத்தின .அந்த நேரம் பார்த்து ஒரு காகம் வந்து அமர்ந்தது. வானத்தின் கரிய மேகத்தை அச்சில் வார்த்தது போல் ஒரு கரிய உருவம் கொண்ட அந்த காகத்தின் கால்கள் அல்லி தண்டை ஒத்திருந்தன. அதன் மோகனம் மிகுந்த விழிகளிரண்டும் அலைபாய்ந்து கடைசியில் வடையில் நிலைத்தது.******************************************
****************************************************
பொழுது சாயும் அந்த நேரத்தில் அந்த ஒற்றையடி  பாதையில் ஒரு நரி வந்து கொண்டிருந்தது.அதன் செந்நிறமும் கூர்மையான விழிகளும் ஒரு பயங்கரத்தை அங்கே அரங்கேற்றின .அதன் நடையில் ஒரு தந்திரம் குடி கொண்டிருந்தது.************************************************************
*****************************************************************************




இக்கதையை ராஜேஸ்குமார் சொல்லி இருந்தால் ...


அது ஒரு சாயங்கால நேரம். கதிரவன் காணாமல் போக இன்னும் சில நேரம் இருந்தது. அந்த ஊரின் ஒதுக்குபுராமாக இருந்த அந்த வீட்டின் வெளியில் ஒரு பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார். பாட்டியின் முகத்தில் ஒரு எதார்த்தம் குடி கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு காகம் வந்து அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தது.அதன் கண்ணில் ஒரு வித கள்ள பார்வை காணப்பட்டது.பாட்டி திருபிய அந்த கண நேரத்தின் துல்லியமான வினாடியில் தான் அந்த சம்பவம் நடந்தது


அது ஒரு ஒற்றையடி பாதை. இருபக்கமும் புதர்கள் நிறைந்து காணப்பட்ட அது தவறுகள் நடப்பதற்கு ஏற்ற இடம் என்பதை சுட்டி காட்டிகொண்டிருந்தன . திடீரென சருகுகள் அசைந்து யாரோ வருவதற்கான அடையாளத்தை கொடுத்தன. அந்த சூழ்நிலையில் கண்ணில் ஒரு வித விசமப்புன்னகையோடு வாயில் ரத்தம் வழிய ஒரு நரி வந்து கொண்டிருந்தது. ********************************************************
**************************************************************
(இப்படி கதை இரண்டு பிரிவாக வந்து கடைசியில் சஸ்பென்ஸ் உடைந்து இணையும்.நரி அபகரித்த வடையை பிரான்சிக் ஆட்களுடன் வந்து விவேக் கண்டுபிடிக்கிறார் .நரியின் அக்கிரமங்களை ஊருக்கு உணர்த்தி கடைசியில் கைது செய்கிறார் .எப்புடி ???)



இனி கார்டூனிஸ்ட் மதன்


ஒரு கிராமம் ,நகரமயமாதலால் தன் பொலிவினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. அதன் புதிய பரிமாணம் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள எதிர் விளைவுகளை அப்பட்டமாக காட்டி கொண்டிருந்தது (புரியலைன கேள்வி எல்லாம் கேட்க கூடாது ). அங்கு ஒரு வயது முதிர்ந்த பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார். அது பருப்பு வடை,பல்வேறு பயிர்கள் கலந்து ஒரு புதிய சுவையை கொடுத்து கொண்டிருந்தது . அங்கு ஒரு காகம் வந்தது.அது மரத்தின் மேல் அமர்ந்திருந்த கோணம் அதன் பேரினம் @@@@@@ என்ற பறவையில் இருந்து வந்ததையும் அதன் முன்னோர்கள் பாலூட்டிகளாக கடலில் வாழ்ந்ததையும் புலப்படுத்தின.
************************************************************************
***********************************************************************

அந்த மலையடிவாரப் பாதை ஆதி காலத்தில் இருந்த இயற்கையின் வனப்பையும் அதன் மேலாண்மையையும் புலப்படுத்தின. அங்கு தன் வாயில் ரத்தம் வழிய வழிய ஒரு நரி வந்து கொண்டிருந்தது.இது tasmaniya வில் வாழ்ந்த பழங்குடி மக்களை ஆங்கிலேயர்கள் வேட்டையாடி கொன்றதை நினைவு படுத்தியது.( இந்த பயணத்தில் வரும் பயங்கரங்கள்  மற்றும்   சம்பவங்கள் உங்கள் மனதை கலவரப்படுத்தலாம் .இளகிய மனம் படைத்தவர்கள்,குழந்தைகள் ,இதயநோய் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்  அப்படிங்கறத add பண்ணிக்கோங்க )
***********************************************************
***********************************************************


தபூ சங்கரின் "வடையை கேட்டால் என்ன தருவாய் "

கதிரவன் இன்னும் உள்ளதால்
வெட்கப்பட்டு நாணிக்கண்புதைத்திருந்தாள் நிலாமகள்
அங்கே ஒரு பாட்டி கதிவரனின் வடிவத்தை
வடைசட்டியில் வார்த்து கொண்டிருந்தார்
நிலவின் மதுரத்தை ரசிக்க
அவர் கண்கள் ஏங்கி கொண்டிருந்தன
அங்கு ஆல மரத்தடியில்
ஒரு அழகிய காகம் வந்து அமர்ந்தது.
அதன் உன்னத முகத்தில்
கண்கள் மட்டும் ஒரு களங்கத்தை விளைவித்தன.
இமை மூடித்திறக்கும் நேரத்தினுள்
காகம் வடையை களவு செய்தது
 இரையை புசித்துவிட்டு அடங்கா பசியுடன்
வளைய வந்தது ஒரு குள்ளநரி
 அதன் கண்கள் ஒரு குரூரத்தை வழங்கின.
******************************************

********************************************
பாட்டை கேட்டு வடையை பெற்றது நரி  


போதுங்க இதுக்கு மேல எழுதினா தமிழ் எழுத்தாளர்களின் அபிமானிகள் என்னை கொலை செய்து விடுவார்கள்




பி.கு :

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. எந்த எழுத்தாளர்களையும் கிண்டல் செய்ய வில்லை.அவர்கள் பாணியை கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது அவ்வளவு தான். அவர்கள் மேல் நான் பெருமதிப்பு  கொண்டிருக்கிறேன்


பிழை இருந்தால் மன்னித்து பொருத்தருளவும்

  நன்றி வணக்கம்

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் !!!!

October 26, 2013

தமிழ் rhyme



டிங் டாங் கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டி குட்டி சுண்டெலி
எட்டி எட்டி பார்த்ததாம்
பணியார வாசத்தால்
கிட்ட அருகில் வந்ததாம்
டிங் டாங் கடிகாரம்
தாவி ஓடுதாம் சுண்டெலி

எங்கே செல்லும் இந்த பாதை-பகுதி 4

மொழிப்பற்று


அமுதென்றும் அழகென்றும் உயிரென்றும் உணர்வென்றும் பாடப்பட்ட உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் தமிழ் மொழியின் இன்றைய போக்கு மற்றும் அதன் பிற்கால நிலை பற்றிய பதிவு இது. அமிழ்தினும் இனியதான இயல் ,இசை ,நாடகம் ஆகிய முத்தமிழை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். தனக்கே உரித்தான இலக்கிய வளங்களோடும் இலக்கண நெறிகளோடும் திகழ்ந்த தமிழின் இன்றைய நிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.


முதலில் மொழி என்பதன் வீச்சு தகவல் பரிமாற்றத்தோடு நின்று விடுவதில்லை.அதை தாண்டி நம் அடையாளமாகவும் வாழ்வியலின் பின்னிப்பிணைந்த அங்கமாகவும் விளங்குகின்றது.

"உடம்போடு மெய்வந்து புணர்ந்தால் உயிர்மெய் "

எனும் கூற்றுக்கேற்ப நம் உயிர் மெய் நிலைக்க வேண்டுமானால் தமிழென்னும் மெய் நம்மை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அகன்றுவிட்டால் நாம் உணர்வுகளற்ற யாக்கையுடன் வாழும் மக்கள் ஆவோம். நம் மகிழ்ச்சி ,சோகம் ,சினம்,இகழ்ச்சி ,அமைதி என் எல்லாவற்றிலும் மொழியின் தாக்கம் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய நிலவரப்படி நூற்றுகணக்கான மொழிகள் அழிந்து விட்டன மற்றும் அழிந்து வருகின்றன. அந்த மொழியில் உன்னத இலக்கியங்கள் இருந்திருக்கலாம் மற்றும் மொழி ஆர்வலர்கள் இருந்திருப்பார்கள்.ஆயினும் அந்த மொழிகள் ஏன் அழிந்தன ?

ஒரு மொழியின் ஆளுமை அல்லது ஆயுள் பதிய படைப்புகளினாலோ இலக்கிய ஆர்வலர்களினாலோ தீர்மானிக்கபடுவதில்லை. பாமர மக்களால் பேசப்படும் போதுதான் அதன் ஜீவன் வாழும் நிலைக்கும். [ரசிகன் இல்லையெனில் கலைகள் இல்லை கலைஞனும் இல்லை அதேபோல் வாசகன் இல்லையெனில் இலக்கியங்கள் இல்லை எழுத்தாளனும் இல்லை என இருக்க மக்களால் பேசப்படவில்லை எனில் மொழி மட்டும் எங்கனம் நிலைக்கும் ]


இன்றைய இந்திய மொழிகள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆங்கில கலப்பு . ஆங்கிலத்தின் ஆதிக்கம் இந்திய மொழிகளில் நேரடியாக பிரதிபலிக்கிறது. ஆனால் அது தவிர்க்க முடியாதது .இதனால் நம் மொழிகள் தங்கள் பாரம்பரியத்தை இழக்க நேரிடுகிறது. பல சொற்கள் வழக்கத்திலிருந்து மறைந்து மொழியின் எல்லையை குறைக்கின்றன.மக்களிடம் அதிகரிக்கும் ஆங்கில மோகம் தமிழ் படிப்பதை கவுரவ குறைவாக கருத வைக்கிறது. ரயில் பயணங்களின் போது செய்தித்தாள் வார இதழ்களை தாண்டி ஏதேனும் தமிழ் புத்தகம் படித்தால் நம் சக பயணிகள் விசித்தரமாக பார்க்கிறார்கள். பெற்றோர்கள் கூட தம் குழந்தைகளின் அம்மா எனும் அழைப்பைவிட ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பில் ஆனந்தம் கொள்கிறார்கள்.என் நண்பர்கள் சிலர் கூட English medium என்று பெருமையாக கூறும் போது எனக்கு சிரிப்பு தான் இருக்கும். இன்றைய நவீன யுகம் தமிழில் உயர்கல்வி பயில்பவர்களை விநோதமாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.


"தமிழினம் உள்ளவரை தமிழ் வாழும் " என நம் சான்றோர்கள் சிலர் கூறுகிறார்கள். தமிழன் எனும் அடையாளத்தை இழந்துவிட்டு மொழி தெரியாமல் நம் சந்ததிகள் வெளிநாட்டிலும் நம் நாட்டிலும் வாழும் போது மொழி எப்படி நிலைக்கும். இன்று வாழும் பல இனங்கள் தங்கள் மொழியை இழந்து நிற்கின்றன.ஆக தமிழினம் முழுதும் அழியும் வரை தமிழ் வாழும் என கூறும் அளவுக்கு நமக்கு மொழிப்பற்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தற்போதைய நம் கல்விமுறை மொழியை மொழியாக நம்மை படிக்க விடுவதில்லை. ஒரு பாடமாக மட்டுமே பார்க்க படுகிறது . இவ்வாறு பாடமாக படிக்கப்படும் போது சுவை ,தனித்தன்மை ,சாராம்சம் போன்ற அடிப்படை தன்மைகள் எடுத்து கொள்ளப்படமாட்டா. இதனால் மொழியின் மீது ஒரு காதலோ பற்றோ ஏற்படாது. தமிழுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை .நவீன இலக்கியங்கள் செய்தலும் மாநாடுகள் சொற்பொழிவுகள் நடத்துவதும் இலக்கியவாதிகளை ஊக்கபடுதுவது மட்டும் போதாது .
குழந்தைகளிடம் தமிழின் மீதான ஆர்வத்தை ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் தமிழை மொழியாக கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி ஆய்வகம் (Language lab ) அமைத்து மொழித்திறனை ஊக்குவிக்கும் விதமாக கவிதை ,கதை கட்டுரை மற்றும் வார்த்தை விளையாட்டுகள் கற்பிக்க வேண்டும். தமிழை ஏட்டுசுரைக்காயாக உண்ணாமல் அதன் சுவையுனர்ந்து உன்ன வைக்க வேண்டும். மாணாக்கர்களிடம் நடத்தப்படும் இம்மாதிரியான போட்டிகள் மற்றும் தேர்வுகள் அவர்களில் ஆர்வத்தை அதிகரிப்பதோடு மொழியில் அவர்களின் சுயசிந்தனையை வளர்க்க உதவும். இதன்மூலம் மாணாக்கர்களிடம் தமிழின் மீது அதீத ஆர்வம் ஈடுபாடு போன்றவை ஏற்படும்.மேலும் தமிழ் பாட வேளைகளில் நல்ல தமிழ் உரையாடலை உறுதி செய்யலாம்.




இன்றைய நிலையில் தமிழ் முன்னேற்றம் என்பது பிற மொழி கலவாமல் செந்தமிழ் பேசுவது என்பது அல்ல.அது மிக கடினம் .( இன்றைய நவீன சூழல் மற்றும் நம் தமிழறிவு இவற்றை கொண்டு பார்க்கும் போது இது மிக மிக கடினம் ).செந்தமிழ் பேசினால் தான் மொழி நிலைக்கும் என்பதில்லை. இங்கு முன்னேற்றம் என்பது தமிழ்பற்றை ,ஈடுபாட்டை மட்டுமே குறிக்கும் . இவ்வாறு குழந்தைகளிடம் விதைக்கப்படும் தமிழார்வம் வளர்ந்து மரமாகி தமிழ் ஆண்டாண்டு காலங்கள் நிலைத்திருக்க உதவும்
பி.கு :
இந்த பதிவு இன்றைய நிலையை அப்படியே சொல்லவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே ஒழிய யாரையும் குற்றம் சாட்டவோ குறை கூறவோ எழுதப்படவில்லை .அவ்வாறு நீங்கள் எண்ணினால் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்

பாதை நீளும்

நம் பயணங்களும் தொடரும்

நன்றி வணக்கம்


அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

எங்கே செல்லும் இந்த பாதை - பகுதி 3

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் சினிமா பற்றிய ஒரு சிறு பதிவு. இந்த நூறு ஆண்டுகளில் தமிழ் சினிமா பல்வேறு தடைகற்களை கடந்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது.பேசாத சித்திரமாக ஆரம்பித்து நாடகத்தை முதுகெலும்பாக கொண்டு வளர ஆரம்பித்தது.முத்தமிழ் மூன்றின் உதவியால் மக்கள் மனதில் ஆழமாக வேருன்றவும் செய்தது.பின் அதன் வளர்ச்சி திரைகதை ,படமாக்கும் விதம் ,ஒலி /ஒளி அமைப்பு என பலவற்றிலும் கண்டு இன்று உன்னத நிலையில் உள்ளது

ஆனால் இந்த பதிவு சினிமா வளர்ச்சியை பற்றியது அல்ல. சினிமாவின் சமூக பொறுப்புணர்ச்சியை பற்றியது.ஒரு சாதாரண பொழுதுபோக்கு அம்சம் என்பதை தாண்டி வாழ்வியலின் ஒரு அங்கமாக மக்களோடு ஒன்றி விட்டது சினிமா. அது கலையா ?? அல்லது வணிகமா ?? என தெரியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கானோரின் உணர்வுகளை கட்டி போட்ட மாபெரும் சக்தியாக உள்ளது. ஆனால் இந்த சக்தியால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா ??


இன்றைய சினிமாவின் போக்கு எனக்கு விசித்திரமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான சினிமா நம்மை அதனுள் இழுத்து ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை நமக்கு அளிக்க வேண்டும். இந்த உலகத்தை புறந்தள்ளி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்றைய சினமா ஏதோ காமெடி ஷோ பார்ப்பது போல் உள்ளது ,நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்யும் செய்கையை பார்த்துவிட்டு வெறுமென சிரித்துவிட்டு வரவேண்டி உள்ளது. சில படங்களின் தாக்கம் என் மனதில் பல நாட்கள் ஓடி கொண்டிருக்கும். இன்று அவ்வாறு எடுக்கப்படும் படங்கள் ஏதோ மாற்றுத்திரை அல்லது ஆவணப்படம் (documentry ) என்ற ரீதியில்தான் மக்களால் பார்க்க படுகின்றன. இதற்க்கு முக்கிய காரணம் மக்களின் ரசனை.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத கதைகளங்கள் ஏராளம். தமிழ் சினிமா தனக்கென ஒரு வட்டத்தை எல்லையாக கொண்டு அதனுள்ளே பல பாதைகளை வகுத்துக்கொண்டு பயணித்து வருகிறது. இதனால் மக்களின் ரசனை விசாலமானதாக இல்லை. தலைப்பில் இருந்து விலகி செல்லவில்லை. இவற்றை சொல்லாமல் இருக்க முடியாது. இனி தலைப்புக்கு வருவோம். தமிழ் சினிமா தன் பொறுப்புகளை எவ்வாறெல்லாம் தட்டி கழிக்கிறது என்று பார்ப்போம்.தற்போது வரும் சில படங்களில் பள்ளி மாணவியான கதாநாயகியும் ,கதாநாயகனும் காதலிப்பதுபோலும் மணமுடிப்பதுபோலும் காட்சிகள் வருகின்றன. பள்ளியில் படிக்கும் (minor) பெண் காதல் காமம் காட்சிகளில் ஈடுபடுவது போல் காட்டுவது சமூகத்துக்கு கற்பிக்கும் தவறான பாடம் தானே ? காதலுக்கும் பருவ கிளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் ஏன் சொல்லவில்லை ?. தற்போது காதல் என்ற பெயரில் காட்டப்படும் காட்சிகள் கூட முகம் சுழிக்க வைக்கின்றன.தமிழ்ப்பெண் பற்றி கூறும் அவர்கள் ஒரு சராசரி தமிழ்பெண்ணை காட்சிபடுத்தவில்லை என்பது என் எண்ணம்.மேலும் தற்போது வரும் சில படங்களில் ஆசிரியர்களை அதிகம் அவமதிப்பது போல் காட்டுவதும் வருந்ததக்கது. அன்றைய சினிமா நாடகத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. நாடகத்தில் ஒப்பனையுடன் கூடிய நடிப்பும் பாட்டும் இருந்தால் போதும். ஆனால் இன்றைய சினிமாவின் வரையறை வேறுமாதிரி உள்ளது. இன்றைய சில படங்கள் எதார்த்த உலகை காட்டுகின்றன.எதார்த்தமான மக்களோடு அவர்கள் வாழ்வியலை சொல்லும் படங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு பேரால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி அது வாங்கும் விருதுகளை மட்டும் பொறுத்ததல்ல ,அதன் வணிக ரீதியிலான வெற்றி ,அதிக மக்களை சென்று சேர்வது என்பதிலும் உள்ளது என்பது என் கருத்து. அதுவும் பெரிய நிறுவனங்கள் சினிமாவில் முதலீடு செய்ய ஆரம்பித்த பிறகு சிறு முதலீட்டு படங்களின் வெற்றி குதிரைகொம்பாக மாறிவிட்டது . பெண்களையும் குழந்தைகளையும் வைத்து அவர்கள் உணர்வுகளை மீட்டி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் மிக குறைந்து வருவது துரதிஷ்டவசமானது. உலக தரத்திலான சினிமா என்பது ஹாலிவுட்டை மட்டும் கொண்டு சொல்லபடுகிறது. ஈரானிய படங்கள் போன்ற பிற நல்ல தரத்திலான படங்கள் புறக்கணிக்க படுகின்றன.

தற்போதைய படங்களின் நகைச்சுவை காட்சிகள் தரம் மெய்சிலிர்க்க வைக்கிறது (!!!!). இரட்டை அர்த்ததில் இல்லாமல் நேரடியாக அந்த அர்த்தத்திலேயே வசனங்கள் வருவது கொடுமை. தற்போதைய காலகட்டத்தில் எந்த படமும் மக்களின் எந்தவொரு அடிப்படை பிரச்சனைகளை பற்றியும் பேச வில்லை. கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்கள் மின் பற்றாக்குறை ,தமிழ் ஈழம் ,மீனவர் பிரச்சனை .அணு உலை போராட்டங்கள் குறித்து பேசின. வேறு காரணங்களுக்காக சென்சார் மற்றும் இதர பிரச்சனைகளை சமாளிப்பவர்கள் சமூக பிரச்சனைகளை சொல்வதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்க விரும்புவதில்லை. தற்போது கருத்துசுதந்திரம் இல்லையென சொல்லும் இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளை பற்றி ஏன் பேசவில்லை.

இசை என்பது மனதை வருடி சாந்தபடுத்திய காலம் போய் இன்று மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதாக உள்ளது . பாடல் வரிகள் பற்றி சொன்னால் இக்கட்டுரை முடிவிலி ஆகிவிடும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என பாரதி பாடிய தமிழ் மொழியின் இன்றைய பாடல்களின் கொலைவெறியை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெரிய நடிகர் ஒருவரின் அறிமுக பாடலொன்றில் வரும் வரி இது "தாய்ப்பால் உனக்கு கொக்கோ கோல (coca cola )" .ஈடு இணையற்ற அமிர்தமான தாய்ப்பாலை ஒரு ரசாயன கலவையோடு ஒப்புமைப்படுத்துவது சரியா ?.இப்படி வரிகளை மேற்கோள் காட்டினால் நிறைய சொல்லலாம். இங்கு யார் சமூக பொறுப்புணர்ச்சியை விட்டது.

இனி வரும் சினிமாவில் நம் அடையாளங்கள் .பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை மறைந்து விடும் அபாயம் உள்ளது. முற்போக்கான சிந்தனைகளோ ,சமூக விழிப்புணர்ச்சியோ இல்லாமல் சிரித்து மகிழும் ஒலி /ஒளி சித்திரமாக மட்டுமே சினிமா இருக்கும்.

என் கவலை சமுதாய முன்னேற்றத்துக்கு உதவாவிட்டாலும் சமூக சீர்கேடுகளுக்கும் ,பிற்போக்கான சிந்தனை வாதங்களுக்கும் ,மக்களின் வேற்றுமைகளுக்கும் காரணமாகி விடுமோ என்பதுதான். அதற்க்கு தீர்வு வணிக ரீதியில் மட்டும் சிந்திக்காமல் ரசிகனின் முன்னேற்றம் சமுதாய நிலைமை பற்றியும் நெறியாளர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்

பதிவின் நீளம் அதிகமானதுக்கு மன்னிக்கவும்

பி.கு :

இப்பதிவின் பயணம் இடையில் திசை மாறுவது போல் தோன்றலாம் . என் மனதில் நெடு நாளாக இருந்தவற்றை கொட்டிவிட்டேன் . (வழக்கம்போல் ) யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியுள்ளேன் .அப்படி காயப்படுத்தினால் நான் மன்னிப்பு கோருகிறேன். இதுவரை சினிமா பற்றி நான் எந்த பதிவும் எழுதியதில்லை. இந்த பதிவுக்கு வித்திட்ட இனிய நண்பர் Seenivasan Balakrishnan அவர்களுக்கு நன்றிகள் பல


அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி வணக்கம்

தமிழ் அறிவோம் பகுதி -6 பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்

பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்
ஆண் குழந்தையாய் இருந்தால்:

1. காப்பு: எப்பவும் முதலில் ‘காப்பு’ சொல்லிட்டுதான் தொடங்கணும்.

2. செங்கீரை : செங்கீரை என்பது ஒரு வகைக் கீரை. பிறந்த ஐந்து மாதத்தில் குழுந்தைக்குக் கழுத்து நிற்கும். மெல்ல, கீரையைப் போலத் தலையை எடுத்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைக்கும்; பார்க்கும். அப்படிப் பார்ப்பதை வருணித்துப் பாடுவார்கள்.

3. தால் : தால் என்றால் நாக்கு. தாலை ஆட்டி ஒள ஒள ஒள ஒள ஒள ஒள ஆயி என்றெல்லாம் சப்தம் எழுப்பிப் பாடுவது தாலாட்டு. குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.

4. சப்பாணி : சப்பாணி என்றால் ‘கைகளைக் கொட்டுவது’ என்று பொருள். கொஞ்சம் வளர்ந்து எழுந்து உட்காரும் குழந்தை, கைகளைக் கொட்டும். அந்தப் பருவத்தைப் பாடுவது சப்பாணிப் பருவம்.

5. முத்தம்: குழந்தையை முத்தம் தரச் சொல்லிக் கேட்பது.

6. வாரானை: எழுந்து நடக்கத் தொடங்குகிறது குழந்தை. ‘வாவாவா வாவாவாவா,’ என்று ஒவ்வொரு அம்மாவும் தன்னை நோக்கி வரும்படியாகத் தன் குழந்தையைக் கை நீட்டிக் கூப்பிடுவாள் இல்லையா, அந்தப் பருவம் இது.

7. அம்புலி: நிலாவைக் காட்டிச் சோறூட்டுதல்.

8. சிறுபறை: கையில் சின்னதாக ஒரு மேளத்தையும், இன்னொரு கைக்கு ஒரு குச்சியையும் (குணில் என்று சொல்வார்கள்) கொடுத்துவிட்டால், அதுபாட்டுக்கு கொட்டிக்கொண்டு விளையாடும்.சப்பாணி கொட்டுவது, சிறுபறை கொட்டுவது எல்லாமே, சின்னக் கைகளுக்குத் தரப்படும் பயிற்சிகள்தாம்.

9. சிற்றில்: கொஞ்சம் வளர்ந்த குழந்தை மணலால் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்வது.

10. சிறுதேர்: எந்தக் குழந்தைக்கும் வண்டி உருட்டப் பிடிக்கும். சின்னதாக ஒரு தேர் பண்ணிக் கொடுத்துவிட்டால் அதை இங்கேயும், அங்கேயும் இழுத்துக் கொண்டு நடை பழகும். அந்தப் பருவம் இது.

பெண் குழந்தைகள் என்றால் கடைசி மூன்றுக்குப் பதிலாக

8. கழங்கு ஆடுதல்,

9. அம்மானை ஆடுதல்,

10. ஊஞ்சல் ஆடுதல்

என்று வரும்.

மன்னன் மகள்- புத்தகம் பற்றிய பேச்சு

மன்னன் மகள் புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மன்னன் மகள் என்ற வரலாற்று புதினம் படித்தேன்.தன் பிறப்பின் மர்மத்தை தேடி புறப்படும் ஒரு வாலிபன் தன் புத்திசாலிதனத்தால் எப்படி பல பேரின் வாழ்கையை மாற்றுகிறான் என்பதே கதை.பொதுவாக ராஜதந்திரம் மிகுந்த அமைச்சர் பெருமக்களால் ஆட்டுவிக்கப்படும் கதாநாயகன் என்று இல்லாமல் இதில் கதாநாயகன் தன் சாதுர்யத்தால் எப்படி பல பேரை மாற்றுகிறான் என்பதை சுவையாக கூறி இருந்தார்  சாண்டில்யன்.


நாகை சூடாமணி புத்த விகாரத்தில் வளர்க்கப்பட்ட கரிகாலன் எனும் வாலிபன் தன் பிறப்பின் ரகசியத்தை அறிய தஞ்சை நோக்கி பயணமாகிறான். அங்கு அவன் துறவி வேடத்தில் உள்ள சேர ஒற்றனை  சந்திக்கிறான். அவன் சோழரிடம் இருந்து திருடிய செங்கதிர் மாலை சந்தர்ப்பத்தால்  கரிகாலனிடம் சிக்குகிறது. ஒற்றனின்  தவறான வழிகாட்டுதலால்அரையன் ராஜராஜன் பாசறைக்கு செல்ல வேண்டிய அவன்  வேங்கி  நாடு செல்ல அங்கு காவலர்கள் துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி வசந்த மண்டபத்தில் தஞ்சம் அடைய வேங்கி மன்னன் மகள் நிரஞ்சனா தேவியை சந்திக்கிறான். வேங்கி நாட்டில் சோழர் ஆதரவுடன் நரேந்திரனும் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதரவுடன் விஜயாதிதணும் போட்டியிட , ஜெயசிம்மன் நரேந்திரனை மன்னனாக்கி மக்கள் அவனை வெறுக்கும்படி செய்ய முயல்கிறான்.இதை முறியடிக்க நிரஞ்சனா தேவிக்கு உதவுவதாக வாக்களிக்கிறான் கரிகாலன். தன் சாதுர்யத்தால் சோழ தூதர் பிரம்ம மாராயர் மற்றும் ஜெயசிம்மன் ஆகியோரை நம்ப வைக்கிறான். மேலும் அரிஞ்சயன் எனும் புல்லுருவியையும்  அடியாளம் காண்கிறான் .
விஜயாதித்தனை சந்திக்க மேலை சாளுக்கிய நாடு செல்ல அங்கு அரையன் ராஜராஜன் மகள் செங்கமல செல்வியை சந்திக்கிறான். அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கரிகாலன் அரையன் ராஜராஜன் பாசறைக்கு செல்கிறான். அங்கு அவனை தன் மகன் போல பாவிக்கும் அரையன் ராஜராஜன் போர் பயிற்சிகளையும் வியுகங்களையும் கற்று தருகிறார். வில்வித்தை கற்று தரும் செங்கமல செல்வி கரிகாலனிடம் மையல் கொள்கிறாள். ராஜேந்திர சோழர் தன கங்கை படையெடுப்பை தொடங்க முதலில் சாளுக்கியருடன் போர் செய்ய வந்திய தேவரை அனுப்புகிறார். போர் மந்திராலோசனையில் போர் தேவையில்லை என கூறும் கரிகாலன் சோழ படை தடங்கல் இன்றி முன்னேற வேங்கி நாட்டை விஜயாதிதனுக்கு தாரை வார்க்க அவனை நிரஞ்சனா வெறுக்கிறாள். சோழ பெரும்படை மாசுணி தேசத்தை முற்றுகையிட அந்த மன்னன் கோட்டைக்குள் இருந்து வெளி வராமல் சமாளிக்கிறான் . உணவு பொருள் உள்ளே செல்லும் ரகசிய பாதையை அறியும் கரிகாலன் தன் சிறு படையுடன் உணவு கொண்டு வருபவன் போல் உள்ளே நுழைகிறான். அந்நாட்டின் தளபதி பிரதாபத்திரன் கரிகாலன் சோழ படை தலைவன் என்பதை அறிந்து கொண்டு உன் பிறப்பின் ரகசியம் வேண்டுமானால் சோழர்களின் போர் வியூகத்தை சொல்ல சொல்கிறான். தவறான வியுகத்தை சொல்ல சோழர் படை பிரதாபத்திரன் படையை நிர்மூலமாக்குகிறது. தான் இறக்கும் தருவாயில் கரிகாலனிடம் அவன் சமந்தப்பட்ட தனக்கு தெரிந்த உண்மையை சொல்லிவிட அரையன் ராஜராஜன் கலங்குகிறான். பின் கங்கை வரை பல தேசத்தை வெல்லும் சோழர் படையிலிருந்து சோழ நாட்டுக்கு கரிகாலன் விஜயம் செய்ய அவனை அரச மரியாதையுடன் வரவேற்கும் ராஜேந்திரன் அவன் தோற்றத்தை வைத்து அவன் அரச பரம்பரையை சேர்ந்தவன் என முடிவு செய்கிறான் . கரிகாலன் தாய் மணிமேகலையை கொண்டு கரிகாலன் பற்றிய மர்மத்தை அறிய முயலும் ராஜேந்திரனின் முயற்சிகள்  பலனளிக்காமல் போகிறது . கரிகாலனிடம் அவன் பிறப்பின் ரகசியத்தையும் அது உடைந்தால் சோழ மண்டலத்தில் ஏற்படும் பெருவிளைவுகளையும் கருத்தில் கொண்டு அதை அம்பலபடுத்தகூடாது என சத்தியம் வாங்குகிறார் அவன் தாய் .

வேங்கி  நாட்டுக்கு படையெடுத்து செல்லும் கரிகாலன் அங்கு நரேந்திரனை அரியணையில் அமர வைக்கிறான் . மேலும் தன் நிலையை எடுத்து கூறி நிரஞ்சனாவின் காதலை புறக்கணிக்க முயல ,அவள் கரிகாலனுக்காக தன் நாட்டையே விட்டுவிட்டு வருகிறாள் . இறுதியில் ரகசியத்தை காக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் ??? செங்கமல செல்வியின் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இதன் முடிவு


தான் யாரென்று அறியாமல் வரும் இளைஞன் கரிகாலன் தன் அறிவு கூர்மையால் சூழ்நிலைகளை சமாளிப்பதும் மற்றவர்களை நம்ப வைப்பது என பிரம்மிக்க வைக்கிறார். கடைசியில் தான் யார் என்பது தெரிந்தும் நாட்டின் பிற்கால வாழ்வை முன்னிட்டு தியாக உணர்வோடு எடுக்கும் முடிவு நயம். கரிகாலனிடம் காதல் கொண்டு அவனை நம்பி அவன் செயல்களால் அதிர்ந்து வெறுக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தவித்து கடைசியில் கரம் பிடிக்கிறார். காலனும் கண்டு அஞ்சும் காவலன் எனும் பெயர்பெற்ற சோழ சேனாதிபதி அரையர் ராஜராஜன் , கரிகாலனிடம் ரகசியத்தை சொல்ல முடியாமல் தவிப்பது அருமை. வீரம் மிகுந்த பெண்ணாக செங்கமல செல்வி ,கடைசி வரை கரிகாலனை வெறுக்கும் பிரம்ம மாராயன்  என பல கதாபாத்திரங்கள் கதைக்கு மெருகூட்டுகின்றன.

சேரன் போரில் தோற்று  பறிகொடுத்த செங்கதிர் மாலையை பறிகொடுக்கும் சேர ஒற்றன் கடைசி வரை கரிகாலனை தொடர்கிறார் .


புத்திசாலித்தனம் அரசியல் மற்றும் போர்களில் எத்தகைய பங்கை ஆற்ற முடியும் என்பதற்கு இந்நூல் மிக சிறந்த உதாரன்ம்

சாண்டில்யனின் இரண்டு நாயகிகள் என்ற யுக்தி இந்த நாவலிலும் தொடர்ந்துள்ளது
பி .கு :

தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவு காலதாமதமாகிவிட்டது. மன்னன் மகள்  ஒரு நல்ல பயணத்தை கொடுத்தது. வெகு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!!

வசந்த காலம்,மாதவியின் மனம்- புத்தகம் பற்றிய பேச்சு

சென்ற வாரம் சாண்டில்யன் அவர்கள் எழுதிய இரு நாவல்கள் படித்தேன்

1. மாதவியின் மனம் :

 தென்னிந்தியாவின் அலெக்ஸான்டார் என்று அழைக்கப்பட்ட சமுத்திரகுப்தர் பல்லவ மன்னன் விஜயக்கோபன் மீது படை எடுத்த போது சோழ இளவரசனான சேந்தன் தனது ராஜதந்திரத்தால் காஞ்சியை அழிவிலிருந்து காப்பாற்றினான். ஒரு மாணவனாக காஞ்சியில் நுழைந்து மாதவி என்ற மங்கையுடன் காதல் வயபபடுகிறான். கடைசியில் எவ்வாறு அவன் காஞ்சியை அழிவிலிருந்து காப்பதோடு  எப்படி மாதவியை கரம் பிடிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திருப்பங்கள் உடணும் காதல் வர்ணனைகளுடணும் அழகாக சாண்டில்யன் சொல்லி இருந்தார்


2. வசந்த காலம்:

சேரமான் இரும்பொறை பெருந்திரல் சென்னியின் மீது படை எடுக்கிறான். அவனிடம் படை தளபதியாக உள்ள இளந்திரையன் தனது முறை பெண்ணான சென்னியின் மகளை காதலிக்கிறான். சேரமானின் படையெடுப்பில் இருந்து சென்னியின் நாடு தப்பியதா இளந்திரையன் காதல் கைகூடியதா என்பது கதையின் முடிவு.