November 20, 2013

சேரன் செல்வி -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய சேரன் செல்வி வரலாற்று புதினம் படித்தேன். மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நவீனம். மாலிக் கபூரின் தென் நாட்டின் மீது படையெடுத்து கொள்ளையை முடித்து சென்று விட்ட பிறகு அவன் தளபதி குஸ்ரூகான் தென்னிந்தியாவில் ஒரு முகம்மதிய அரசை நிறுவ எண்ணுகிறான். வீர பாண்டியன் -சுந்தர பாண்டியன் இடையே மூளும் வாரிசுரிமை போட்டியை தனக்கு சாதகமாக்கி தன் ஆசையை நிறைவேற்ற முயல சேர மன்னர் ரவிவர்மன் குலசேகரன் எங்கனம் அதை முறியடிக்கிறார் என்பதே கதை ←

பாண்டிய நாட்டில் இருந்து புலவர் ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் வாலிபன் இளவழுதி சேர நாட்டின் தளபதியாக நியமிக்க படுகிறான்.சந்தித்த பொழுதே சேர இளவரசி இளமதி மேல் மையலும் கொள்கிறான். மாலிக் கபூரின் ஒற்றன் அஜ்மல்கான் மன்னரை கொல்ல சதி செய்கிறான். அவன் இளவழுதியையும் தன் சதியில் இழுக்க பார்க்கிறான். போர் திட்டங்களை மாற்றி கூறி அவனை இளவழுதி ஏமாற்றுகிறான். மதுரையை ஆளும் வீரபாண்டியன் குஸ்ரூகானுக்கு உதவ அவர் மீது சினம் கொண்டு படையெடுக்கும் சேர மன்னர் அவரை இளவழுதியின் துணையோடு வெல்கிறார். அப்பொழுது சுந்தர பாண்டியன் கலகம் செய்ய அவனை அடக்க செல்லும் இளவழுதியை சமாதானம் பேச அழைத்து வஞ்சித்து கத்தியால் குத்தி விடுகிறான் .
சேர மன்னர் குஸ்ரூகானை வென்றாரா ? இளவழுதி உயிர் பிழைத்தானா? கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள் என சொல்லப்பட்ட இளமதியை இளவழுதி மணம் புரிந்தானா போன்ற கேள்விகளுக்கு விடை கூறி விடைபெற்றது புதினம்.


தமிழ் புலவர் ,கவி சமுத்திரபந்தன் ,கவிபூசணன் என பல்வேறு கவிஞர்களின் உரையாடல்கள் மிகவும் அருமை. இளவழுதி -இளமதி காதல் காட்சிகளில் இன்பரசம் சொட்டுகிறது. தமிழரின் பெருமையை மீண்டும் உயர்த்த பாடுபட்ட மன்னர் ரவிவர்மன் குலசேகரன் பிரம்மிக்க வைக்கிறார்

போர்க்கள காட்சிகள் ,படை அணிவகுப்பு ,போர் வியுகங்கள் என தனக்கே உரித்தான பாணியில் கதையை அற்புதமாக நகர்த்திஇருந்தார் சாண்டில்யன்



சேரன் செல்வி
வகை :சரித்திர நாவல்
ஆசிரியர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதப்பகம்
விலை :145


↮எண்டமூரி விரேந்தர்நாத்தின் மற்றுமொரு அரிய படைப்பான சாகர சங்கமம் எனும் நாவல் படித்தேன். தான் சரியாக இருப்பதாகவும் மற்றவர்களும் தன்னிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தரளா எனும் பெண்மணியால் வரும் விளைவே சாகர சங்கமத்தின் கதை .

தரளா ,தன் காதலை பணம் எனும் மாயையால் இழந்த ஆனந்தன் மற்றும் தன் தோழிக்காக தன் காதலை தியாகம் செய்து தன் காதலருக்காக வாழும் பிருந்தா ஆகிய மூன்று நதிகளின் பிணைப்பு மற்றும் பிரிவே சாகர சங்கமம் கதை. கதையின் ஓட்டத்தை காவிரி நதியின் ஓட்டத்தோடு சேர்த்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர்.கதையை அந்தந்த கதாபாத்திரங்களே சொல்வது போல் நகர்த்தி இருப்பது சிறப்பு.பல்வேறு திருப்பங்கள் ,ஆச்சர்யங்கள் என முதல் அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் கதையின் வேகம் கடைசி அத்தியாயம் வரை தொடர்வது சிறப்பு. படிப்பதற்கு ஒரு நல்ல இனிய அனுபவத்தை வழங்கி தன் சங்கமத்தை நிறைவு செய்தது நாவல்


சாகர சங்கமம்
வகை :சமூக நாவல்
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு )
மொழிபெயர்ப்பு :கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை :110

கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு

கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு


மு.கு : இந்த புத்தகம் படிப்பதால் நீங்கள் கம்யூனிஸ்ட்டாக மாறி விடமாட்டீர்கள்.கம்யுனிசம் குறித்து வெளியே சொல்லப்படும் பல குறைகளையும் தவறுகளையும் தர்க்க ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மறுக்கும் முயற்சியே இது. இதை படிப்பதால் உங்கள் பொன்னான நேரம் வீணாகாது என நான் உறுதி கூறுகிறேன். சமீப காலங்களில் நான் படித்ததில் இது சிறந்த புத்தகம் என்பது என் கருத்து. இது உலகம் மீதான என் குறுகிய பார்வையை எனக்கு உணர்த்தி விசாலமாக்க உதவியது

தோழர் ஜவகர் எழுதி நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரையே இது. அதிக அளவில் விற்று சாதனை செய்துள்ள இந்த புத்தகத்தை பெரும் தேடலுக்கு பின் அண்மையில் வாங்கினேன்.
முதலாளித்துவத்தின் தோற்றமும் அதனால் உலகில் ஏற்ப்பட்ட பல விளைவுகளில் இருந்து இந்த புத்தகம் ஆரம்பிக்கிறது. முதலாளித்துவ நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமித்து அவற்றை எவ்வாறு சுரண்டினார்கள் என்பதையும் எவ்வாறு காலனி நாடுகள் உருவாயின என்பதையும் அழகாக சித்தரித்திருக்கிறார் இதன் ஆசிரியர் .


முதலாளித்துவத்தின் சித்தாந்தம் கொலையில் தொடங்கியதாகவும் கம்யுனிசத்தின் சித்தாந்தம் அமைதியில் தொடங்கியதாகவும் கூறி அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம்மை ஆர்வத்துடன் செல்ல வைக்கிறார் மார்க்சிய தத்துவம் ,பொருளாதாரம் போன்றவற்றையும் ,கருத்து முதல் வாதம் ,பொருள் முதல் வாதம் இயக்கவியல் போன்ற கோட்பாடுகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தந்திருப்பது சிறப்பு


என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த பக்கங்கள் ,கம்யுனிச கோட்பாடுகளையும் தத்துவங்களையும் Theory of relativity மற்றும் quantum theory போன்றவற்றை கொண்டு விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருப்பதுதான்.இது எனக்கு அபூர்வமாக தோன்றியது ஏனெனில் இவ்வாறு நான் கேள்விபட்டது கூட கிடையாது


மார்க்சியத்தை விஞ்ஞானம் என விளக்கியிருப்பதும் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மார்க்ஸ் ,எங்கெல்ஸ் ,லெனின் ஆகியோரின் பங்களிப்பை பற்றியும் தெளிவாக உணர முடிந்தது.
புரட்சி ஏற்பட்டு சோவியத் ரஷ்யா (USSR ) உதித்தது ,அதன் பிரம்மிக்க தக்க அசுரவேக வளர்ச்சி ,அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள் என அனைத்தையும் தந்திருப்பது நிறைவு .


ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யுனிசத்தின் பாதை மாற்றங்கள் மற்றும் அதன் காரணங்கள் தந்திருப்பது சிறப்பு

இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றம் அது சந்தித்த பிரச்சனைகள் ,சாதனைகள் மற்றும் பிளவு என இரண்டாம் பகுதி நிறைகிறது

இப்புத்தகத்தின் சில துளிகள்

➤பொதுவுடைமை குறித்து பாரதியார் ,பாரதிதாசன் போன்ற இந்திய கவிஞர்களின் கவிதைகளை இடைசெறுகலாக தந்து படிக்கும் ஆர்வதை கூட்டி இருக்கிறார்கள்

➤பல அறிய புகைப்படங்களை காண முடிந்தது

➤ மூலதனம் உயர்ந்தால் வேலைவாய்ப்பின்மை தான் உயரும் என்பதை இந்தியாவை வைத்து சொல்லி இருப்பது சிறப்பு

➤அதிக புத்தகங்களிலும் அரசு கருவூலங்களிலும் இருந்து பல புள்ளி விபரங்களை கொடுத்திருப்பது சிறப்பு

➤ நவம்பர் புரட்சியின் திக் திக் 26 மணி நேரங்களை விவரித்திருக்கும் விதம் அருமை

➤முதலாளி -தொழிலாளி வர்த்தக உறவுகள் ,விஞ்ஞான சோசியலிசம் என நீள்கிறது

➤ சுஜாதா எழுதிய இரு புத்தகங்கள் தொடர்ந்து விமர்சித்தும் மறுத்தும் எழுதி என் அடுத்த தேடலை துவக்கி வைத்துவிட்டார் ஜவகர்

கம்யுனிசம் நேற்று-இன்று -நாளை
ஆசிரியர் : இரா .ஜவகர்
வகை : கம்யுனிசம் பற்றிய ஆய்வு
முன்னுரை : தோழர் நல்லக்கண்ணு மற்றும் தோழர் R .சௌந்திரராஜன்
பதிப்பகம் : நக்கீரன்
விலை : 160




பி.கு :

முன் குறிப்பில் அனைத்தையும் சொல்லிவிட்டேன்

அதனால்



நன்றி வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

November 17, 2013

தூக்கு தண்டனை-ஒரு விவாதம்

திரு.எண்டமூரி விரேந்தர்நாத் அவர்கள் எழுதிய தூக்கு தண்டனை எனும் நாவல் படித்தேன்.ஒரு நாவலாக மட்டும் முடிந்து விடாமல் என்னுள் பல விவாதங்களை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவு, இருப்பினும் பல்வேறு திருப்பங்களுடன் மிக அருமையான பயணத்தை நல்கியது.


தூக்கு தண்டனையின் அவசியம் குறித்து என்னை யோசிக்க வைத்துவிட்டது. தூக்கு தண்டனையை ஒழிக்க போராடும் ஒருவன் ஒரு நாடகம் ஆடி உலகத்துக்கு தூக்கு தண்டனையின் கொடுமையை புரிய வைக்க முயல்கிறான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவனை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர் தன் வஞ்சத்தை தீர்த்து கொள்கிறார்.கடைசியில் அவன் எப்படி மீள்கிறான் என்பதே கதை.


தூக்கு தண்டனை தேவையில்லை என எழுப்பப்படும் கூக்குரல்கள் அதிகரித்து வருகின்றன . ஒரு மனிதனின் உயிரை மற்றவர்கள் சட்டம் என்ற ஒன்றை கொண்டு எடுப்பது தவறு என சிலர் கூறுகிறார்கள் . தண்டனை என்பது ஒருவன் செய்த தவறுக்கு அளிக்கப்படும் பிராயசித்தம் ஆகும்.அப்படி இருக்க தூக்கு தண்டனை என்ற பெயரில் அவனை திருந்த முயற்சிக்காமல் கொலை செய்வது எப்படி சரியாகும் ?? ஒரு கொலைகாரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் போது எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது.தன் முடிவு தெரிந்த ஒரு மனிதன் தினமும் செத்து செத்து உயிர் வாழும் ஒரு நடைபிணமாக மட்டுமே உயிர் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாளை எண்ணி கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது .ஒரு கதையின் முடிவு உங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டால் உங்களால் ஆர்வமாக படிக்க முடியாது அதே போல் தன் முடிவு தெரிந்த ஒருவனின் வாழ்நாள் நிச்சயம் வெறுமையாக எந்த பிடிப்பும் இல்லாமல் நகரும்.எவ்வளவு பெரிய தண்டனை ??

இதனாலேயே பல்வேறு மரண தண்டனை கைதிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டனர். சில அரிதான குற்றங்களுக்கு சில நாடுகளில் மரண தண்டனை விதிக்கிறார்கள். அந்த நாடுகளில் எல்லாம் குற்றங்கள் அதிகரிக்கவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுவாக தண்டனைகள் குறித்த இரு கருத்துருக்கள் உள்ளன.முதல் கருத்து தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும் என்பது .இதில் எனக்கு உடன்பாடில்லை.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான சட்டங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் வலிமையானதாக இருந்தும் (கற்பழிப்பு குறித்து அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள சட்டங்களை கேட்டால் ஆச்சர்ய படுவீர்கள் .) நம் நாட்டில் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன. சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை மிக கொடுமையானது .இருப்பினும் அந்த நாட்டிலும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன(அவர்கள் சட்டம் தானே எட்டு மாத கர்ப்பிணியை கட்டாய கருக்கலைப்பு செய்து கொல்ல சொன்னது )

இரண்டாவது கருத்து ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் மிக சிறந்த தண்டனை அவனை மன்னிப்பது ஆகும் .அதாவது அவனை மன்னித்தால் அவன் மனசாட்சி அவனை உறுத்தி அவனை நல்ல படியாக வாழ வைக்கும் என்பதாகும் .இதிலும் எனக்கு உடன்பாடில்லை ஏனெனில் நாட்டில் வாழும் அனைவரும் மனசாட்சியுடன் தான் வாழ்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது .காரணம் மனிதன் மட்டும் இங்கு வாழ்வதில்லை மனிதன் என்னும் போர்வையில் ஈவு, இரக்கம் மற்றும் மனித்தன்மையற்ற மிருகங்களும் வாழ தானே செய்கின்றன.அவர்களை கொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.ஒருவன் செய்யும் தவறுக்கு தண்டனையே இல்லையெனில் அவன் மனம் குற்றம் செய்வதை நோக்கி சிந்திக்காதா ??

புத்தர் பிறந்த நாடு இது மனிதனை மன்னிக்கும் மனப்பான்மை மேலோங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர் .சில குற்றங்களை மறக்கவே முடியாதபோது மன்னிப்பது எங்கனம் .(உதாரணம் நொய்டா நிதாரி படுகொலைகள் ).இன்றும் சிலவற்றை நினைக்கும் போது இதயம் கனக்கிறது . சட்டத்தினால் நிரபராதி என சொல்லப்படும் அனைவரும் அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிவிட முடியாது.சட்டத்தின் நெளிவு சுளிவுகளால் தப்பித்த அவர்களை ஒன்றும் செய்ய முடியாத சட்டம் சிலருக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்குவதும் எப்படி சரியாகும்.

நம் சுதந்திர போராட்ட தியாகிகள் சிறையில் அனுபவித்த தண்டனையை விட மரண தண்டனை கொடுமையானதா?. ஒரு திரைபடத்தில் சத்ய ராஜ் சொல்வார் மரணம் என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு அது எப்படி தண்டனையாகும் என்று ? . அது போல் மரணத்தை தண்டனையாக வழங்குவது அந்த மாதிரி குற்றங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்து கொள்ளும் என சொல்ல முடியமா?? .


இல்லை இந்த உலகில் மனிதனாக வாழ தகுதியே இல்லாத ஒருவனை கொல்லாமல் பாதுகாத்து வருவது சரிதானா??

என்ன இது மாத்தி மாத்தி பேசறான்னு பாக்கறீங்களா

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை

இவ்வளவு விவாதங்கள் என்னுள் நடந்த போதும் என் சிற்றறிவுக்கு எதுவும் எட்ட வில்லை .

உங்கள் கருத்தை சொல்லுங்கள் எனக்கு ஏதாவது தெளிவு ஏற்படுகிறதா என்று பார்ப்போம்




மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி வணக்கம்

இனி அந்த புத்தகம் பற்றிய தகவல்
தூக்கு தண்டனை
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு)
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
விலை :170


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

 ஒரு சமூக வலைதளத்தின் இந்த பதிவின்  பின்னூட்டத்தில் இருந்து


ஜலதீபம்-புத்தகம் பற்றிய பேச்சு

சாண்டில்யன் மகராஷ்டிராவை வைத்து எழுதிய ஜலதீபம் என்ற புதினம் படித்தேன். பிரிட்டிஷ் ,போர்த்துக்கீசியர்களின் கடலாதிக்கத்தை முறியடித்து அரபிக்கடலில் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிகரற்ற கடல்வீரராக விளங்கிய கனோஜி ஆங்க்ரேயின் கதைதான் இது. மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் கடற்கொள்ளையர் என்றும் மக்களால் ஸார்கேல் (கடற்படை தளபதி) என்றும் அழைக்கப்பட்ட ஆங்க்ரேயின் கடலாதிக்கத்தையும் அவர் போர்களையும் பற்றி படிக்கும் போது மெய்சிலிர்கிறது. இனி கதைசுருக்கம்

{முன் கதை சுருக்கம்: மராதியத்தின் ஒப்பற்ற வீரரான சிவாஜி நிர்மாணித்த சாம்ராஜ்யத்தை அவருக்குப்பின் அவர் மகன் சாம்பாஜி சரியாக நிர்வகிக்காதலால் மொகலாயர் ஆதிக்கம் அதிகரிக்க சாம்பாஜி சூழ்நிலையால் தப்பி தஞ்சை வருகிறார் அங்கு ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொள்ள ஒரு மகவும் பிறக்கிறது. அவருக்கு பின் மராத்தியத்தை மொகலாயர் ஆதரவு பெற்ற ஷாஹூவும் தாராபாய் ஆதரவு பெற்ற சிவாஜியும் ஆண்டுவருகிரார்கள். தஞ்சையில் வளர்ந்து வரும் மூன்றாவது மகன் வீரன் ஒருவனால் கடத்தப்பட அவனை கண்டுபிடிதக்க இக்கதையின் நாயகன் தஞ்சையில் இருந்து புறப்படுகிறான் }




மகராஷ்டிராவின் மூன்றாவது வாரிசை கண்டுபிடிக்க தஞ்சையில் இருந்து வரும் வாலிபன் இதயசந்திரன் பயணித்த கப்பல் கடற்போரில் மூழ்க கரை ஒதுங்கும் அவனை மகராஷ்டிராவில் ஒப்பற்ற செல்வாக்கும் மரியாதையும் உடைய பிரும்மேந்திர சுவாமி காப்பாற்றுகிறார். அங்கு அவன் ஷாஹூவின் மருமகள் பானுமதி தேவி மற்றும் கனோஜி ஆங்க்ரே ஆகியோரை சந்திக்கிறான். தாராபாய்யின் ஸார்கேல் ஆங்க்ரேயை வெறுக்கும் பானுமதி அவரை சிறை செய்ய இதயச்சந்திரனை நாடுகிறார். அவனை தன் அரசியல் லாபத்துக்காக உபயோகிக்க அவனை ஆங்க்ரேயின் பரம வைரி ஸித்திகளிடம் தூது அனுப்புகிறார். அங்கு அவன் ஆங்க்ரேயுடன் சேர விரும்புவதாக தெரிவிக்க அவன் சிறைபடுகிறான்.

அவனை ஆங்க்ரேயின் மகள் மஞ்சு காப்பாற்றி அவள் கப்பலான ஜலதீபத்தில் ஸ்வர்ணசதுக்கம் அழைத்து செல்கிறாள் . அங்கு மாலுமியாக பயிற்சி பெற்று சிறந்த கடல் வீரனாக உருவாகும் அவனை ஜலதீபத்தின் உபதளபதியாக நியமிக்கிறார் ஆங்க்ரே. மஞ்சுவுக்கும் சந்திரனுக்கும் காதல் மலர்கிறது. ஒருமுறை ஆங்கிலேய கப்பலை கொள்ளையிடும் போது காதரின் எனும் மங்கை சிறை பிடிக்க படுகிறாள் ,இதனால் மஞ்சுவுக்கும் அவனுக்கும் இடையே ஊடல் ஏற்படுகிறது .

காதரினை ஒப்படைக்க கொலாபா செல்லும் சந்திரனை தன் காம இச்சைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள முயலும் அவள் இனத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கிறாள் .இதனிடையே ஆங்க்ரேயை ஒடுக்க ஷாஹூ பாஜிராவ் பிங்க்லே தலைமையில் படை திரட்டுகிறார் அவளை வெள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டு கடல் பிராந்தியத்தில் அமைதி வேண்டி பம்பாய் செல்லும் இதயச்சந்திரன் கவர்னர் ஏஸ்லாபியை சந்திக்கிறான் .

அவனை சிறை செய்ய பிரும்மேந்திர சுவாமியும் பானுமதியும் முயல அவனை காயத்துடன் கவர்னர் காப்பாற்றுகிறார். அவனுக்கு எமிலி எனும் நர்ஸ் சேவை புரிகிறாள். கவர்னரின் காரியதரிசி பிரவுன் அவருக்கு எதிராக சதி செய்ய அவரை இதயசந்திரன் அடித்து விடுகிறான் .இதனால் கவலை கொண்ட ஏஸ்லாபி அவனை நர்ஸ் உடன் தப்ப செய்து நர்ஸ் அவனை காப்பாற்றி கொண்டு ஓடிவிட்டதாக பிரச்சனையை முடிக்கிறார்.

தப்பி வரும் அவன் பல குழப்பங்களுக்கு மத்தியில் திருட்டுதனமாக மஞ்சுவை மணம் முடிக்கிறான்.தரை படை தலைவனாக நியமிக்கப்படும் அவன் போர் வியூகத்தின் படி கல்யான் கோட்டையை பிடிக்கிறான் .அப்போது நிம்கர்(அவன்தான் தஞ்சையில் இருந்து மகவை கடத்தி வந்தவன் ) ஆங்கரேயின் தூதுவனாக வருகிறான். போரில் மிக பெரிய பிங்ளேயின் படையை இதயசந்திரன் தன் வியுகத்தால் உடைத்து வெற்றி கொள்கிறான் . அப்போரில் நிம்கர் காயமடைய அவனுக்கு சிகிச்சை அளிக்கிறான். தொடர்ந்து முன்னேறும் ஆங்க்ரே பல கோட்டைகளை கைப்பற்றுகிறார் .

மிகசிறந்த ராஜதந்திரியான பாலாஜி விஸ்வநாத் தன் சாமர்த்தியத்தால் ஆங்க்ரேயை சமாளித்து ஒரு ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி ஒன்றுபட்ட மராதியத்தின் ஸார்கல் ஆக நியமனம் பெறுகிறார் ஆங்க்ரே. நிம்கரை அழைத்து வரும்படி பாலாஜி ஆணையிட மறுக்கும் இதயசந்திரன் ,கல்யான் கோட்டை பொறுப்பை தன் உபதளபதி சுகாஜியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்கருடன் தமிழகம் தப்ப முயலும் (அவனிடமிருந்து உண்மை வரவழைக்க முடியாததால் ) அவனை மஞ்சு மூலம் கைது செய்கிறார் பாலாஜி. மஞ்சு சூல் கொண்டிருப்பதால் தன் மகள் எதிர்காலம் குறித்து கனோஜி கவலை கொள்கிறார் .நீதி தவறாத பாலாஜி விஸ்வநாத் பல வெற்றிகள் பெற்று மகராஷ்டிராவின் புகழை வளர்த்த இதயசந்திரனுக்கு என்ன தண்டனை அளித்தார் ? இதயசந்திரன் வந்த வேலை என்ன ஆனது ? போன்ற வினாக்களுக்கு விடையளித்து முடிந்தது புதினம் .


அரசியல் லாபத்துக்காக உபயோகிக்க முயலும் ஒருத்தி ,அன்பினால் ஆட்கொண்ட ஒருத்தி ,இச்சைக்காக வளைய வரும் ஒருத்தி ,சேவையினால் மயக்கும் ஒருத்தி என நான்கு பெண்களின் அன்புக்கு மத்தியில் திண்டாடுகிறார் இதயச்சந்திரன். மஞ்சு -இதயசந்திரன் ஊடல் மற்றும் கூடல் காட்சிகள் எதார்த்தம் விஜயசதுர்கம் ,ஜின்ஜீராத் ,கொலாபா போன்ற கடல் துறைமுகங்கள் மற்றும் கோட்டைகளின் வர்ணனை நம் கண் முன்னே அவற்றை சிருஷ்டிப்பதுடன் அதில் வாழ்ந்து பார்க்கவும் வைக்கிறது. அணைத்து மதத்தவரும் ஒற்றுமையுடன் வழிபடும் பரசுராமன் ஆலயம் கொலாபாவில் உள்ள குலாபியின் மகேசுவரி கோவில் என பல்வேறு அதிசயங்களை அறிய முடிந்தது. கடைசியில் பாலாஜியின் விசாரணையில் இதயசந்திரன் செய்யும் தர்க்கங்கள் படிக்க படிக்க சுவைக்கின்றன


மூன்று பாகங்களுடன் கிட்டத்தட்ட 1100 பக்கங்கள் கொண்ட இந்நாவலை ஓரிடத்தில் கூட சலிப்போ வெறுப்போ தோன்றாமல் முதல் அத்தியாயத்தில் இருக்கும் ஆர்வத்தை கடைசி பக்கம் வரை கொண்டு செல்லும் போது சாண்டில்யனின் சிறப்பை நாம் தர்க்கமின்றி ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.


பி.கு :

கதைசுருக்கம் மிக பெரிதாகவே இருக்கும் ஏனெனில் மூன்ற பாகம் கொண்ட பெரிய நாவல் என்பதால். மிகவும் நல்ல கதையோட்டம் . கனோஜியின் நகைச்சுவை மிகுந்த பேசும் பெண்கள் முன் இதயசந்திரன் மன உறுதி குலைவதும் மிக அருமையாக சொல்லப்பட்டுள்ளது .மாலுமியின் வாழ்க்கை முறை மற்றும் அதன் சுக துக்கங்கள் போன்றவற்றை அழகாக சொல்லி இருந்தார் சாண்டில்யன்


ஜலதீபம்
வகை :சரித்திர நாவல் (மூன்று பாகங்களை கொண்டது )
ஆசிரியர் :சாண்டில்யன்
விலை : 300(approx)
பதிப்பகம் :வானதி பதிப்பகம் (2013 வரை 23 பதிப்புகள் )

ராஜ்யஸ்ரீ ,கடல்வேந்தன் மற்றும் அலையரசி -புத்தகம் பற்றிய பேச்சுக்கள்

1.ராஜ்யஸ்ரீ

சாண்டில்யன் அவர்களின் நாவலான ராஜ்யஸ்ரீ படித்தேன் . கன்னோசி நகரை ஆண்ட மகாராணி மற்றும் மாமன்னர் ஹர்ஷரின் சகோதரி என ராஜ்யஸ்ரீ பற்றி நம் வரலாற்று பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜ்யஸ்ரீயின் வாழ்கையை சொல்வதே இந்த புதினம். பிராபகவர்த்தனர் - யசோவதி ஆகியோரின் மூன்றாவது குழந்தையான ராஜ்யஸ்ரீ செல்லமாக வளர்க்கப்படுகிறார். இளம் வயதிலேயே கன்னோசி மன்னர் கிருகவர்மனிடம் மையல் கொள்கிறார். சில எதிர்ப்புகளுக்கு பின் அவரை கரம் பிடிக்கிறார். மன்னர் கிருகவர்மன் நாடு நகரை மறந்து மனைவியுடன் உல்லாசமாக வாழ்வதிலேயே காலம் கழிக்கிறார். முன்னொரு சமயன் ராஜ்யஸ்ரீயால் நிராகரிக்கப்பட்ட தேவகுப்தன் சசாங்கன் எனும் அண்டை நாட்டு மன்னருடன் சேர்ந்து சதி செய்கிறான் . ஹர்ஷர் தன அண்ணன் ராஜ்யவர்தனருடன் இமயத்துக்கு ஹூனர்களை அடக்க செல்லும் சமயம் நோய்வாய்ப்பட்ட பிரபாகவர்தனர் இறந்துவிட யசொவதியும் உடன்கட்டை ஏறுகிறார். இந்நிலையில் வேட்டைக்கு வரும் கிருகவர்மனை சதி செய்து கொன்றுவிட்டு ரஜ்யஸ்ரீயை சிறையில் அடைக்கிறான். இதனால் வெகுண்டெழுந்து வரும் ராஜயவர்தனரை முதுகில் தந்திரமாக குத்தி கொலை செய்கிறான் .பின்னர் ஹர்ஷர் படையெடுத்து வந்து உடன்கட்டை ஏற நினைக்கும் தன் சகோதரியை எப்படி காக்கிறார் என்பதே இதன் முடிவு


காதல் காட்சிகளில் காமம் சற்று அதிகமாகவே இழையோடுவதை உணரமுடிந்தது .ஹர்ஷரின் வீர பிரதாபங்களை அழகாக சொல்லி இருக்கிறார்கள்



கடல் வேந்தன்

சேர நன்னாட்டில் ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருந்த யவனர்களும் அரேபியர்களும் தனி நாடு கேட்டு கலகம் செய்ய கடல் வேந்தன் எனும் கொலைகாரன் எப்படி அதை முறியடிக்கிறான் என்பதே கதை


அரசு கஜானாவை கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையனாக கடல் வேந்தன் அறிமுகமாகிறான். அவனை பிடிக்க காவலர் தலைவன் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போகின்றது. யவனர்-அரபியர் சதி தெரிய வருகிறது .அதை தன் உபதளபதி கிலேசியுஸ் தலைமை தாங்கி நடத்துவதை கண்டு அதிர்கிறான் .பின் சேர மன்னரோடு பேசி அதன் கடற்படைக்கு தளபதியாகிறான். இறுதியில் வெற்றிகரமாக கலகத்தை ஒடுக்குகிறான் .கடைசியில் தன் வேடத்தை கலைக்க சபை மட்டுமல்ல படிக்கும் நாமும் அதிர்கிறோம்.

புலவர் பாணர் -செங்குட்டுவன் உறவை மிக அழகாக சாண்டில்யன் சொல்லி இருக்கிறார் .கடல்வேந்தன் -அமைச்சர் மகள் நலங்கிள்ளி காதல் காட்சிகள் மிக அருமை.




3. அலையரசி

சாண்டில்யனின் மற்றுமொரு அற்புதமான புதினமான அலையரசி படித்தேன். சேர நாட்டில் சாதாரண போர் வீரன் எப்படி மிக பெரிய தளபதியாகி கிரேக்க நாட்டை மீட்டு உரியவனிடம் ஒப்படைக்கிறான் என்பதே கதை . கதையின் போக்கை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாதபடி பல்வேறு அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் விதித்திருந்தார் சாண்டில்யன். இதுவரை போர்களும் காதலும் ஆக்கிரமிக்கும் வரலாற்று நாவல்களில் இருந்து மாறுபட்டு மந்திர,தந்திர வித்தைகளோடு இந்த நாவல் பயணித்தது. அஹ்மத் என்பவனுக்கு அவன் நாட்டை மீட்டு தர சேர நாட்டின் வீரன் இளவழுதியை கண்டுபிடித்து அவனை அழைத்துவர அலையரசி எனும் மங்கையை கிரேக்க மதகுரு அனுப்புகிறார் .சேர மன்னர் ஒப்புதலோடு அங்கு சென்று வெற்றிகொடியும் நாட்டுகிறான் .இடையில் வரும் நம்பமுடியாத ஆச்சர்யங்களோடு சாண்டில்யன் நாவலை கொண்டு சென்றார். அலையரசி ,கடலரசி மற்றும் மானஸா ஆகய மூன்று பெண்கள் இளவழுதியின் வாழ்வில் வந்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே கதையின் பயணம். திகட்டாத காதல் காட்சிகள் ,போர் காட்சிகள் ,மாயாஜாலங்கள் என நாவல் முழுக்க விறுவிறுப்பும் ஆர்வமும் பரவி இருக்கிறது






பி.கு ;

தனிதனி பதிவாக போட்டால் கதை முழுக்க சொல்லவேண்டி வரும். இதனால் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது .எனவே ஒரே பதிவில் மூன்று நாவல்களை பற்றி எழுதிவிட்டேன்

படித்து இன்புறுங்கள்
பிறிதொரு பதிவில் சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்
சசிகுமார் முத்துசாமி



வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

ரிஷிமூலம் ,கி.மு கி.பி -புத்தகம் பற்றிய பேச்சுக்கள்

ரிஷிமூலம்

திரு. ஜெயகாந்தன் அவர்கள் எழுதி பெரும் சர்ச்சையை உண்டாக்கி ,இன்று வரை விமர்சிக்கப்படும் ரிஷிமூலம் எனும் நாவல் படித்தேன்.இந்நாவல் எதிர் கொண்ட பிரச்சனைகளையும் தன் நிலைப்பாட்டையும் தன் பெரிய முன்னுரையில் தெளிவாகவே ஜெயகாந்தன் சொல்லி விடுகிறார் .காமம் சார்ந்த உளவியல் ரீதியான ஒரு கதையை எடுத்து அதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருந்தார் .தன் வாழ்கையை ஒரு கட்டுப்பாடோடு வாழும் ஒரு பக்குவப்படாத மனிதனின் மனநிலையில் வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றத்தின் பிரதிபலிப்புகளை அவன் எங்கனம் ஏற்று கொள்கிறான் என்பதே கதையின் மூலம்.இக்கதையின் நாயகனான ராஜாராமனை உலகம் பார்க்கும் பார்வையும் ,உலகத்தை அவன் பார்க்கும் பார்வையும் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை ஜெயகாந்தன் அழகாக சொல்லி இருந்தார்

தன் வாழ்வில் எந்த பற்றுமில்லாமல் வாழும் அவன் இந்த உலகத்தில் இருந்து தப்பிக்க பக்தி எனும் ஆயுதத்தை தேர்ந்தெடுக்கிறான் .கடைசியில் அவன் விரக்தி அவனை எங்கு கொண்டு போய் நிறுத்துகின்றது என்பதே முடிவு .


நாகரிகம் ,பண்பாடு போன்ற முகமூடிகளை களைந்து விட்டு மனிதம் என்ற அடிப்படை உணர்வோடு மட்டுமிந்த நாவலை படிக்கவும்.

இது படிக்க வேண்டிய நாவல் என்றோ படிக்க கூடாத புத்தகம் என்றோ கூறும் அளவுக்கு உளவியல் சார்ந்த பக்குவம் எனக்கில்லை .என்னைபொறுத்த மட்டில் ஒரு சாதரணமான நாவல் அவ்வளவுதான் ........

படைப்பாளிகள் சமூக கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது என் கருத்து





ரிஷிமூலம்
வகை :குறுநாவல்
ஆசிரியர் :ஜெயகாந்தன்
பதிப்பகம் :மீனாட்சி புத்தக நிலையம்
விலை :55


கி.மு கி.பி

திரு .மதன் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் உலகம் உண்டான காலகட்டத்தில் இருந்து முந்தைய வரலாற்று காலம் வரை உலகமும் அதில் உறையும் உயிரினங்களும் கண்ட பரிணாம வளர்ச்சி மற்றும் மாற்றங்களையும் அழகாக கூறுகிறது. மனிதன் உருவான கதை ,அவன் நாடோடியாய் வாழ்ந்து திரிந்தது என ஆரம்பிக்கிறது. மனிதன் நிலையாக ஒரு இடத்தில வாழ ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பற்றியும் அவன் அடைந்த மாற்றங்கள் பற்றியும் அழகாக சித்தரிக்கிறது.முதலில் மெசபட்டோமிய நாகரிகம் பற்றியும் அதன் அரசர்கள் உருவானது ,மக்களின் வாழ்க்கை முறை என ஒவ்வொன்றாக விளக்குகிறது.

உலகின் முதன்மை இலக்கியமாக கருதப்படும் கில்டுமேஷ் கதை மிக அருமை .உலகிற்கு முதன் முதலில் சட்டம் தந்த மன்னன் ஹமுராபி பற்றி அறிய முடிகிறது .அவன் சட்டதிட்டங்களில் இருந்த நுட்பமும் முற்போக்கு சிந்தனையும் வியக்க வைக்கின்றன .பிறகு எகிப்திய ,கிரேக்க நாகரீகங்களின் தோற்றத்தையும் அதன் சிறப்புகளையுமரிய முடிந்தது .

சூரியனை மட்டுமே கடவுளாய் நம்பிய மன்னன் ஆக்நெடான் ,அதிசய ஆலயமான அபூஸிம்பெல் போன்றவற்றை பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது

பின் கிரேக்க -பாரசீக போர்கள் பற்றியும் ஏதென்ஸ் நகரின் எழுர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைகின்றன

நாடகங்களின் தந்தை ஹிராடேடஸ் ,சாக்ரடீஸ் புளுட்டோ என பலரை பற்றி அறிய முடிந்தது.சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் கொல்லபட்டவரையிலான இடை காலத்தில் அவரின் போக்கை அழகாக நேரில்கண்டு தந்திருக்கும் ப்ளுட்டோ பற்றிய பக்கங்கள் அருமையிலும் அருமை

இந்தியாவின் முதல் மிக பெரிய சாம்ராஜ்யமாக கருதப்படும் அசோகரின் மௌரிய சாம்ராஜ்யதோடு இப்புத்தகம் முடிகிறது

பல நாகரீங்களை பற்றியும் அவற்றோடு நம் சிந்து சமவெளி நாகரீகம் எப்படி மேம்பட்டுள்ளது என்பதை பற்றி சொல்லி இருப்பது சிறப்பு


மற்ற நாகரீகங்கள் இன்று முழுமையாக அழிந்து விட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் மக்கள் ஓரளவுக்கு தங்கள் பழைய நாகரீகத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை என்னும் போது ஒரு இறுமாப்பு ஏற்படத்தான் செய்கிறது



கி .மு கி .பி
வகை : நாகரிகங்கள் பற்றிய ஆய்வு நூல்
ஆசிரியர் :மதன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை :130/-

வந்தியதேவன் வாள் -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.விக்கிரமன் எழுதிய வந்தியதேவன் வாள் எனும் சரித்திர புதினம் படித்தேன் . நந்திபுரத்து நாயகி மற்றும் காதல் சிகரம் போன்ற விக்கிரமனின் படைப்புகளின் தொடர்ச்சி இது எனலாம்.

முன் கதை சுருக்கம் :
நாட்டிய பெண் இன்பவல்லியை ராஜராஜர் விரும்புகிறார்.பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி அவர்களை சேர விடாமல் குந்தவை தடுக்கிறார். மேலும் இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார்.அங்கு இன்பவல்லி பூங்கொடி எனும் மகவை ஈன்றெடுக்கிறாள்.அழகும் அறிவும் மட்டுமலாமல் தான் கற்ற கலையையும் போதித்து குந்தவையை பழிவாங்க அனுப்பி வைக்கிறாள்



இனி கதைக்கு வருவோம்

பூங்கொடி தஞ்சையில் பணிப்பெண்ணாக அரச மாளிகையில் சேருகிறாள் . இளவல் மதுரன் (ராஜேந்திரர்) அவளை கண்டவுடன் மையல் கொள்கிறார். குந்தவை அவர்கள் இருவரையும் சந்திக்க விடாமல் செய்கிறார். அச்சமயம் சாளுக்கிய மன்னன் சோழ நாட்டின் மீது வேவு பார்க்க சிலரை அனுப்புகிறான். வேவு பார்ப்பவன் பூங்கொடியை ஏமாற்றி மதுரனை கொல்ல முயல அத்திட்டம் தோல்வியடைகிறது . குந்தவை இருவரையும் பிரிக்க சதி செய்கிறார்.இதனால் வந்திய தேவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பழுவேட்டையர் தன் மகள் கோதையை மதுரனுக்கு மணம் முடிக்க என்ன அனைவரும் ஒப்பு கொள்கிறார்கள் .வந்தியதேவர் தன் மகளை (இரண்டாவது மனைவி மூலம் அவர்க்கு ஒரு மகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது) மணம் முடிக்க எண்ணுகிறார். முடியாமல் போனாலும் மதுரனின் உள்ளம் கவர்ந்த பூங்கொடியை அவன் மணக்க உதவுகிறார்.



இறுதியில் ராஜராஜனை சந்திக்கும் பூங்கொடி தன் தாயை பற்றி சொல்லி அவரை அழைத்து போகிறாள் .அவர்களுக்கு முன் இன்பவல்லியை காண செல்லும் குந்தவை நடந்த தகாத சம்பவத்தை சொல்லி தீர்வும் சொல்கிறார் . பூங்கொடி தன் சகோதரி என தெரிந்தவுடன் மதுரனின் நிலை என்ன ? வந்திய தேவர் -இளைய பிராட்டி உறவில் ஏற்பட்ட விரிசல் என்னவானது ?? போன்றவற்றிக்கு பதில் சொல்லி நாவல் நிறைவு பெற்றது


"வல்லவரையரே ! தங்களுக்கு வெற்றி தருவது உங்கள் கரங்களா ? கரங்களில் பூரணமாக திகழும் வாளா? " என ராஜராஜன் வினவிய உன்னதமான அந்த வாளை தன் மகளை மதுரன் மணந்த பின் பரிசாக தருவோம் என என்னும் வந்தியத்தேவர் அது நடக்காவிட்டாலும் அதை மதுரனிடம் ஒப்படைக்கிறார்.

வந்தியதேவன் வாள் என்றவுடன் அந்த வாளின் பெருமையை சுற்றியே கதை நடக்கும் என்ற என் கணிப்பு தவிடுபொடியானது.மேலும் ஒரு கதையாக சொல்லாமல் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக கதையை இதிலும் விக்கிரமன் நகர்த்தி இருப்பது படிக்கும் போது ஒரு வித அலுப்பையே தருகிறது .

கல்கி ,சாண்டில்யன் படைப்புகளில் காணப்படும் ஒரு ஆர்வத்தை ,சுவையை மற்றவர்களின் படைப்புகள் முழுமையாக நல்குவதில்லை என்று சில நண்பர்கள் கூறிய கூற்றை நான் ஒப்பு கொள்கிறேன் .

வந்திய தேவன் வாள் படிக்கும் முன்பு நந்திபுரத்து நாயகி படித்து விட்டு படியுங்கள்


வந்தியத்தேவன் வாள்
ஆசிரியர் :விக்கிரமன்
வகை :சரித்திர நாவல்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
விலை :180

November 16, 2013

தனிமை!! தனிமை!!

இந்த உலகத்தின் அணைத்து சுகதுக்கங்களில் இருந்து விலகி நமக்கென தனி உலகை உருவாக்கி கொண்டு ஆட்சி புரியும் இனிய தருணமே தனிமை. சிலருக்கு அது தேனாய் தித்திக்கும். சிலரை அது நெருப்பாய் வாட்டும். ஆக தனிமையின் இனிமை சூழ்நிலையை பொருத்து மாறும். சில சமயங்களில் தனிமை மன அமைதியை தருவதோடு நல்லதொரு புத்துணர்ச்சியையும் தரும். தனிமையில் நம் சுயசிந்தனை அதிகரிக்கும். கஷ்டமான சூழ்நிலையில் தனிமை விபரீதமான முடிவுகளை சிந்திக்க வைக்கும். தனிமை நம் தோல்விகளை அலசி பார்க்குமே ஒழிய அதற்கான தீர்வுகளை பற்றி சிந்திக்க விடாது. தனிமை நம் அறிவுக்கு மதிப்பு தராமல் உணர்ச்சிகளுக்கு புகலிடம் தருகிறது

தனிமையில் இனிமை காண முடியுமா என எனக்கு உறுதியாக தெரியவில்லை.ஆனால் நார்வேயில் நள்ளிரவில் சூரியன் தெரியுமாம். காதலில் தனிமை கற்பனைகளுக்கு வித்திட்டு மட்டற்ற மகிழ்ச்சியை தரும். ஆனால் தோழமையில் தனிமை நம்மை காயப்படுத்தும். கலைஞனின் தனிமை கலைகளை சிந்திக்கும்.சில சமயங்களில் தனிமை நம்மை ஒரு தனி தீவு போலவும் நமக்கு யாருமே இல்லை என்பதுபோலவும் வருந்த வைக்கும். சிலருக்கு அது ஒரு வெறுமையை கூட அளிக்கும். தனிமையில் நாம் சிருஷ்டிக்கும் உலகில் இருந்து நம்மால் வெளியில் வர முடியவில்லையெனில் நம் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று பொருள். இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்ட பல சகோதரர்களுக்கு ஆறுதலுக்கு பதிலாக கிடைத்த தனிமையே காரணமாக இருக்கலாம்.


நம் இந்த பரந்த உலகத்தில் எப்பொழுதும் சகாக்களுடன் வாழ்ந்தாலும் ஒரு சில சமயங்களில் நமக்கு தனிமை தேவைப்படுகிறது. நம்மை நமக்கே புதிதாய் அறிமுகம் செய்விக்கும் தன்மை தனிமைக்கு உண்டு. என் துக்ககரமான நாட்களில் எனக்கு தனிமை தேவைப்படும். இது எனக்கு ஆறுதல் எவ்வாறெனில் என் துன்பம் பிறர் அறியாவண்ணம் இருக்கிறது என்னும் நினைப்பினால் :).


தனிமை என்பதை யாருமே இல்லாத எந்த ஒலியும் இல்லாத சூழல் என கொள்ள முடியாது . நீங்கள் நினைத்தால் எந்த இடத்தில வேண்டுமானால் தனிமையை சிருஷ்டித்து கொள்ளலாம். அதற்க்கு பல மார்க்கங்கள் உள்ளன


நான் என் தனிமையை உருவாக்க எப்பொழுதும் தமிழ் பாடல்களையே நம்புகிறேன். நல்ல இசையை கேர்க்கும்போது நம் மனம் அமைதி கொள்வதோடு அதோடு பயணிக்க ஆரம்பிக்கிறது.அதனால் நாம் நம் சுற்றுபுறத்தை மறந்துவிடுகிறோம். அந்த வகையில் என்னை தனிமைக்கு கொண்டு செல்லும் இரு பாடல்கள்

மறைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் குரல் எனக்கு மிக பிடிக்கும் அவரின்

"மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச "

எனும் பாடல். மனதில் ஏற்படும் சிந்தனை அலைகள் அனைத்தும் நிறைவு பெற்று மனம் ஒரு தெளிந்த நீரோடையாய் அமைதியாக இருக்கும்


இரண்டாவது பாடல் அலைபாயுதே எனும் படத்தில் வரும் ஸ்வர்ணலதாவின்
" எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் "

எனும் பாடல். இந்த பாடல் கேற்கும் போதெல்லாம் எங்கோ ஒரு இடத்தில எழும் இனிய இசையை நோக்கி யாருமிலலா நள்ளிரவில் நான் நகர்வது போன்ற பிரம்மை ஏற்படும்

அந்த பாடலில் வரும் ஒரு வரி "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன்".



இவ்வாறு தனிமை உங்களுக்கு எந்த மாதரியாக செயல்பட வைக்கிறது? .எப்படி தனிமையை உருவாக்கி கொள்கிறீர்கள்? என்பதை பகிரலாமே