October 26, 2013

எங்கே செல்லும் இந்த பாதை - பகுதி 3

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் சினிமா பற்றிய ஒரு சிறு பதிவு. இந்த நூறு ஆண்டுகளில் தமிழ் சினிமா பல்வேறு தடைகற்களை கடந்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது.பேசாத சித்திரமாக ஆரம்பித்து நாடகத்தை முதுகெலும்பாக கொண்டு வளர ஆரம்பித்தது.முத்தமிழ் மூன்றின் உதவியால் மக்கள் மனதில் ஆழமாக வேருன்றவும் செய்தது.பின் அதன் வளர்ச்சி திரைகதை ,படமாக்கும் விதம் ,ஒலி /ஒளி அமைப்பு என பலவற்றிலும் கண்டு இன்று உன்னத நிலையில் உள்ளது

ஆனால் இந்த பதிவு சினிமா வளர்ச்சியை பற்றியது அல்ல. சினிமாவின் சமூக பொறுப்புணர்ச்சியை பற்றியது.ஒரு சாதாரண பொழுதுபோக்கு அம்சம் என்பதை தாண்டி வாழ்வியலின் ஒரு அங்கமாக மக்களோடு ஒன்றி விட்டது சினிமா. அது கலையா ?? அல்லது வணிகமா ?? என தெரியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கானோரின் உணர்வுகளை கட்டி போட்ட மாபெரும் சக்தியாக உள்ளது. ஆனால் இந்த சக்தியால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா ??


இன்றைய சினிமாவின் போக்கு எனக்கு விசித்திரமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான சினிமா நம்மை அதனுள் இழுத்து ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை நமக்கு அளிக்க வேண்டும். இந்த உலகத்தை புறந்தள்ளி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்றைய சினமா ஏதோ காமெடி ஷோ பார்ப்பது போல் உள்ளது ,நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்யும் செய்கையை பார்த்துவிட்டு வெறுமென சிரித்துவிட்டு வரவேண்டி உள்ளது. சில படங்களின் தாக்கம் என் மனதில் பல நாட்கள் ஓடி கொண்டிருக்கும். இன்று அவ்வாறு எடுக்கப்படும் படங்கள் ஏதோ மாற்றுத்திரை அல்லது ஆவணப்படம் (documentry ) என்ற ரீதியில்தான் மக்களால் பார்க்க படுகின்றன. இதற்க்கு முக்கிய காரணம் மக்களின் ரசனை.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத கதைகளங்கள் ஏராளம். தமிழ் சினிமா தனக்கென ஒரு வட்டத்தை எல்லையாக கொண்டு அதனுள்ளே பல பாதைகளை வகுத்துக்கொண்டு பயணித்து வருகிறது. இதனால் மக்களின் ரசனை விசாலமானதாக இல்லை. தலைப்பில் இருந்து விலகி செல்லவில்லை. இவற்றை சொல்லாமல் இருக்க முடியாது. இனி தலைப்புக்கு வருவோம். தமிழ் சினிமா தன் பொறுப்புகளை எவ்வாறெல்லாம் தட்டி கழிக்கிறது என்று பார்ப்போம்.தற்போது வரும் சில படங்களில் பள்ளி மாணவியான கதாநாயகியும் ,கதாநாயகனும் காதலிப்பதுபோலும் மணமுடிப்பதுபோலும் காட்சிகள் வருகின்றன. பள்ளியில் படிக்கும் (minor) பெண் காதல் காமம் காட்சிகளில் ஈடுபடுவது போல் காட்டுவது சமூகத்துக்கு கற்பிக்கும் தவறான பாடம் தானே ? காதலுக்கும் பருவ கிளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் ஏன் சொல்லவில்லை ?. தற்போது காதல் என்ற பெயரில் காட்டப்படும் காட்சிகள் கூட முகம் சுழிக்க வைக்கின்றன.தமிழ்ப்பெண் பற்றி கூறும் அவர்கள் ஒரு சராசரி தமிழ்பெண்ணை காட்சிபடுத்தவில்லை என்பது என் எண்ணம்.மேலும் தற்போது வரும் சில படங்களில் ஆசிரியர்களை அதிகம் அவமதிப்பது போல் காட்டுவதும் வருந்ததக்கது. அன்றைய சினிமா நாடகத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. நாடகத்தில் ஒப்பனையுடன் கூடிய நடிப்பும் பாட்டும் இருந்தால் போதும். ஆனால் இன்றைய சினிமாவின் வரையறை வேறுமாதிரி உள்ளது. இன்றைய சில படங்கள் எதார்த்த உலகை காட்டுகின்றன.எதார்த்தமான மக்களோடு அவர்கள் வாழ்வியலை சொல்லும் படங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு பேரால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி அது வாங்கும் விருதுகளை மட்டும் பொறுத்ததல்ல ,அதன் வணிக ரீதியிலான வெற்றி ,அதிக மக்களை சென்று சேர்வது என்பதிலும் உள்ளது என்பது என் கருத்து. அதுவும் பெரிய நிறுவனங்கள் சினிமாவில் முதலீடு செய்ய ஆரம்பித்த பிறகு சிறு முதலீட்டு படங்களின் வெற்றி குதிரைகொம்பாக மாறிவிட்டது . பெண்களையும் குழந்தைகளையும் வைத்து அவர்கள் உணர்வுகளை மீட்டி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் மிக குறைந்து வருவது துரதிஷ்டவசமானது. உலக தரத்திலான சினிமா என்பது ஹாலிவுட்டை மட்டும் கொண்டு சொல்லபடுகிறது. ஈரானிய படங்கள் போன்ற பிற நல்ல தரத்திலான படங்கள் புறக்கணிக்க படுகின்றன.

தற்போதைய படங்களின் நகைச்சுவை காட்சிகள் தரம் மெய்சிலிர்க்க வைக்கிறது (!!!!). இரட்டை அர்த்ததில் இல்லாமல் நேரடியாக அந்த அர்த்தத்திலேயே வசனங்கள் வருவது கொடுமை. தற்போதைய காலகட்டத்தில் எந்த படமும் மக்களின் எந்தவொரு அடிப்படை பிரச்சனைகளை பற்றியும் பேச வில்லை. கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்கள் மின் பற்றாக்குறை ,தமிழ் ஈழம் ,மீனவர் பிரச்சனை .அணு உலை போராட்டங்கள் குறித்து பேசின. வேறு காரணங்களுக்காக சென்சார் மற்றும் இதர பிரச்சனைகளை சமாளிப்பவர்கள் சமூக பிரச்சனைகளை சொல்வதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்க விரும்புவதில்லை. தற்போது கருத்துசுதந்திரம் இல்லையென சொல்லும் இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளை பற்றி ஏன் பேசவில்லை.

இசை என்பது மனதை வருடி சாந்தபடுத்திய காலம் போய் இன்று மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதாக உள்ளது . பாடல் வரிகள் பற்றி சொன்னால் இக்கட்டுரை முடிவிலி ஆகிவிடும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என பாரதி பாடிய தமிழ் மொழியின் இன்றைய பாடல்களின் கொலைவெறியை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெரிய நடிகர் ஒருவரின் அறிமுக பாடலொன்றில் வரும் வரி இது "தாய்ப்பால் உனக்கு கொக்கோ கோல (coca cola )" .ஈடு இணையற்ற அமிர்தமான தாய்ப்பாலை ஒரு ரசாயன கலவையோடு ஒப்புமைப்படுத்துவது சரியா ?.இப்படி வரிகளை மேற்கோள் காட்டினால் நிறைய சொல்லலாம். இங்கு யார் சமூக பொறுப்புணர்ச்சியை விட்டது.

இனி வரும் சினிமாவில் நம் அடையாளங்கள் .பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை மறைந்து விடும் அபாயம் உள்ளது. முற்போக்கான சிந்தனைகளோ ,சமூக விழிப்புணர்ச்சியோ இல்லாமல் சிரித்து மகிழும் ஒலி /ஒளி சித்திரமாக மட்டுமே சினிமா இருக்கும்.

என் கவலை சமுதாய முன்னேற்றத்துக்கு உதவாவிட்டாலும் சமூக சீர்கேடுகளுக்கும் ,பிற்போக்கான சிந்தனை வாதங்களுக்கும் ,மக்களின் வேற்றுமைகளுக்கும் காரணமாகி விடுமோ என்பதுதான். அதற்க்கு தீர்வு வணிக ரீதியில் மட்டும் சிந்திக்காமல் ரசிகனின் முன்னேற்றம் சமுதாய நிலைமை பற்றியும் நெறியாளர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்

பதிவின் நீளம் அதிகமானதுக்கு மன்னிக்கவும்

பி.கு :

இப்பதிவின் பயணம் இடையில் திசை மாறுவது போல் தோன்றலாம் . என் மனதில் நெடு நாளாக இருந்தவற்றை கொட்டிவிட்டேன் . (வழக்கம்போல் ) யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியுள்ளேன் .அப்படி காயப்படுத்தினால் நான் மன்னிப்பு கோருகிறேன். இதுவரை சினிமா பற்றி நான் எந்த பதிவும் எழுதியதில்லை. இந்த பதிவுக்கு வித்திட்ட இனிய நண்பர் Seenivasan Balakrishnan அவர்களுக்கு நன்றிகள் பல


அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி வணக்கம்

No comments:

Post a Comment