October 27, 2013

இவங்க எழுதுனா எப்படி இருக்கும்

முன் குறிப்பு : எதையாவது வெரைட்டியா யோசிப்போம்னு தோனுச்சு அதன் விளைவே இது. யார் மனதையும் புண்படுத்த அல்ல.
பாட்டி வடைசுட்ட கதையை வேறு சில எழுத்தாளர்கள் எழுதி இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை


முதலில் கதை தெரியாதவர்கள் இருந்தால் (பொறந்த கொழந்தைக்கு கூட தெரியுமே  னு சொல்ல கூடாது )

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார், அந்த நேரம் அங்கு வந்த காகம் பாட்டி அசந்த நேரம் பார்த்து வடையை திருடி செல்கிறது. திருடிய வடையுடன் ஒரு மரத்தில் அமர,அங்கு வந்த நரி காகத்திடம் இருந்து வடையை அபகரிக்க திட்டமிடுகிறது.காகத்தை பாட சொல்ல காகம் பாட வாயை திறக்கிறது.வடை கீழே விழுந்து விட நரி அதை அபகரிக்கிறது.(சாமி சத்தியமா இதுல என்ன நீதி இருக்குனு எனக்கு தெரில )






இதை சாண்டில்யன் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும்னு பார்ப்போம்


அது ஒரு அந்தி சாயும் மாலை பொழுது. வான மகள் செந்நிற சேலை கட்டி மஞ்சள் நிற போட்டு வைத்து புதுக்கோலம் பூண்டிருந்தாள். அங்கு வந்த தென்றல் காற்றில் கொன்றை மலரின் வாசம் மண்ணில் சொர்க்கத்தை சிருஷ்டித்து கொண்டிருந்தது. பட்சிகளும் பறவைகளும் தங்கள் இனத்தினரோடு உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன.அந்த சத்தங்களின் வாயிலாக எழுந்த ஒலி யாரோ இன்னிசை பாடுவது போல் இருந்தது (சாண்டில்யன் ஸ்டைல்ன நாலு பக்க வர்ணனைக்கு பிறகுதான் கதை ஆரம்பிக்கும். எனக்கு அவ்வளவு வர்ணனை எழுத தெரில அதனால் இத்தோடு நிப்பாட்டிக்குவோம் ).ஒரு முதுமை பருவமெய்திய கிழவியொருத்தி வடை வடை சுட்டு கொண்டிருந்தாள்.கிழவியின் முகத்தில் இருந்த சுருக்கங்களும் கைகளில் தென்பட்ட நடுக்கமும் அவளுக்கு ஒரு என்பது பிராயம் இருக்கும் என்பதை காட்டின. அவள் உடையும் முகமும் ஏழ்மையை புலப்படுத்தின .அந்த நேரம் பார்த்து ஒரு காகம் வந்து அமர்ந்தது. வானத்தின் கரிய மேகத்தை அச்சில் வார்த்தது போல் ஒரு கரிய உருவம் கொண்ட அந்த காகத்தின் கால்கள் அல்லி தண்டை ஒத்திருந்தன. அதன் மோகனம் மிகுந்த விழிகளிரண்டும் அலைபாய்ந்து கடைசியில் வடையில் நிலைத்தது.******************************************
****************************************************
பொழுது சாயும் அந்த நேரத்தில் அந்த ஒற்றையடி  பாதையில் ஒரு நரி வந்து கொண்டிருந்தது.அதன் செந்நிறமும் கூர்மையான விழிகளும் ஒரு பயங்கரத்தை அங்கே அரங்கேற்றின .அதன் நடையில் ஒரு தந்திரம் குடி கொண்டிருந்தது.************************************************************
*****************************************************************************




இக்கதையை ராஜேஸ்குமார் சொல்லி இருந்தால் ...


அது ஒரு சாயங்கால நேரம். கதிரவன் காணாமல் போக இன்னும் சில நேரம் இருந்தது. அந்த ஊரின் ஒதுக்குபுராமாக இருந்த அந்த வீட்டின் வெளியில் ஒரு பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார். பாட்டியின் முகத்தில் ஒரு எதார்த்தம் குடி கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு காகம் வந்து அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தது.அதன் கண்ணில் ஒரு வித கள்ள பார்வை காணப்பட்டது.பாட்டி திருபிய அந்த கண நேரத்தின் துல்லியமான வினாடியில் தான் அந்த சம்பவம் நடந்தது


அது ஒரு ஒற்றையடி பாதை. இருபக்கமும் புதர்கள் நிறைந்து காணப்பட்ட அது தவறுகள் நடப்பதற்கு ஏற்ற இடம் என்பதை சுட்டி காட்டிகொண்டிருந்தன . திடீரென சருகுகள் அசைந்து யாரோ வருவதற்கான அடையாளத்தை கொடுத்தன. அந்த சூழ்நிலையில் கண்ணில் ஒரு வித விசமப்புன்னகையோடு வாயில் ரத்தம் வழிய ஒரு நரி வந்து கொண்டிருந்தது. ********************************************************
**************************************************************
(இப்படி கதை இரண்டு பிரிவாக வந்து கடைசியில் சஸ்பென்ஸ் உடைந்து இணையும்.நரி அபகரித்த வடையை பிரான்சிக் ஆட்களுடன் வந்து விவேக் கண்டுபிடிக்கிறார் .நரியின் அக்கிரமங்களை ஊருக்கு உணர்த்தி கடைசியில் கைது செய்கிறார் .எப்புடி ???)



இனி கார்டூனிஸ்ட் மதன்


ஒரு கிராமம் ,நகரமயமாதலால் தன் பொலிவினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. அதன் புதிய பரிமாணம் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள எதிர் விளைவுகளை அப்பட்டமாக காட்டி கொண்டிருந்தது (புரியலைன கேள்வி எல்லாம் கேட்க கூடாது ). அங்கு ஒரு வயது முதிர்ந்த பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார். அது பருப்பு வடை,பல்வேறு பயிர்கள் கலந்து ஒரு புதிய சுவையை கொடுத்து கொண்டிருந்தது . அங்கு ஒரு காகம் வந்தது.அது மரத்தின் மேல் அமர்ந்திருந்த கோணம் அதன் பேரினம் @@@@@@ என்ற பறவையில் இருந்து வந்ததையும் அதன் முன்னோர்கள் பாலூட்டிகளாக கடலில் வாழ்ந்ததையும் புலப்படுத்தின.
************************************************************************
***********************************************************************

அந்த மலையடிவாரப் பாதை ஆதி காலத்தில் இருந்த இயற்கையின் வனப்பையும் அதன் மேலாண்மையையும் புலப்படுத்தின. அங்கு தன் வாயில் ரத்தம் வழிய வழிய ஒரு நரி வந்து கொண்டிருந்தது.இது tasmaniya வில் வாழ்ந்த பழங்குடி மக்களை ஆங்கிலேயர்கள் வேட்டையாடி கொன்றதை நினைவு படுத்தியது.( இந்த பயணத்தில் வரும் பயங்கரங்கள்  மற்றும்   சம்பவங்கள் உங்கள் மனதை கலவரப்படுத்தலாம் .இளகிய மனம் படைத்தவர்கள்,குழந்தைகள் ,இதயநோய் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்  அப்படிங்கறத add பண்ணிக்கோங்க )
***********************************************************
***********************************************************


தபூ சங்கரின் "வடையை கேட்டால் என்ன தருவாய் "

கதிரவன் இன்னும் உள்ளதால்
வெட்கப்பட்டு நாணிக்கண்புதைத்திருந்தாள் நிலாமகள்
அங்கே ஒரு பாட்டி கதிவரனின் வடிவத்தை
வடைசட்டியில் வார்த்து கொண்டிருந்தார்
நிலவின் மதுரத்தை ரசிக்க
அவர் கண்கள் ஏங்கி கொண்டிருந்தன
அங்கு ஆல மரத்தடியில்
ஒரு அழகிய காகம் வந்து அமர்ந்தது.
அதன் உன்னத முகத்தில்
கண்கள் மட்டும் ஒரு களங்கத்தை விளைவித்தன.
இமை மூடித்திறக்கும் நேரத்தினுள்
காகம் வடையை களவு செய்தது
 இரையை புசித்துவிட்டு அடங்கா பசியுடன்
வளைய வந்தது ஒரு குள்ளநரி
 அதன் கண்கள் ஒரு குரூரத்தை வழங்கின.
******************************************

********************************************
பாட்டை கேட்டு வடையை பெற்றது நரி  


போதுங்க இதுக்கு மேல எழுதினா தமிழ் எழுத்தாளர்களின் அபிமானிகள் என்னை கொலை செய்து விடுவார்கள்




பி.கு :

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. எந்த எழுத்தாளர்களையும் கிண்டல் செய்ய வில்லை.அவர்கள் பாணியை கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது அவ்வளவு தான். அவர்கள் மேல் நான் பெருமதிப்பு  கொண்டிருக்கிறேன்


பிழை இருந்தால் மன்னித்து பொருத்தருளவும்

  நன்றி வணக்கம்

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் !!!!

No comments:

Post a Comment