November 17, 2013

வந்தியதேவன் வாள் -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.விக்கிரமன் எழுதிய வந்தியதேவன் வாள் எனும் சரித்திர புதினம் படித்தேன் . நந்திபுரத்து நாயகி மற்றும் காதல் சிகரம் போன்ற விக்கிரமனின் படைப்புகளின் தொடர்ச்சி இது எனலாம்.

முன் கதை சுருக்கம் :
நாட்டிய பெண் இன்பவல்லியை ராஜராஜர் விரும்புகிறார்.பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி அவர்களை சேர விடாமல் குந்தவை தடுக்கிறார். மேலும் இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார்.அங்கு இன்பவல்லி பூங்கொடி எனும் மகவை ஈன்றெடுக்கிறாள்.அழகும் அறிவும் மட்டுமலாமல் தான் கற்ற கலையையும் போதித்து குந்தவையை பழிவாங்க அனுப்பி வைக்கிறாள்



இனி கதைக்கு வருவோம்

பூங்கொடி தஞ்சையில் பணிப்பெண்ணாக அரச மாளிகையில் சேருகிறாள் . இளவல் மதுரன் (ராஜேந்திரர்) அவளை கண்டவுடன் மையல் கொள்கிறார். குந்தவை அவர்கள் இருவரையும் சந்திக்க விடாமல் செய்கிறார். அச்சமயம் சாளுக்கிய மன்னன் சோழ நாட்டின் மீது வேவு பார்க்க சிலரை அனுப்புகிறான். வேவு பார்ப்பவன் பூங்கொடியை ஏமாற்றி மதுரனை கொல்ல முயல அத்திட்டம் தோல்வியடைகிறது . குந்தவை இருவரையும் பிரிக்க சதி செய்கிறார்.இதனால் வந்திய தேவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பழுவேட்டையர் தன் மகள் கோதையை மதுரனுக்கு மணம் முடிக்க என்ன அனைவரும் ஒப்பு கொள்கிறார்கள் .வந்தியதேவர் தன் மகளை (இரண்டாவது மனைவி மூலம் அவர்க்கு ஒரு மகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது) மணம் முடிக்க எண்ணுகிறார். முடியாமல் போனாலும் மதுரனின் உள்ளம் கவர்ந்த பூங்கொடியை அவன் மணக்க உதவுகிறார்.



இறுதியில் ராஜராஜனை சந்திக்கும் பூங்கொடி தன் தாயை பற்றி சொல்லி அவரை அழைத்து போகிறாள் .அவர்களுக்கு முன் இன்பவல்லியை காண செல்லும் குந்தவை நடந்த தகாத சம்பவத்தை சொல்லி தீர்வும் சொல்கிறார் . பூங்கொடி தன் சகோதரி என தெரிந்தவுடன் மதுரனின் நிலை என்ன ? வந்திய தேவர் -இளைய பிராட்டி உறவில் ஏற்பட்ட விரிசல் என்னவானது ?? போன்றவற்றிக்கு பதில் சொல்லி நாவல் நிறைவு பெற்றது


"வல்லவரையரே ! தங்களுக்கு வெற்றி தருவது உங்கள் கரங்களா ? கரங்களில் பூரணமாக திகழும் வாளா? " என ராஜராஜன் வினவிய உன்னதமான அந்த வாளை தன் மகளை மதுரன் மணந்த பின் பரிசாக தருவோம் என என்னும் வந்தியத்தேவர் அது நடக்காவிட்டாலும் அதை மதுரனிடம் ஒப்படைக்கிறார்.

வந்தியதேவன் வாள் என்றவுடன் அந்த வாளின் பெருமையை சுற்றியே கதை நடக்கும் என்ற என் கணிப்பு தவிடுபொடியானது.மேலும் ஒரு கதையாக சொல்லாமல் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக கதையை இதிலும் விக்கிரமன் நகர்த்தி இருப்பது படிக்கும் போது ஒரு வித அலுப்பையே தருகிறது .

கல்கி ,சாண்டில்யன் படைப்புகளில் காணப்படும் ஒரு ஆர்வத்தை ,சுவையை மற்றவர்களின் படைப்புகள் முழுமையாக நல்குவதில்லை என்று சில நண்பர்கள் கூறிய கூற்றை நான் ஒப்பு கொள்கிறேன் .

வந்திய தேவன் வாள் படிக்கும் முன்பு நந்திபுரத்து நாயகி படித்து விட்டு படியுங்கள்


வந்தியத்தேவன் வாள்
ஆசிரியர் :விக்கிரமன்
வகை :சரித்திர நாவல்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
விலை :180

1 comment:

  1. நந்தி புறத்து நாயகி நாவல் படித்து முடித்து விட்டேன்,காதல் சிகரம் நாவல் இணையத்தில் கிடைக்கவில்லை.இருந்தால் அனுப்புங்கள் ஐயா

    ReplyDelete