December 21, 2013

மூங்கில் கோட்டை-புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மூங்கில் கோட்டை எனும் வரலாற்று புதினம் படித்தேன். தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சேர மன்னரை சிறை வைக்க உருவாக்கிய கோட்டையை பற்றிய புதினம் இது. தலையாலங்கானத்து பெரும் போரில் பத்தொன்பது பிராயமே நிரம்பிய நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த சேர,சோழ மற்றும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான் என வரலாறு கூறுகிறது. இதில் சரணடைந்த சேர மன்னன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை நெடுஞ்செழியன் யாராலும் சிறை மீட்க முடியாத அளவுக்கு ஒரு கடினமான கோட்டைக்குள் சிறை வைக்கிறான்

இனி கதைக்கு வருவோம்

சேர மன்னனின் மேல் மதிப்பு கொண்ட புலவர் குறுங்கோழியூர்கிழார் அவரை சிறையில் இருந்து தப்புவிக்க எண்ணுகிறார்.அவருக்கு நெடுஞ்செழியனின் சகோதரி இமயவல்லி உதவுகிறாள்.மன்னரை தப்பு விக்க சேர நாட்டில் இருந்து இளமாறன் எனும் இளைஞனை மதுரைக்கு வரவழைக்கிறார் புலவர். வந்த அன்றே அவன் மன்னரோடு மோத வேண்டி வருகிறது. மூங்கில் கோட்டைக்கு போகும் வழியில் பாண்டியனின் ஆசிரியரான சித்தர் தடுத்து நிறுத்துகிறார் .அவர் அவர்களை கைது செய்யாமல் போக அனுமதிக்க இளமாறன் மூங்கில் கோட்டைக்கு செல்கிறான் .



மூங்கில் கோட்டையில் இருந்து எங்கனம் அவன் மன்னரை விடுவிக்கிறான் ? மன்னரின் சகோதரி மேல் இளமாறன் கொண்ட காதல் நிறைவேறுகிறதா ? சித்தர் -இளமாறன் இடையே உள்ள உறவு என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இந்நூலின் முடிவு.


மிக இளம் வயதில் அரியணை ஏறி பல போர்களில் வெற்றி பெற்று இறவாப் புகழை எய்திய நெடுஞ்செழியனின் பராக்கிரமங்கள் அருமை .

புலவர் குறுங்கோழியூர் கிழார் மன்னரை தப்பு விக்க பல முயற்சிகள் எடுக்கிறார். சேர அரசிக்கு பிறந்த இளவரசி இமயவல்லி -இளமாறன் காதல் காட்சிகள் சில கணங்களே வந்தாலும் அருமை .


மூங்கில் கோட்டையின் அமைப்பு மிக பயங்கரம். சேனாதிபதி ,மருத்துவர் ,ஆசிரியர் என பல அவதாரம் புரியும் சித்தர் யார் என அவிழும் முடிச்சு நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

கடைசியில் மன்னர் நெடுஞ்செழியன் வழங்கும் தீர்ப்பில் புலப்படும் நீதி அவரின் உயர்வை புலப்படுத்துகிறது .


மிக அருமையான ஒரு அனுபவத்தை நல்கியது


நன்றி வணக்கம்

வாழ்த்துக்கள்


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

No comments:

Post a Comment