November 17, 2013

ராஜ்யஸ்ரீ ,கடல்வேந்தன் மற்றும் அலையரசி -புத்தகம் பற்றிய பேச்சுக்கள்

1.ராஜ்யஸ்ரீ

சாண்டில்யன் அவர்களின் நாவலான ராஜ்யஸ்ரீ படித்தேன் . கன்னோசி நகரை ஆண்ட மகாராணி மற்றும் மாமன்னர் ஹர்ஷரின் சகோதரி என ராஜ்யஸ்ரீ பற்றி நம் வரலாற்று பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜ்யஸ்ரீயின் வாழ்கையை சொல்வதே இந்த புதினம். பிராபகவர்த்தனர் - யசோவதி ஆகியோரின் மூன்றாவது குழந்தையான ராஜ்யஸ்ரீ செல்லமாக வளர்க்கப்படுகிறார். இளம் வயதிலேயே கன்னோசி மன்னர் கிருகவர்மனிடம் மையல் கொள்கிறார். சில எதிர்ப்புகளுக்கு பின் அவரை கரம் பிடிக்கிறார். மன்னர் கிருகவர்மன் நாடு நகரை மறந்து மனைவியுடன் உல்லாசமாக வாழ்வதிலேயே காலம் கழிக்கிறார். முன்னொரு சமயன் ராஜ்யஸ்ரீயால் நிராகரிக்கப்பட்ட தேவகுப்தன் சசாங்கன் எனும் அண்டை நாட்டு மன்னருடன் சேர்ந்து சதி செய்கிறான் . ஹர்ஷர் தன அண்ணன் ராஜ்யவர்தனருடன் இமயத்துக்கு ஹூனர்களை அடக்க செல்லும் சமயம் நோய்வாய்ப்பட்ட பிரபாகவர்தனர் இறந்துவிட யசொவதியும் உடன்கட்டை ஏறுகிறார். இந்நிலையில் வேட்டைக்கு வரும் கிருகவர்மனை சதி செய்து கொன்றுவிட்டு ரஜ்யஸ்ரீயை சிறையில் அடைக்கிறான். இதனால் வெகுண்டெழுந்து வரும் ராஜயவர்தனரை முதுகில் தந்திரமாக குத்தி கொலை செய்கிறான் .பின்னர் ஹர்ஷர் படையெடுத்து வந்து உடன்கட்டை ஏற நினைக்கும் தன் சகோதரியை எப்படி காக்கிறார் என்பதே இதன் முடிவு


காதல் காட்சிகளில் காமம் சற்று அதிகமாகவே இழையோடுவதை உணரமுடிந்தது .ஹர்ஷரின் வீர பிரதாபங்களை அழகாக சொல்லி இருக்கிறார்கள்



கடல் வேந்தன்

சேர நன்னாட்டில் ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருந்த யவனர்களும் அரேபியர்களும் தனி நாடு கேட்டு கலகம் செய்ய கடல் வேந்தன் எனும் கொலைகாரன் எப்படி அதை முறியடிக்கிறான் என்பதே கதை


அரசு கஜானாவை கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையனாக கடல் வேந்தன் அறிமுகமாகிறான். அவனை பிடிக்க காவலர் தலைவன் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போகின்றது. யவனர்-அரபியர் சதி தெரிய வருகிறது .அதை தன் உபதளபதி கிலேசியுஸ் தலைமை தாங்கி நடத்துவதை கண்டு அதிர்கிறான் .பின் சேர மன்னரோடு பேசி அதன் கடற்படைக்கு தளபதியாகிறான். இறுதியில் வெற்றிகரமாக கலகத்தை ஒடுக்குகிறான் .கடைசியில் தன் வேடத்தை கலைக்க சபை மட்டுமல்ல படிக்கும் நாமும் அதிர்கிறோம்.

புலவர் பாணர் -செங்குட்டுவன் உறவை மிக அழகாக சாண்டில்யன் சொல்லி இருக்கிறார் .கடல்வேந்தன் -அமைச்சர் மகள் நலங்கிள்ளி காதல் காட்சிகள் மிக அருமை.




3. அலையரசி

சாண்டில்யனின் மற்றுமொரு அற்புதமான புதினமான அலையரசி படித்தேன். சேர நாட்டில் சாதாரண போர் வீரன் எப்படி மிக பெரிய தளபதியாகி கிரேக்க நாட்டை மீட்டு உரியவனிடம் ஒப்படைக்கிறான் என்பதே கதை . கதையின் போக்கை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாதபடி பல்வேறு அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் விதித்திருந்தார் சாண்டில்யன். இதுவரை போர்களும் காதலும் ஆக்கிரமிக்கும் வரலாற்று நாவல்களில் இருந்து மாறுபட்டு மந்திர,தந்திர வித்தைகளோடு இந்த நாவல் பயணித்தது. அஹ்மத் என்பவனுக்கு அவன் நாட்டை மீட்டு தர சேர நாட்டின் வீரன் இளவழுதியை கண்டுபிடித்து அவனை அழைத்துவர அலையரசி எனும் மங்கையை கிரேக்க மதகுரு அனுப்புகிறார் .சேர மன்னர் ஒப்புதலோடு அங்கு சென்று வெற்றிகொடியும் நாட்டுகிறான் .இடையில் வரும் நம்பமுடியாத ஆச்சர்யங்களோடு சாண்டில்யன் நாவலை கொண்டு சென்றார். அலையரசி ,கடலரசி மற்றும் மானஸா ஆகய மூன்று பெண்கள் இளவழுதியின் வாழ்வில் வந்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே கதையின் பயணம். திகட்டாத காதல் காட்சிகள் ,போர் காட்சிகள் ,மாயாஜாலங்கள் என நாவல் முழுக்க விறுவிறுப்பும் ஆர்வமும் பரவி இருக்கிறது






பி.கு ;

தனிதனி பதிவாக போட்டால் கதை முழுக்க சொல்லவேண்டி வரும். இதனால் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது .எனவே ஒரே பதிவில் மூன்று நாவல்களை பற்றி எழுதிவிட்டேன்

படித்து இன்புறுங்கள்
பிறிதொரு பதிவில் சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்
சசிகுமார் முத்துசாமி



வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

No comments:

Post a Comment