October 26, 2013

எங்கே செல்லும் இந்த பாதை-பகுதி 4

மொழிப்பற்று


அமுதென்றும் அழகென்றும் உயிரென்றும் உணர்வென்றும் பாடப்பட்ட உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் தமிழ் மொழியின் இன்றைய போக்கு மற்றும் அதன் பிற்கால நிலை பற்றிய பதிவு இது. அமிழ்தினும் இனியதான இயல் ,இசை ,நாடகம் ஆகிய முத்தமிழை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். தனக்கே உரித்தான இலக்கிய வளங்களோடும் இலக்கண நெறிகளோடும் திகழ்ந்த தமிழின் இன்றைய நிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.


முதலில் மொழி என்பதன் வீச்சு தகவல் பரிமாற்றத்தோடு நின்று விடுவதில்லை.அதை தாண்டி நம் அடையாளமாகவும் வாழ்வியலின் பின்னிப்பிணைந்த அங்கமாகவும் விளங்குகின்றது.

"உடம்போடு மெய்வந்து புணர்ந்தால் உயிர்மெய் "

எனும் கூற்றுக்கேற்ப நம் உயிர் மெய் நிலைக்க வேண்டுமானால் தமிழென்னும் மெய் நம்மை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அகன்றுவிட்டால் நாம் உணர்வுகளற்ற யாக்கையுடன் வாழும் மக்கள் ஆவோம். நம் மகிழ்ச்சி ,சோகம் ,சினம்,இகழ்ச்சி ,அமைதி என் எல்லாவற்றிலும் மொழியின் தாக்கம் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய நிலவரப்படி நூற்றுகணக்கான மொழிகள் அழிந்து விட்டன மற்றும் அழிந்து வருகின்றன. அந்த மொழியில் உன்னத இலக்கியங்கள் இருந்திருக்கலாம் மற்றும் மொழி ஆர்வலர்கள் இருந்திருப்பார்கள்.ஆயினும் அந்த மொழிகள் ஏன் அழிந்தன ?

ஒரு மொழியின் ஆளுமை அல்லது ஆயுள் பதிய படைப்புகளினாலோ இலக்கிய ஆர்வலர்களினாலோ தீர்மானிக்கபடுவதில்லை. பாமர மக்களால் பேசப்படும் போதுதான் அதன் ஜீவன் வாழும் நிலைக்கும். [ரசிகன் இல்லையெனில் கலைகள் இல்லை கலைஞனும் இல்லை அதேபோல் வாசகன் இல்லையெனில் இலக்கியங்கள் இல்லை எழுத்தாளனும் இல்லை என இருக்க மக்களால் பேசப்படவில்லை எனில் மொழி மட்டும் எங்கனம் நிலைக்கும் ]


இன்றைய இந்திய மொழிகள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆங்கில கலப்பு . ஆங்கிலத்தின் ஆதிக்கம் இந்திய மொழிகளில் நேரடியாக பிரதிபலிக்கிறது. ஆனால் அது தவிர்க்க முடியாதது .இதனால் நம் மொழிகள் தங்கள் பாரம்பரியத்தை இழக்க நேரிடுகிறது. பல சொற்கள் வழக்கத்திலிருந்து மறைந்து மொழியின் எல்லையை குறைக்கின்றன.மக்களிடம் அதிகரிக்கும் ஆங்கில மோகம் தமிழ் படிப்பதை கவுரவ குறைவாக கருத வைக்கிறது. ரயில் பயணங்களின் போது செய்தித்தாள் வார இதழ்களை தாண்டி ஏதேனும் தமிழ் புத்தகம் படித்தால் நம் சக பயணிகள் விசித்தரமாக பார்க்கிறார்கள். பெற்றோர்கள் கூட தம் குழந்தைகளின் அம்மா எனும் அழைப்பைவிட ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பில் ஆனந்தம் கொள்கிறார்கள்.என் நண்பர்கள் சிலர் கூட English medium என்று பெருமையாக கூறும் போது எனக்கு சிரிப்பு தான் இருக்கும். இன்றைய நவீன யுகம் தமிழில் உயர்கல்வி பயில்பவர்களை விநோதமாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.


"தமிழினம் உள்ளவரை தமிழ் வாழும் " என நம் சான்றோர்கள் சிலர் கூறுகிறார்கள். தமிழன் எனும் அடையாளத்தை இழந்துவிட்டு மொழி தெரியாமல் நம் சந்ததிகள் வெளிநாட்டிலும் நம் நாட்டிலும் வாழும் போது மொழி எப்படி நிலைக்கும். இன்று வாழும் பல இனங்கள் தங்கள் மொழியை இழந்து நிற்கின்றன.ஆக தமிழினம் முழுதும் அழியும் வரை தமிழ் வாழும் என கூறும் அளவுக்கு நமக்கு மொழிப்பற்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தற்போதைய நம் கல்விமுறை மொழியை மொழியாக நம்மை படிக்க விடுவதில்லை. ஒரு பாடமாக மட்டுமே பார்க்க படுகிறது . இவ்வாறு பாடமாக படிக்கப்படும் போது சுவை ,தனித்தன்மை ,சாராம்சம் போன்ற அடிப்படை தன்மைகள் எடுத்து கொள்ளப்படமாட்டா. இதனால் மொழியின் மீது ஒரு காதலோ பற்றோ ஏற்படாது. தமிழுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை .நவீன இலக்கியங்கள் செய்தலும் மாநாடுகள் சொற்பொழிவுகள் நடத்துவதும் இலக்கியவாதிகளை ஊக்கபடுதுவது மட்டும் போதாது .
குழந்தைகளிடம் தமிழின் மீதான ஆர்வத்தை ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் தமிழை மொழியாக கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி ஆய்வகம் (Language lab ) அமைத்து மொழித்திறனை ஊக்குவிக்கும் விதமாக கவிதை ,கதை கட்டுரை மற்றும் வார்த்தை விளையாட்டுகள் கற்பிக்க வேண்டும். தமிழை ஏட்டுசுரைக்காயாக உண்ணாமல் அதன் சுவையுனர்ந்து உன்ன வைக்க வேண்டும். மாணாக்கர்களிடம் நடத்தப்படும் இம்மாதிரியான போட்டிகள் மற்றும் தேர்வுகள் அவர்களில் ஆர்வத்தை அதிகரிப்பதோடு மொழியில் அவர்களின் சுயசிந்தனையை வளர்க்க உதவும். இதன்மூலம் மாணாக்கர்களிடம் தமிழின் மீது அதீத ஆர்வம் ஈடுபாடு போன்றவை ஏற்படும்.மேலும் தமிழ் பாட வேளைகளில் நல்ல தமிழ் உரையாடலை உறுதி செய்யலாம்.




இன்றைய நிலையில் தமிழ் முன்னேற்றம் என்பது பிற மொழி கலவாமல் செந்தமிழ் பேசுவது என்பது அல்ல.அது மிக கடினம் .( இன்றைய நவீன சூழல் மற்றும் நம் தமிழறிவு இவற்றை கொண்டு பார்க்கும் போது இது மிக மிக கடினம் ).செந்தமிழ் பேசினால் தான் மொழி நிலைக்கும் என்பதில்லை. இங்கு முன்னேற்றம் என்பது தமிழ்பற்றை ,ஈடுபாட்டை மட்டுமே குறிக்கும் . இவ்வாறு குழந்தைகளிடம் விதைக்கப்படும் தமிழார்வம் வளர்ந்து மரமாகி தமிழ் ஆண்டாண்டு காலங்கள் நிலைத்திருக்க உதவும்
பி.கு :
இந்த பதிவு இன்றைய நிலையை அப்படியே சொல்லவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே ஒழிய யாரையும் குற்றம் சாட்டவோ குறை கூறவோ எழுதப்படவில்லை .அவ்வாறு நீங்கள் எண்ணினால் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்

பாதை நீளும்

நம் பயணங்களும் தொடரும்

நன்றி வணக்கம்


அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

No comments:

Post a Comment