October 08, 2013

சேரமான் காதலி - புத்தகம் பற்றிய பேச்சு

சேரமான் காதலி - புத்தகம் பற்றிய பேச்சு

கவிஞர். கண்ணதாசன்  எழுதி சாஹித்ய அகாடமி  விருது பெற்ற  சேரமான் காதலி என்ற  சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எனக்கு சேரமான் காதலி நினைவுக்கு வந்தது. கவிஞரின் படைப்புகளில் சமய கருத்துகள் மிகுந்து இருக்கும் என்று எண்ணியே படிக்க அமர்ந்தேன்
 
மெக்காவிற்கு அருகில் ஜாபர் எனும் ஊரில் உள்ள கல்லறையில் சேர அரசர் அப்துல் ரகிமான் சமேரின் அடக்கம் என்று கூறபட்டிருக்கிறது . சேர மன்னர் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் ? எவ்வாறு ஜாபர் வரை சென்றார் ? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தருபவள் சேரமான் காதலி
இனி கதைக்கு வருவோம்

சேர மன்னர் இரண்டாம் சேரமான் பெருமாள் முடிதுறந்து வைணவ துறவியாகிறார். அவர் தனக்கு பின்  தன் மகன் மார்த்தாண்டனை அரசனாக முடிசூட்ட எண்ணுகிறார். அரசருக்கு நிகரான அதிகாரம் படைத்த நம்பூதிரிகள் சபையின் தலைவர் நாராயண நம்பூதிரியும் இதையே  விரும்புகிறார். ஆனால் இரண்டாம் சேரமானின் மைத்துனர் மகனான பாஸ்கர ரவிவர்மன் தான்  அரசனாக எண்ணுகிறான் (அவர்தான் இதன் கதாநாயகர் ). மிகசிறந்த ராஜதந்திரியான அவர் பாண்டிய, கொங்கு நாட்டு மன்னர்களையும் சேர நாட்டில் உள்ள பிற மதத்தவரையும் தூண்டிவிட்டு மார்தாண்டனுக்கு எதிராக கலகம் செய்கிறாr. முடிவில் ரவிவர்மன் ஆட்சியை கைப்பற்ற மார்த்தாண்டன் தன்  மனைவி மெல்லிலங்கோதையுடன் காட்டுக்குள் தஞ்சம் அடைகிறான். சிறந்த மதிநுட்பவாதியான  நாராயண நம்பூதிரியால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இந்த இக்கட்டில் துறவியான மன்னர் இரண்டாம் சேரமான் (துறவியான பின்பு அவர் குலசேகர ஆழ்வார் என்று அழைக்கப்பட்டார் ) திருகன்னபுரத்தில் உயிர் விட நேரும் பொது அங்கு அனைவரும்
தற்செயலாக வந்துவிடுகிறார்கள். இங்கு ரவிதாசன் மனம் மாறுகிறார். சோழ மன்னன் விக்ரமன் சமரசம் செய்து  வஞ்சியை தலைநகராக கொண்ட சேர நாட்டை ரவிதாசனும் திருவிதாங்கூரை தலைநகராக கொண்ட வேணாடு பகுதியை மார்தன்டனும் அரசாள்வதாக முடிவாகிறது. ரவிதாசன் மூன்றாம் சேரமான் என்ற பட்டத்துடன் அரியணை ஏற இப்போது கதையின் இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது .



ரவிதாசன் பத்மாவதி என்ற பெண்ணை  விருப்பமிண்றி  மணந்திருந்தாலும் யூஜியானா என்ற யூத அழகியை தளபதியாக இருக்கும் போது இருந்தே காதலிக்கிறான். மன்னரான பின்பு அவளுக்கு தனி அரண்மனை அமைத்து தருகிறான். அவள் கருவுறும் சமயம் யூத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை சேர சாம்ராஜ்யத்தை ஆள  கூடாது என்றென்னும்  நம்பூதிரி  ஒரு அழகான நாடகத்தை நடத்துகிறார். விளைவு , அதை நம்பி யூஜியானாவை தனியே பெத்தலகேமிட்கு அனுப்பி விட்டுகிறார் . பிறகு பொய் என்று அறிந்து வருந்துகிறார்.


சில வருடங்களுக்கு பிறகு சலீமா என்ற அரேபியா அழகி நகரில் நுழைகிறாள். பட்டத்து யானையின் தாக்குதலில் இருந்தும் கடற்புயலில் இருந்தும் மூன்றாம் சேரமான் அவளை காப்பாற்ற காலத்தின் விசித்திரத்தில் இருவரும் காதல் புரிகிறார்கள் மீண்டும்  அதை நம்பூதிரி எதிர்க்க இம்முறை மன்னர் உறுதியாக இருக்கிறார். சலீமாவை சிறைசெய்தும்  பின் கொல்லவும் முயல்கிறார்கள். அவளை மீட்கும் அரசருக்கு அதிர்ச்சியாக பெதலகேமில் இருந்து யூஜியானா குழந்தையுடன் வர இருவரையும் சமாதானம் செய்து அரசிகளாக்க எண்ணுகிறார் மன்னர். இதனால் வெகுண்ட நம்பூதிரி பாண்டிய கொங்கு மற்றும் வேணாட்டு மன்னர்களை படையெடுக்க சொல்லி தூண்டுகிறார். தன் படை நபூதிரியின் கட்டுப்பாட்டில் இருக்க நிரயுதபானியாகிறார் மன்னர்.இந்த சூழ்நிலையில் வஞ்சகர்களால்  யூஜியானா கொல்லப்பட தன் நாட்டை 12 பாகங்களாக பிரித்து தன் உற்றார் உறவினர் அனைவருக்கும் அளித்து விட்டு  இரவோடு இரவாக மெக்காவுக்கு பயணமாகிறார். முகமதியராக மதம் மாறி  அங்கேயே இறக்கிறார்.

கதையின் முதல் பாகத்தில் ராஜதந்திரம் என்ற பெயரில் நம்மை  வெறுக்க வைக்கும் ரவிவர்மன் இரண்டாம் பாதியில் சிறந்த மன்னன் மூன்றாம் சேரமானாக வியக்க வைக்கிறார்.பின்பு அவரின் முடிவு என்னை கண்ணீர் விட வைத்துவிட்டது. அணைத்து பொறுப்புகளையும் நம்பூதிரி திறமையாக நிறைவேற்றுகிறார். கடைசி வரை அவர் செய்தது சரியே என்று நம்மை ஏற்றுகொள்ள  வைக்கிறார் . அவரின் பேச்சை மீறாத மார்த்தாண்டன் மிகசிறந்த மன்னனாகவும் பக்திமானாகவும் விளங்குகிறார். அழகு யூத பதுமையாக  யூஜியானா ஏக்கம், காதல் , சோகம் என ஒவ்வொன்றையும் அற்புதமாக பிரதிபலிக்கிறார்
புத்திசாலிதனமும்  குறும்பும்  நிறைந்த பெண்ணாக சலீமா வருகிறார். கணவரால் ஏற்று கொள்ள முடியாத மனைவியாக பத்மாவதி மூன்றாம் சேரமானின் 5 சகோதரிகள் மெல்லிலங்கோதை இராஜசேகர சுவாமி வேடமிடும்  பாண்டியன் சீர்வல்லபன் , சலீமாவின் தோழி ஜெபுன்னிசா  என பல கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்கின்றன.

பல்வேறு மதத்தினரும் கலந்து வாழும் வஞ்சி நகர் பற்றிய கவிஞரின் விமர்சனம் அருமை பல்வேறு சமய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் யார் மனமும் புன்படாதவாறு கையாண்டிருக்கிறார் கண்ணதாசன். குலசேகர ஆழ்வார் ஒவ்வொரு ஊரிலும் செய்யும் சமய உபதேசங்கள் படிக்க மிகவும் நன்றாக உள்ளது. சிவக்குகல் மூக்குத்தியின்  அருமை, ஆய் இன மலைவாழ்  மக்களின் வாழ்க்கை என எல்லா பக்கத்திலும் இன்பங்கள் புதைந்து உள்ளன.  கண்ணன்கோவில், பகவதியம்மன் ஆலயம் ,பத்மநாதசாமிகோவில் மற்றும் திருகன்னபுரம் என பல ஆலயங்கள்  வருகின்றன.

போர்கள் அதிகம் அற்ற  காதலும் சமயமும் பின்னிய ஒரு அழகான பதிவு. கதையில் பல முடிச்சுகள், விசித்திரங்கள் என கதையை விறுவிறுப்புடன் அனைவறும் ஏற்று கொள்ளும் விதத்தில் கொண்டு சென்றிருக்கிறார்  கவியரசர்.





பி.கு :
சேரமான் காதலி எனக்கு ஒருவிதமான இன்பத்தையும் , அமைதியையும் வழங்கினாள். இன்னும் சில வாரங்கள் இந்த தாக்கம் என்னுள்ளே உலவி கொண்டிருக்கும்

காதலின்  மீதான சமயத்தின் தாக்கங்கள் எனக்கு இன்றைய சூழ்நிலையை நினைவூட்டின 


[ ஒவ்வொரு முறையும் எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை குறைத்துக்கொள்ள முயல்கிறேன். சில சமயம் சில பிழைகள் தவிர்க்க முடியவில்லை கொஞ்சம் அதை மன்னித்துவிடுங்கள்.]

No comments:

Post a Comment