Showing posts with label Non-Novels. Show all posts
Showing posts with label Non-Novels. Show all posts

November 25, 2014

இது யாருடைய வகுப்பறை

சில காலம் முன்பு ஆயிஷா .இரா.நடராசன் அவர்களின் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.

அப்பொழுதே வாங்கியும் வந்து படிக்கவும் ஆரம்பித்து விட்டேன் ஆனால் அதை தொடர்ந்து படிக்க கூடிய சூழல் வரவில்லை.


இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அதை பற்றிய பேச்சுதான் இது.



ஆசிரியரான ஆயிஷா.இரா .நடராசன் அவர்கள் கல்வி மற்றும் கற்றல் குறித்து ஆய்வு செய்து எழுதிய ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல்



1. ஆசிரியர்களே தேவைஇல்லை.... என்றார் ரூசோ !


ரூசோவின் இந்த கருத்துடன் ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரை மாணவப் பருவம் என்பதே தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புதான் என தொடர்கிறது.நம்முடைய பழமையான கல்வி முறைகளான குருகுலம் ,திண்ணைப்பள்ளி மற்றும் மதராசா பற்றி விரிவாக விளக்குகிறது . நமது பாரம்பரிய கல்வி முறைகளில் ஆசிரியர் -மாணவர் உறவு எப்படி இருந்தது என்பது பற்றியும் அலசுகிறது. மேற்கத்திய கல்வி சித்தாந்தங்கள் நம்மிடம் பரவியது பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிகிறது .

மத அடிப்படியிலான கல்வி முறையின் வரையறைகளையும் ,அது உண்டாகிய விளைவுகளையும், கிரேக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறை தோன்றிய வரலாற்றையும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைவு செய்கின்றன. மதம் சார்ந்த ஒரு கல்விமுறையில் மறுமலர்ச்சியை மார்டின் லூதர் கிங் மற்றும் பிரான்சிஸ் பெக்கான் ஆகியோர் கொண்டு வந்திருக்கின்றனர்

2.யாருடைய வகுப்பறை இது?

" பன்னிரண்டு வயது வரை ஒரு குழந்தை இயற்கையிலும் தன் வாழ் சூழலிலும் தனித்து விடப்பட வேண்டும் என்பதுதான் ரூசோவின் கல்விமுறை "
என ஆரம்பிக்கிறது இரண்டாவது கட்டுரை. கல்விக்கும் பள்ளிக்கும் இடையிலான வித்தியாசங்களை பேசுகிறது. கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்தும் சில கருத்துக்களை இந்த பக்கங்கள் முன் வைக்கின்றன

ஆங்கிலேயர் வருகையும் அதனால் நமது கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிய முடிகிறது. நமது இந்த கல்வி முறையை கொடுத்தவர் என அறியப்படும் மெக்காலே வருகையும் அவரது மெக்காலே குறிப்புகள் பற்றியும் மெக்காலேவின் கல்வி கொள்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறார் இரா நடராசன்.

" இந்திய மொழிகள் அனைத்தையும் தூக்கியெறியும் மெக்காலே அத்தகைய மொழிகளில் புத்தகம் என்று ஒன்று அச்சாகுமானால் அது பைபிளாக இருக்கும் என பிடிவாதமாக இருந்தார் "


நமது கல்விமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டாலும் இன்று நமக்கும் இங்கிலாந்தின் கல்விமுறைக்கும் உள்ள வேறுபாட்டுக்கு காரணமாக இருப்பவர் சார்லஸ் வுட் ஆவார்

. " நமக்கு தேவை சிந்திக்க தெரிந்த மேதைகள் அல்ல .நம் அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்கள் "
என்ற 'உயரிய' நோக்கத்தோடு கல்வி சீர்திருத்தங்களை செய்தவர் வுட்.


இந்த பரீட்சையை, கண்டுபிடிச்சது யாரு என நம்மை பலமுறை புலம்ப வைத்த பெருமை பெற்ற ஹன்டர் கமிசனை பற்றி அறிய முடிந்தது . காந்தியடிகள் முன்வைத்த 'கல்விக்கான இந்திய வடிவம் ' எனும் கொள்கைகள் பற்றியும் அது புறந்தள்ளப்பட்டது பற்றியும் அறிய முடிகிறது.


கோத்தாரி கமிசன் வகுப்பறைகளை தரம் பிரித்தது பற்றி அறிந்து கொள்ள முடிவதால் இந்த கமிசன் செயல்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவுகள் எளிதாக நம்மால் உணர முடிகிறது



3.அறிவியல் தெரியும்...... ராமலிங்கத்தை தெரியுமா ? :
இந்த பகுதி கல்வி உளவியல் பற்றி பேசுகிறது ? மாணவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தகூடிய காரணிகள் பற்றி விரிவாக அலசுகிறது . சிக்மன் பிராய்டு முதலிய உளவியல் வல்லுனர்களின் கல்வி சார்ந்த உளவியல் கருதுகோள்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குழந்தைப்பருவ ,பிள்ளைப்பருவ ,குமாரப்பருவதில் குழந்தைகள் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை உளவியல் ரீதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர் . மேலும் வகுப்பறை மற்றும் அதன் சூழல் பற்றிய கருத்துக்கள் இங்கு முன் வைக்கப்படுகின்றன


4.வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது.....
நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் கல்வி என்பது சலுகை அல்ல உரிமை என இந்த பகுதி ஆரம்பிக்கிறது . கற்றல் மற்றும் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் இங்கு நிறைகின்றன. கற்றலின் இரு கோட்பாடுகளான தூண்டல் (stimulus) துலங்கல் (response) மற்றும் அறிவுப் புலக் கோட்பாடு (Field theories) பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .

நமது வகுப்பறையில் அடிப்படியாக விளங்கும் விதிகளையும் அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்ட விதம் பற்றியும் இங்கு அறிகிறோம் அந்த விதிகளின் விளைவை இந்த கட்டுரையின் தலைப்பாக வைத்துவிட்டார் போலும்


5.உள்ளேன் டீச்சர்
தனது பிள்ளைகளின் கல்வி பற்றிய பெற்றோரின் அணுகுமறை எப்படி இருக்கிறது எனவும் இன்றைய நவீனமயமாதல், குழந்தைகளை பெற்றோர் எப்படி பார்கின்றனர் எனவும் பேசுகிறது இந்த கட்டுரை .

உலகளாவிய குழந்தைகள் உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அதே போல் நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்விச் சட்டம் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் இரா .நடராசன் அவர்கள் .


"நமது கட்டாய இலவச கல்விச் சட்டம் ஒரு குழந்தைக்கு ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை மட்டுமே பொருந்தும். இங்கு ஒருவர் 14 வயதிலேயே பெரியவர் ஆகிவிடுகிறார் "

தேசிய கலை திட்ட வடிவமைப்பு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் விளக்குகின்றன .


நமது கல்வி சீரமைப்பில் முதல் முறையாக யஷ்பால் குழு மட்டும்தான் கல்வியை குழந்தை பருவ அடிப்படைகளுக்கு ஏற்ற கல்வி என்ற பார்வையில் அணுகி இருந்திருக்கிறது (கல்விக்காக குழந்தைகள் என்றில்லாமல் குழந்தைகளுக்காக கல்வி என்ற ரீதியில் ) மேலும் இன்றைய செயல்வழி கற்றலை நமக்கு இந்த யஷ்பால் கமிட்டிதான் வழங்கியுள்ளதாம்




6.அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை :

ஆசிரியரின் செயல்திறனை எப்படி அளப்பது என்ற வினாவுடன் இப்பகுதி தொடங்குகிறது ஆசிரியர்களின் சிறப்பியல்புகள் பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளது . ஒரு பள்ளியின் செயல்திறன் மற்றும் அதனை தீர்மானிக்கும் காரணிகள் பற்றிய அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது

அடுத்த பகுதி மிக விறுவிறுப்பானது . உலக நாடுகளின் கல்வி முறை பற்றியது. அமெரிக்க கல்வி முறையில் இருந்த ஆரம்பிக்கும் இது அதன் குறைபாடுகள் குறித்து பேசுகிறது (இதை படித்தவுடன் நம்ம ஊரு பள்ளிக்கூடமே தேவலை போல இருந்தது ). உலகின் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு என அழைக்கப்படும் பின்லாந்து கல்வி முறை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது .

பிறகு தொழில் மற்றும் சேவை சார்ந்த கல்வியை கொண்ட கியூபா கல்வி முறை பற்றி அறிய முடிகிறது . ஆனால் கியூபாவிடம் இருந்து ஒரு நல்ல விசயத்தை கற்க நம்முடைய மேன்மை பொருந்திய சமூகம் இடம் தராதே ! பிறகு ஜப்பான் ,டென்மார்க் மற்றும் சிங்கப்பூரில் கல்வி முறை கண்ட மாற்றங்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

சர்வதேச மாணவர் தர ஆய்வு நிகழ்வில் பள்ளியின் செயல்திறன் சராசரி(Efficiency) கணக்கிடபடுகிறது. இதில் பின்லாந்து 0.86 to 0.98 பெற்று முதலிடத்தில் உள்ளது தமிழகத்தின் செயல்திறன் சராசரி 0.02 - 0.96 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது . சிறந்த கல்விமுறை கொண்ட நாடுகளின் தரவரிசையில் நாம் 96 வது இடத்திலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ள பள்ளி எனும் ஆய்வில் 116வது இடத்திலும் இருக்கிறோம்

7. வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெரிந்தவர்கள்......
இந்த பகுதி நமது கல்வி முறை விவசாயத்தை சொல்லி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறது. பள்ளிகளில் குழந்தைகளின் விதிமீறல்கள் ,அவற்றின் காரணங்கள் மற்றும் அதற்கான அணுகுமுறை பற்றி இந்த பகுதி விளக்குகிறது நடத்தையியல் சார்ந்த ஆட்லரின் பார்வை மற்றும் ஆன்னா பிராய்ட்டின் நடத்தை வேறுபாடுகள் குறித்த சித்தாந்தங்களை அறிய முடிகிறது.

ஆசிரியர்- மாணவர் உறவுமுறை குறித்த உலக கல்வியாளர்கள் பலரின் கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . பிறகு ஒரு ஆசிரியரின் பணிகள் மற்றும் கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன




எனது பார்வை
:


என்னை பொருத்தமட்டில் எனது ஆசிரிய பெருமக்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த மிக பெரிய பரிசு புத்தகமாக இதை கருதுகிறேன். (இதுவரை ஆசிரியப் பெருமக்களுக்கு என்ன நினைவு பரிசு வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது )



நம்முடைய இன்றைய செயல்வழிகற்றல் ஆரோக்கியமான மாற்றங்களை செய்திருக்கிறது . இது கற்றல் செயல்பாட்டில் ஒரு விருப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இப்பொழுது இங்கு பாட திட்டங்களைவிட வகுப்பறைகள்தான் மாற்றம் பெற வேண்டும் . வகுப்பறைகள் மாற்றம் பெற வேண்டுமென்றால் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வரவேண்டும் என்பது அர்த்தமல்ல . வகுப்பறை சூழல்தான் மாற்றம் அடைய வேண்டும் . இந்த நூலில் வரும் ஜனநாயக வகுப்பறை மலர வேண்டும்.


இந்த நூலை நாம் ஏன் படிக்க வேண்டும் ? யார் யார் படிக்க வேண்டும் ?
நாம் இன்று படித்தவர்களாக இயங்கி கொண்டிருக்கிறோம் . நாம் கற்ற கல்வி உருவான விதம் மற்றும் அது கண்ட மாற்றங்கள் பற்றி நாம் அறிதல் அவசியம் . மேலும் உலக அரங்கில் உள்ள கல்விமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் ..

யாரெல்லாம் படிக்க வேண்டும்?

குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ள மாணவர்கள் இதை படிக்க வேண்டும் . அது கொஞ்சம் கடினம் (வாக்கிய மற்றும் வார்த்தை அமைப்புகள் கொஞ்சம் கடினம் என்பதால் மாணவர்கள் படிப்பது கடினம் )

ஒரு பெற்றோராக குழந்தையின் படிப்பை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். ஒரு குழந்தையின் குடும்ப மன நிலை அதன் கற்றல் செயல்பாடுகளில் தாக்கங்கள் ஏற்படுத்துவதால் பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்

இன்றைய சூழலில் ஒரு ஆசிரியரின் Role பல்வேறு நிலைகளை கொண்டுள்ளதால் ஆசிரியர்களும் படிக்க வேண்டும். ஆசிரியர் -மாணவர் உறவுமுறைகள் குறித்து பல தகவல்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்தரும்

சாதாரண குடிமக்களாக நாமும் நம்முடைய கல்வி முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தானே அதனால் நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்





பி.கு : அனைவரும் படித்து பாருங்கள்

December 25, 2013

பிரபாகரன் வாழ்வும் மரணமும் -புத்தகம் பற்றிய பேச்சு





அண்மையில் ஈழம் தொடர்பாக ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுமாறு நம் நண்பர்களிடம் கேட்டு இருந்தேன். அதற்க்கு முருகன் அவர்கள் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.


கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தம் மக்களின் நலனுக்காக போராடி வந்த பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை அவரிடம் நெருங்கிய மக்களுக்கு மட்டுமே தெரியும் .ஆனால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை . எனவே இந்த நூல் ஈழம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் மற்றும் சில மூத்த போராளிகள் சொன்ன தகவல்களில் இருந்து எழுதப்பட்டுள்ளது என இதன் ஆசிரியர் ராகவன் முன்னுரையிலேயே சொல்லி விட்டார் .


பிரபாகரனின் இளம் பிராயத்திலிருந்து இந்நூல் தொடங்குகிறது. S/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை யாக இருந்த அவர் விடுதலை புலிகளின் தலைவராக மாறிய வரலாற்றை கால நிகழ்ச்சிகளின் ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறார் ராகவன்.

தமிழரசு கட்சியின் அறப்போராட்ட வழியில் நம்பிக்கை இழந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து இளம் வயதில் ஆல்பர்ட் துரையப்பாவை சுற்று கொன்றதில் ஆரம்பிக்கிறது இவரின் பயணம். பின் தமிழகத்துக்கு தப்பி வந்தது,புலிகள் அமைப்பை ஆரம்பித்தது ,ஆயுத தேடலுக்காக வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டது என அடுத்தடுத்த அத்தியாயங்கள் நிறைகின்றன.ஆளில்லா விமானத்தை வெடிக்க செய்து அதன் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க செய்தார்.

இலங்கையில் பல்வேறு போராட்ட குழுக்கள் இருந்தாலும் அவர்களுடன் பிரபாகரன் எவ்வாறு வேறு பட்டார் என்பதை உணர முடிந்தது. மற்ற குழுக்கள் தங்கள் விடுதலையில் இந்தியாவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என நம்பிய காலத்தில் அவர் மட்டும் இந்தியாவின் உதவியை நம்பாமல் இருந்திருக்கிறார்.

எதிரிகளால் ஏற்பட்ட காயங்களை விட நம்பிக்கை துரோகம் செய்தவர்களால் ஏற்பட்ட காயம் அவரை எங்கனம் பாதித்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தங்களின் உறைவிடத்தை தீர்மானித்தது ,ஆயுத கொள்முதல் முறை ,மற்ற நாட்டு போராட்ட முறையை பின்பற்றாமல் தனக்கு தெரிந்ததை தன் குழுவுக்கு போதித்து அவர்களை நடத்தி சென்றது போன்றவற்றில் இருந்து பிரபாகரனின் தெளிந்த அறிவும் கூறிய சிந்தனையும் புலப்படும் .

இதற்க்கு இடையில் திருப்போரூரில் நடைபெற்ற பிரபாகரன் - மதிவதனி திருமணம் ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் என தொடர்கிறது. ஆயுத கொள்முதல் மற்றும் வர்த்தகத்துக்காக கப்பல் கம்பெனி நிறுவியது முதல் தனி போர்விமானங்கள் பயன்படுத்தியது வரை ஒரு சாதாரண தீவிரவாத கும்பலால் என்னவே முடியாத பலவற்றை அவர் சாதித்து காட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் ஆயுத கொள்முதலுக்கு குமரன் பத்மநாபன் ,உளவு துறைக்கு பொட்டு  அம்மான்,அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் யோசனைகளுக்கு ஆண்டன் பாலசிங்கம் என பல போராளிகளை பற்றியும் அறிய முடிந்தது

மேலும் மாத்தையா ,கருணா ,உமா மகேஸ்வரன் போன்றவர்களின் துரோகங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது.

இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு பற்றியும் அதனால் கண்ட விளைவுகள் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும் .இந்திரா காந்தி காலத்தில் இந்திய உளவு துறை இலங்கை போராளிகளுக்கு பயிற்சி அளித்தது ,பின் ராஜீவ் காந்தி அமைதி நடவடிக்கையாக போர் நிறுத்தம் கொண்டுவந்தது ,இந்திய அமைதி படையை அங்கு அனுப்பியது போன்ற அரசியல் நிகழ்வுகளை அறிய முடிந்தது .

இந்திய அமைதி படை அங்கு நடத்திய "அமைதி " நடவடிக்கைகள் ,போர்நிறுத்த காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட துரோக செயல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.


பின்பு இந்தியவின் தலையீடால் இலங்கையில் இருந்த மற்ற போராளி குழுக்கள் சிதறியது ,அவர்களை விடுதலை புலிகள் கொன்றது ,ராஜீவ் காந்தி படுகொலை என அடுத்த கருப்பு பக்கங்கள் வருகின்றன.


ஒரு தீவிரவாத(அவர்கள் பாசையில்) குழு ஒரு சுதந்திர நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுகள் மேலாக போராடிய வரலாறு இன்னொரு முறை அரங்கேறுவது கடினம். பல கிலோமீட்டர் நிலபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு சிறு எல்லைக்குள் வந்து ஒவ்வொரு விழுதாக வீழ்ந்து கடைசியில் ஆலமரமாய் பிரபாகரன் சரிந்த காரணங்களை விளக்க ராகவன் முற்பட்டுள்ளார்.

பிரபாகரன் மீது உலக சமுதாயம் கூறும் குற்ற சாட்டுகளையும் அதற்கான விளக்கங்களையும் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.


இறுதியில் இனி என்ன செய்யலாம் என கூறி இருப்பது சிறப்பு

ஆனால் முக்கிய போராளியாக கருதப்பட்ட தமிழ்செல்வன் பற்றியோ நார்வே தூதுக்குழு பற்றியோ எதுவும் சொல்லாதது ஆச்சர்யம் .


ஒரு புத்தகம் அடுத்த புத்தகத்துக்கான தேடலை வழங்குகிறது .அந்த வரிசையில் இது  நிறைய தேடல்களை வழங்கிவிட்டது

October 18, 2013

வாவ் 2000- புத்தகம் பற்றிய பேச்சு

வாவ் 2000- புத்தகம் பற்றிய பேச்சு

வேலஸ் என்பவர் எழுதிய வாவ் 2000 எனும் புத்தகம் படித்தேன் .1900-2000 க்கு இடையிலான நூறு ஆண்டுகளில் உலகம் சந்தித்த அற்புத நிகழ்வுகள் அசாதாரண கண்டுபிடிப்புகள் பற்றிய அற்புதமான பதிவு . அறிவியல் முன்னேற்றத்தில் மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் பல அறிய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரங்கேறின. அவை மட்டுமா? இரு பெரும் உலகப்போர்கள் (அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் நீங்கலாக ),புரட்சிகள் ,படுகொலைகள் இயற்கை சீற்றங்கள் என பல இன்னல்களையும் சந்தித்தது அவற்றை பற்றிய சுவாரசியமான இரத்தின சுருக்கமான பதிவு இது.


ஜார்ஜ் ஸ்டீவென்சன் கண்டறிந்த ரயில் என்ஜினில் இருந்து க்ளோனிங் வரையிலான கண்டுபிடிப்புகளையும் அது கண்டறியப்பட்ட கதைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் மிக அழகாக சொல்கிறது


பிடல் காஸ்ட்ரோ ,சேகுவேரா ,ஹோசிமின் (வியட்நாம்),மா சே துங் ,டெங் ஜியோ பிங் (china) லீ கவான் யூ (சிங்கபூர்) போன்ற உலகின் மிக சிறந்த தலைவர்களையும் ஹிட்லர் ,இடிஅமின் ,போல்பாட் (கம்போடியா) போன்ற சர்வாதிகார கொ(க)லைனர்களையும் இந்த நூற்றாண்டு கொண்டது.

இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்களான மகாத்மா காந்தி மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற சிறந்தவர்களை பெற்றதன் மூலம் இந்நூற்றாண்டு பெருமை கொண்டது

மேலும் சிறந்த கலைனர்கலான டாவின்சி ,எஞ்சேலோ ,சார்லி சாப்ளின்,பெர்னாட்ஷா என பலரை பற்றி அறிய முடிகிறது.ஆகா மொத்தம் 19ம் நூற்றாண்டில் நடந்த கலை ,அறிவியல் ,மருத்துவம் ,போர்  என பல நிகழ்வுகளையும் அதனால் உலகம் அடைந்த மாற்றங்களையும் அறிய முடிகிறது. பல அறிய புகைப்படங்கள் (தீக்குளிப்பு சத்தியாகிரகம் ,நேப்பாம் குண்டு ,போபால் சம்பவம் ) காணும் வாய்ப்பும் கிடைத்தது.


போட்டி தேர்வுகளுக்கு தயாரகும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்

இதில் உள்ள சில ஆச்சர்யங்கள்


ஆகாய விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்பே பாராசூட்டை கற்பனை செய்த ஓவிய விஞ்ஞானி

வாழ்வின் கடைசி காலத்தில் பூனைகளை பார்த்து பயந்த மாவீரன்

நெஞ்சில் காதை  வைத்து பெண்களின் இதயத்துடிப்பை கேட்க கூச்சப்பட்டு  ச்டேதச்கோபே கண்டுபிடித்த டாக்டர்

அமைச்சர் பதவியை தூக்கி எரிந்து விட்டு மீண்டும் புரட்சியாளர் ஆன வீரர்

மலையடிவாரத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தும் மகாராஜா

என ஆச்சர்யங்கள் நீள்கின்றன .



வாவ் 2000
ஆசிரியர் : வேலஸ்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை : 160
பி.கு

இந்த புத்தகம் மூலம் ஹோசிமின் போன்ற போராளிகளை பற்றி அறிய முடிந்தது. உலக போர்களின் காரணங்களையும் அதில் சில குள்ளநரி நாடுகளின் தந்திரங்களையும் உணர முடிந்தது.சோவியத் யூனியன் உடைந்த காரணங்கள்,கம்முனிச நாடான சீனாவின் எழுச்சியையும் அறிய முடிந்தது


பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான என் தவறான கண்ணோட்டத்தை இப்புத்தகம் மாற்றியது

மனிதனும் மர்மங்களும் - புத்தகம் பற்றிய பேச்சு

மனிதனும் மர்மங்களும் - புத்தகம் பற்றிய பேச்சு

அண்மையில் திரு. மதன் அவர்கள் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகம் படித்தேன். மனிதனுக்க அப்பாற்பட்ட நிகழ்வுகளையும், மர்மங்களையும் தனக்கே உரித்தான பாணியில் சுவாரஷ்யமாக சொல்லி இருந்தார். இதுவரை ஊடகவியலாளர் , கேலி சித்திரதாரி (கார்டூனிஸ்ட் என்பதன் தமிழாக்கம் !!! தவறாக இருந்தால் மன்னிக்கவும்),விமர்சகர் என பல முகங்கள் கொண்ட அவரின் எழுத்தாளர் என்ற புதிய முகமும் நன்றாகவே உள்ளது.

புத்தகத்தின் முதல் பாதியை ஆவிகள் பற்றி சொல்லி இருக்கிறார். ஆவிகள் பற்றியும் அதனால் பாதிக்கபட்டவர்கள் பற்றியும் சொல்லி ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை கொண்டு வருகிறார். ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளையும் வித்தியாசமான சில ஆவிகளின் போக்கையும் சேகரித்து தந்திருப்பது சிறப்பு

ஆனாலும் அந்த லிப்ட் பயங்கரம் அப்பப்பா !!!!



பின் டெலிபதியை பற்றிய ஆச்சர்யங்கள் ஒவ்வொன்றாக விரிகின்றன. அதிலும் அந்த பற்றி மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

டெலிபதிக்கு பிறகு ,தொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளை  பார்க்கும் திறமை (),எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே சொல்லுதல் (),மற்றும் பார்வையாலேயே பொருள்களை நகர்த்துதல் என அடுத்தடுத்த பக்கங்கள் அதிர்சிகளாலும் வியப்பினாலும் நிறைகின்றன


இந்த உலகின் அதிசிய மனிதர்களாக கருதப்படும் சிறப்பு சக்திகள் கொண்ட டேனியல் டங்க்லஸ் ஹியும் ,யூரி கெல்லர் என பலபேரின் சாதனைகளையும் வாழ்க்கையையும் சொல்கிறார்.

பூமியில் ithuvarai பெய்துள்ள அதிசய மழைகள் (மீன்மழை ,தவளைமழை மற்றும் பல மழைகள் ) ,இருந்த இடத்திலேயே தானாக முழுக்க எரிந்து சாம்பலாகும் மனிதர்கள்,வானத்திலிருந்து வந்த சிலந்தி வலை மற்றும் மேகம் செய்த அதிசயம் என அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.



கடைசி அத்தியாயங்கள் பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்றுலக வாசிகள் பற்றிய தகவல்கள் மிக அருமை. வேற்றுலக மனிதர்கள் பார்த்ததாக சொல்லும் மக்களின் அனுபவங்கள் , வித்தியாசமான ஏலியன்ஸ் பற்றியும் சொல்லி விட்டு திரும்ப திரும்ப  ஏலியன்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே தென்படுவதாக கூர்வது வியப்பு எனவும் சொல்கிறார்


கடைசியில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இதை பற்றி ஆராய்ச்சி செய்தாலும் அதன் முடிவுகளை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று புரியவில்லை


பி.கு :
 அறிந்து விட்ட அதிசயங்கள் ,அவிழாத மர்ம முடிச்சுகள் என படித்து முடிக்கும் வரை விறுவிறுப்பு முழுவதும் இருந்தது

நானே அனைத்தையும் சொல்லி விட்டால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடும்

அணைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்