திரு.எண்டமூரி விரேந்தர்நாத் அவர்கள் எழுதிய தூக்கு தண்டனை எனும் நாவல்
படித்தேன்.ஒரு நாவலாக மட்டும் முடிந்து விடாமல் என்னுள் பல விவாதங்களை
ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவு, இருப்பினும்
பல்வேறு திருப்பங்களுடன் மிக அருமையான பயணத்தை நல்கியது.
தூக்கு தண்டனையின் அவசியம் குறித்து என்னை யோசிக்க வைத்துவிட்டது. தூக்கு
தண்டனையை ஒழிக்க போராடும் ஒருவன் ஒரு நாடகம் ஆடி உலகத்துக்கு தூக்கு
தண்டனையின் கொடுமையை புரிய வைக்க முயல்கிறான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவனை
பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர் தன் வஞ்சத்தை தீர்த்து
கொள்கிறார்.கடைசியில் அவன் எப்படி மீள்கிறான் என்பதே கதை.
தூக்கு தண்டனை தேவையில்லை என எழுப்பப்படும் கூக்குரல்கள் அதிகரித்து
வருகின்றன . ஒரு மனிதனின் உயிரை மற்றவர்கள் சட்டம் என்ற ஒன்றை கொண்டு
எடுப்பது தவறு என சிலர் கூறுகிறார்கள் . தண்டனை என்பது ஒருவன் செய்த
தவறுக்கு அளிக்கப்படும் பிராயசித்தம் ஆகும்.அப்படி இருக்க தூக்கு தண்டனை
என்ற பெயரில் அவனை திருந்த முயற்சிக்காமல் கொலை செய்வது எப்படி சரியாகும்
?? ஒரு கொலைகாரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் போது எனக்கும் அவனுக்கும்
என்ன வித்தியாசம் இருக்க முடியும்.
மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கை மிகவும்
கொடுமையானது.தன் முடிவு தெரிந்த ஒரு மனிதன் தினமும் செத்து செத்து உயிர்
வாழும் ஒரு நடைபிணமாக மட்டுமே உயிர் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் தன்
வாழ்நாளை எண்ணி கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது .ஒரு கதையின் முடிவு
உங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டால் உங்களால் ஆர்வமாக படிக்க முடியாது
அதே போல் தன் முடிவு தெரிந்த ஒருவனின் வாழ்நாள் நிச்சயம் வெறுமையாக எந்த
பிடிப்பும் இல்லாமல் நகரும்.எவ்வளவு பெரிய தண்டனை ??
இதனாலேயே பல்வேறு மரண தண்டனை கைதிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாக
சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டனர்.
சில அரிதான குற்றங்களுக்கு சில நாடுகளில் மரண தண்டனை விதிக்கிறார்கள்.
அந்த நாடுகளில் எல்லாம் குற்றங்கள் அதிகரிக்கவில்லையே என்ற கேள்வியும்
எழுகிறது.
பொதுவாக தண்டனைகள் குறித்த இரு கருத்துருக்கள் உள்ளன.முதல் கருத்து
தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும் என்பது .இதில் எனக்கு
உடன்பாடில்லை.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும்
குற்றங்களுக்கான சட்டங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில்
வலிமையானதாக இருந்தும் (கற்பழிப்பு குறித்து அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய
நாடுகளில் உள்ள சட்டங்களை கேட்டால் ஆச்சர்ய படுவீர்கள் .) நம் நாட்டில்
குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன. சீனாவில் மரண தண்டனையை
நிறைவேற்றும் முறை மிக கொடுமையானது .இருப்பினும் அந்த நாட்டிலும்
குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன(அவர்கள் சட்டம் தானே எட்டு
மாத கர்ப்பிணியை கட்டாய கருக்கலைப்பு செய்து கொல்ல சொன்னது )
இரண்டாவது கருத்து ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் மிக சிறந்த தண்டனை
அவனை மன்னிப்பது ஆகும் .அதாவது அவனை மன்னித்தால் அவன் மனசாட்சி அவனை
உறுத்தி அவனை நல்ல படியாக வாழ வைக்கும் என்பதாகும் .இதிலும் எனக்கு
உடன்பாடில்லை ஏனெனில் நாட்டில் வாழும் அனைவரும் மனசாட்சியுடன் தான்
வாழ்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது .காரணம் மனிதன் மட்டும் இங்கு
வாழ்வதில்லை மனிதன் என்னும் போர்வையில் ஈவு, இரக்கம் மற்றும்
மனித்தன்மையற்ற மிருகங்களும் வாழ தானே செய்கின்றன.அவர்களை கொல்வதில் என்ன
தவறு இருக்க முடியும்.ஒருவன் செய்யும் தவறுக்கு தண்டனையே இல்லையெனில் அவன்
மனம் குற்றம் செய்வதை நோக்கி சிந்திக்காதா ??
புத்தர் பிறந்த நாடு இது மனிதனை மன்னிக்கும் மனப்பான்மை மேலோங்க வேண்டும்
என சிலர் கூறுகின்றனர் .சில குற்றங்களை மறக்கவே முடியாதபோது மன்னிப்பது
எங்கனம் .(உதாரணம் நொய்டா நிதாரி படுகொலைகள் ).இன்றும் சிலவற்றை நினைக்கும்
போது இதயம் கனக்கிறது . சட்டத்தினால் நிரபராதி என சொல்லப்படும் அனைவரும்
அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிவிட முடியாது.சட்டத்தின் நெளிவு சுளிவுகளால்
தப்பித்த அவர்களை ஒன்றும் செய்ய முடியாத சட்டம் சிலருக்கு மட்டும் தூக்கு
தண்டனை வழங்குவதும் எப்படி சரியாகும்.
நம் சுதந்திர போராட்ட தியாகிகள் சிறையில் அனுபவித்த தண்டனையை விட மரண
தண்டனை கொடுமையானதா?. ஒரு திரைபடத்தில் சத்ய ராஜ் சொல்வார் மரணம் என்பது
மனித வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு அது எப்படி தண்டனையாகும் என்று ? . அது
போல் மரணத்தை தண்டனையாக வழங்குவது அந்த மாதிரி குற்றங்கள் மீண்டும்
நிகழாமல் பார்த்து கொள்ளும் என சொல்ல முடியமா?? .
இல்லை இந்த உலகில் மனிதனாக வாழ தகுதியே இல்லாத ஒருவனை கொல்லாமல் பாதுகாத்து வருவது சரிதானா??
என்ன இது மாத்தி மாத்தி பேசறான்னு பாக்கறீங்களா
எனக்கு ஒண்ணுமே புரியவில்லை
இவ்வளவு விவாதங்கள் என்னுள் நடந்த போதும் என் சிற்றறிவுக்கு எதுவும் எட்ட வில்லை .
உங்கள் கருத்தை சொல்லுங்கள் எனக்கு ஏதாவது தெளிவு ஏற்படுகிறதா என்று பார்ப்போம்
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
நன்றி வணக்கம்
இனி அந்த புத்தகம் பற்றிய தகவல்
தூக்கு தண்டனை
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு)
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
விலை :170
வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!
ஒரு சமூக வலைதளத்தின் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இருந்து
Murugan S:
தணிகைவேல் அவர்களின் கருத்தோடு உடன்படுகிறேன். தவறுக்கான காரணங்களை
கண்டுபிடுத்து களைய வேண்டும். அதுவே குற்றங்களை குறைக்கும். குற்றங்கள்
குறைந்தால் தீவிரமான தண்டனைகளும் குறைய வாய்ப்பிருக்கிறது.
மரண தண்டனை கூடாது என்ற கருத்தைத்தான் நானும் முதலில் கொண்டிருந்தேன்.
ஆனால் நிலைப்பாடு அவ்வப்போது மாறுகிறது. நாம் பள்ளிகளில் இருக்கும் போது
ஆசிரியர் குச்சி வைத்துக் கொண்டிருந்தார். அவர் மீதுள்ள மரியாதைக்காக
இல்லாமல் அந்த குச்சிக்கு பயந்து அடங்கி இருக்க பழகினோம். பின் இப்போது
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் Appraisal என்று வேறு வகையான
குச்சி வைத்திருக்கிறார்கள். நான், என் திறமை, எடுத்துக் கொண்ட வேலையை
முடிக்கும் தீவிரம் உடையவனா, பொறுப்புடையவனா என்றெல்லாம் பார்ப்பதை விட
கையில் ஒரு குச்சி வைத்துக்கொண்டால் தான் வேலை நடக்கும் என்று மெத்த
படித்தவர்களும் நினைக்கிறார்கள். இது சமுதாயத்திலும் பிரதிபலிக்கிறது.
அரசாங்கமும் மரண தண்டனை என்ற குச்சியை வைத்திருக்கிறது. இந்த குச்சி
சைக்காலஜி நமக்கு தேவை தான் படுகிறது போல. குச்சிக்காக இல்லை நான்
என்னளவிலேயே பொறுப்பானவனாக இருப்பேன் என்று கற்பூரம் அடித்து சத்தியம்
செய்தாலும் குச்சி வைத்திருப்பது தான் ஒருவித கூடுதல் பாதுகாப்பு என்று
அதிகாரத்தில் உள்ள எல்லோரும் நினைக்கிறார்கள்.
ஆனால் என் கேள்வியெல்லாம் மரண தண்டனையை நிறைவேற்ற நம் அரசாங்கத்திற்கு
தகுதியுள்ளதா என்பது தான். தாங்க முடியாத வறுமையிருந்தாலும் மற்றொரு பக்கம்
இமாலய ஊழல்கள். பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்தாலும்
அதற்க்கான காரணங்களை ஆராய்ந்து அதை களைய வழிவகை செய்யாமல் மேலும் சட்டத்தை
கடுமையாக்கிக் கொண்டிருக்கும் அதிமேதாவிகள். தரமான கல்வி, சுகாதாரம் என்று
எதுவும் அடிதட்டு மக்களுக்கு கிடைக்காமல் இருக்க காரணமாயிருப்பவர்கள்.
குண்டு துளைக்காத கவசத்தை வாங்க ஊழல் செய்து அதற்கு காவலர்களை பலி
கொடுத்து, பின் ஆதாரம் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக மொத்த
கவசங்களையும் பதுக்கியவர்கள் இவர்களெல்லாம் நடமாடுகிறார்கள். இவர்கள்
நடத்தும் அரசாங்கங்கள் தண்டனை தருவதுதான் நெஞ்சை நெருடுகிறது.
Ramasamy Indirajith:
கொலை என்பது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செய்யும் ஒரு தவறு.
மரணதண்டனை என்பது அறிவு பூர்வமான நிலையில் என்று
நினைத்து மனித சமூகத்திற்கு கொடுக்கப்படும் சட்டபூர்வமான கொலை.
கொலைக்கு கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது.
// மனிதன் என்னும் போர்வையில் ஈவு, இரக்கம் மற்றும் மனித்தன்மையற்ற மிருகங்களும் வாழ தானே செய்கின்றன//
இந்த வரிகளில் ஒரு தவறு உள்ளது .அதற்கு வருத்தங்கள்
மிருகங்களுக்கு ஈவு,இரக்கம் இல்லை என கூறுவது தவறு.தன் பசிக்காக வேட்டையாடும் மிருகங்களுக்கும் அணைத்து குணங்களும் உள்ளன .
குற்றம் புரிந்த ஒருவனை கொல்வதால் தனிப்பட்ட நபர்களுக்கோ சமுதாயத்துக்கோ
எந்த பயனும் ஏற்பட போவதில்லை. ஒரு வேளை பழி தீர்த்து கொண்டோம் எனும்
உணர்வு ஏற்படலாம் .பழிக்கு பழி என்று போனால் அதன் முடிவு சூனியமாகிவிடும் .
இவ்வாறு தூக்கு தண்டனையால் இனி வரும் காலங்களில் நடக்கும் எந்த
குற்றத்தையும் தடுக்க முடியாது மற்றும் சமூகத்துக்கு எந்த பயனும் தராது
எனில் தூக்கு தண்டனை தேவை இல்லைதானே
Seenivasan Balakrishnan :
தூக்கு தண்டனை தேவையா இல்லையா என்றால் தவறின் வீரியத்தை பொறுத்து
தான் எந்த ஒரு நாட்டிலும் தண்டனையை முடிவு செய்கிறார்கள், புத்தன் காந்தி
பிறந்த இந்தியா போன்ற நாட்டில் மரண தண்டனையை அவ்வளவு எளிதாக கொடுத்து
விடமாட்டார்கள் அதே நேரம் அதனை அத்தனை எளிதாக நிறைவேற்றி விடவும்
மாட்டார்கள்.
தூக்கு தண்டனை மிகுந்த ஆய்விற்கு பின்னும் மிகபெரிய விவாதங்களுக்குப்
பின்னுமே வழங்கபடுகின்றன. குண்டு வைத்து பல உயிர்களைக் கொன்னவனும்,
பாராளுமன்றத்தில் வேட்டு வைத்தவனும், மும்பை ரயில் நிலையத்தில் பட்டாசு
கொளுத்தியவனும் கூட மரண தண்டனையை நிராகரியுங்கள் என்று கருணை மனு
வழங்கலாம். நம் ஜனாதிபதி அதனை நிராகரிக்கவும் செய்யலாம்.
ஒரு உ.தா X என்ற நபர் ஒரு தீவிரவாத இயக்கத்தால் மூளை சலவை
செய்யப்பட்டவர், அவரை மன்னித்து வெளியே விட்டால் தவறை உணர்ந்து திருந்து
மனிதனோடு மனிதனாக வாழ்வான் என்று நினைப்பீர்களா, அவனை சமுகம் சமுதாயத்தில்
ஒரு மனிதனாக ஏற்றுக் கொள்ளுமா, பாதிக்கப்பட்டவன் அவனை பலிக்கு பலி வாங்க
மாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம். அவனை வளர்த்த தீவிரவாத இயக்கம் அவனை
நிம்மதியாக மனிதனோடு மனிதனாக வாழ விடுமா? மீண்டும் ஒரு சிறு பொறி போதும்
மீண்டும் அவனை மூளைச் சலவை செய்வதற்கு.
அரசாங்கமே அவனுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை கொடுத்தால் முதலில் கவனிக்க
வேண்டியது தேவையில்லாத செலவு, அதன் பின் அவன் தப்பிக்க முயலாமல் இருக்க
பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், அவன் சார்ந்த தீவிரவாத இயக்கம் அவனை
பகடையாக வைத்து நாடு முழுவதும் தீவிரவாதம் செய்யாது என்பதற்கு என்ன
நிச்சயம்.
கிழக்கு வெளியீடான அடியாள் என்னும் புத்தகம் படித்துப் பாருங்கள்,
புத்தக ஆசிரியர் ஜோதி நரசிம்மன் முன்னாள் ரவுடி, ரவுடியாக இருந்தது
பின்னால் திருந்தி வாழ நினைத்த போது அவரை இந்த சமூகமும் காவல் உலகமும்
எப்படி எல்லாம் ஆட்டிப் படைத்தது என்பதை அழகாக எழுதி இருப்பார் (இவர் மரண
தண்டனைக் கைதி எல்லாம் இல்லை, ஆனால் குற்றப் பின்னணி உள்ளவர், நான் இவரை
உ.தா காட்டி கூற விரும்புவது சாதாரண குற்றம் புரிந்தவனையே இந்த உலகம்
துரத்தி துரத்தி அடிக்கும் மரண தண்டனைக்கு தகுதியானவன் என்று தீர்ப்பான
ஒருவனை இந்த சமுகம் தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளும் என்று
நினைகிறீர்களா, இல்லை பல உயிர்களை பலி வாங்கியவனை எல்லாம் மறந்து ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்று நினைகிறீர்களா...?)
குற்றம் புரிந்தவனின் குற்றம், குற்றம் புரிந்தவனின் பின்னணி,
குற்றத்தால் பாதிக்கபட்டார்களின் நிலைமை என்ற அளவுகோள்களின் படி தூக்கு
அல்லது மரண தண்டனை அவசியம் வேண்டும் என்று கருதுகிறேன்...
அந்த கதை படிக்காமலே என்னுள் கேள்விகள் நிறைய இருக்கு..
ஒரு ப்றபல ஆங்கில நாளிதழிற்கு அடிக்கடி தலையங்கம் என்று ஏதோ எழுதி
அனுப்புவேன், அதில் மரண தண்டனை ஒழிப்பை பற்றியும் எழுதி இருக்கேன்.. (இது
வரையிலும் எனது தலையங்க முயற்சி வெற்றி பெற்றதில்லை, பிரசுரிக்க படவில்லை ,
அது வேற கதை )
அதில் இருந்து சில கருத்துக்கள், மொழி மாற்றப் பட்டு..
அவன் அடிச்சான், நான் திருப்பி அடிச்சேன் என்பது ஒரு மனிதனுடைய
"எமோஷனல் ரியாக்க்ஷன்", அவன் கொலை செய்தான் நானும் அவனை கொல்லுவேன்
என்பதும் அதே வகையே " , இதை செய்வதற்கு நீதி மன்றம் அரசாங்கம், விசாரணை
எல்லாம் எதற்கு ..
உணவிற்காக ஒரு உயிரை கொள்ளவதை கூட அவனாகரீகமாக பார்பவர்கள் , அடுத்தவன்
திருந்துவதற்கு வேறு ஒருவன் உயிரை எடுப்பது என்பது அவநாகரீகமாக
பார்பதில்லை..
பயமுறுத்துவது என்பது ரௌடிகளும் , கேங்க்ஸ்டர்ஸ் களும் செய்யும் வேலை.. அதை
அரசும் நீதிமன்றங்களும் செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை..
அனால் கொடும் குற்றம் செய்தவர்களை மன்னிக்க முடியாது, மன்னித்து வெளியே
விட்டாலும் மீண்டும் அந்த குற்றத்தை மீண்டும் செய்யாதிருபார்கள் என நம்ப
முடியாது.. அவர்களை ஆயுளுக்கும் வைத்து உணவு உடை அளித்துக்கொண்டு ,
பாதுகாப்பிற்காக காவல் மற்றும் இதர செலவு என்பது தேவையற்ற ஒன்று என்று
வாதடுவர்கள் பேச்சும் நிராகரிக்க முடியாது..
அவர்களுக்கேல்லாம் எனது பதிலின் தேடல் "காஸ்ட் ஒப் குவாலிட்டி" என்ற வார்த்தைகளில் அடங்கியுள்ளது..
பிரிவென்ட்டிவ் காஸ்ட் (Preventive cost) அதிகமாக "கரெக்டிவ் காஸ்ட்"
(corrective cost) குறையும் என்பது நாம் அறிந்ததே, அது போல்
"பிரிவென்ட்டிவ் காஸ்ட்" குறைய "கரக்டிவ் காஸ்ட்" (corrective cost)
அதிகரிக்கும் .. இவை இரண்டையும் முழுவதுமாக நீக்குவது இயலாத காரியம். இதே
விதிகள் தான் இங்கேயும் ,
நிறுவனமோ , பிராஜெக்டோ சரியாக இயங்க வேண்டும் என்றால்
மக்களுக்கு தேவையானவற்றை செய்வது , குற்ற செய்ய தூண்டும் காரணிகளை
களைவது , மற்றும் குற்றம் நடைபெறாமல் தவிர்க்க காவல்நிலையங்கள், காவலர்கள்
எல்லாம் விழிப்புடன் இருக்க வைப்பது ப்ரிவேண்டிவ் காஸ்ட்ஸ் , சிறைச்சாலை
மற்றும் அதன் செலவுகள் எல்லாம் கரெக்டிவ் காஸ்ட் ஆக மட்டுமே பார்க்க
வேண்டும்.. தவறு செய்தவர்கள் திருந்துவதற்காக செய்ய படும் செலவு..
அனால் அதை அடுத்தவர்களை பயமுருத்துவதர்காக என்று தவறாக நினைத்ததற்கு காரணமே
மரண தண்டனை.. இந்த நினைவு ஆட்சியாளர்கள், மக்கள் நீதிபதிகளுக்கு என்று ஒரு
மனதுடன் ஏற்படுகிறதோ அன்று மரண தண்டனை ஒழிக்க பட்டிருக்கும்..
அந்த நாள் வெகு தொலைவில் என்று நம்புவோம்..
காவல் நிலையங்கள் மற்றும் ஆட்சியாளர்கள், குற்றங்களை தவிர்க்க செய்யும்
அக்கறை மற்றும் செலவை உயர்த்தினால் நிச்சயம் சிறைசாளைகளிற்கு செய்யும்
செலவு குறையவே செய்யும்.. (if not able to reduce the cost of quality,
atleast keep it same and increase the preventive cost by reducing the
corrective cost...rule is simple and common for everything).
No comments:
Post a Comment